லியோனார்தோ தா வின்சியின் புதிய தபால் தலை - வத்திக்கான்


இத்தாலியக் கலைஞர், லியோனார்தோ தா வின்சி - புதிய தபால் தலை (Vatican Media))

உலகப் புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞர், லியோனார்தோ தா வின்சி அவர்கள் மரணமடைந்ததன் 500 ஆம் ஆண்டையொட்டி, மே 2 ஆம் தேதி, இவ்வியாழனன்று, வத்திக்கான் தபால் துறை, ஒரு புதிய தபால் தலையை வெளியிடுகிறது. 

மேலும், இத்தாலியில் அமைந்துள்ள கலாச்சாரக் கருவூலங்களைக் காப்பதற்கென 1969 ஆம் ஆண்டு, மே மாதம் 3 ஆம் தேதி, உருவாக்கப்பட்ட Carabinieri Nucleus என்றழைக்கப்படும் காவல் துறை உருவாக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் மற்றொரு தபால் தலையும் வெளியிடப்படுகிறது.

1452 ஆம் ஆண்டு இத்தாலியின் பிளாரன்ஸ் நகருக்கு அருகே வின்சி எனுமிடத்தில் பிறந்த லியோனார்தோ அவர்கள், 1519 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி, தன் 67வது வயதில் காலமானார்.

ஓவியராக, சிற்பியாக, கட்டடக் கலைஞராக, அறிவியலாளராக, இசைக் கலைஞராக, பல்வேறு திறமைகளுடன் வாழ்ந்த லியோனார்தோ அவர்களை, 'ஓர் உலக மாமேதை' என்று வரலாற்று ஆசிரியர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

இயேசுவின் இறுதி இரவுணவு ஓவியம், மோனா லிசா ஓவியம், Salvator Mundi, அதாவது, உலகின் மீட்பர் என்ற இயேசுவின் ஓவியம், ஆகியவை, லியோனார்தோ அவர்கள் தீட்டிய ஓவியங்களில் உலகப் புகழ்பெற்றவையாக திகழ்பவை. 

(வத்திக்கான் செய்தி)

Add new comment

3 + 0 =