Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விசுவாசத்திலும் பிறர் பணியிலும்.... இளையோரை அழைக்கும் திருத்தந்தை
உலகின் பல்வேறு மறைமாவட்டங்களில் இளையோர் நாளைச் சிறப்பித்துவரும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், உலக அமைதிக்காக அனைவரும் செபிக்க உதவும் நோக்கத்தில் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த அனைவருக்கும் ஜெபமாலை ஒன்றை பரிசளிப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
குருத்தோலை ஞாயிறு திருப்பலியை புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்தோருக்கு நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில் மூவேளை செப உரையை வழங்கிய வேளையில், அங்கு குழுமியிருந்தோருக்கும், பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருக்கும், தன் வாழ்த்துக்களை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
இளையோர் குறித்த உலக ஆயர் பேரவையின் கனிகள், விசுவாசத்திலும் பிறர் பணியிலும், அனைத்து இளையோருக்கும் உதவட்டும் எனவும், இக்கருத்துக்கள், தன் அண்மை திருத்தூது அறிவுரை மடலான 'Christus Vivit' என்பதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடும் ஞாயிறன்று, வளாகத்தில் குழுமியிருந்த ஒவ்வொருவருவருக்கும் செபமாலையை பரிசளிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த செபமாலையின் மணிகள் எருசலேமில், ஒலிவ மரத்துண்டுகளால், கடந்த சனவரி உலக இளையோர் தினத்திற்கும், இஞ்ஞாயிறின் உலக இளையோர் நாளுக்கும் என தயாரிக்கப்பட்டது என்றார்.
இந்த செபமாலையை கொடுப்பதன் வழியாக, இளையோர் அனைவரும் உலக அமைதிக்காக, குறிப்பாக, புனித பூமி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்காக செபிக்க வேண்டும் என்ற தன் விண்ணப்பதை மீண்டும் புதுப்பிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
(வத்திக்கான் செய்தி)
Add new comment