Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஜார்க்கண்ட் திருஅவை மீது கடுமையான தணிக்கை முறைகள். ஆயர் கூறுவதென்ன?.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏறத்தாழ 500 அரசு சாரா சமூக அமைப்புக்கள் மக்கள் பணிகளை ஆற்றி வருகின்றபோதிலும், 22 கிறிஸ்தவ அமைப்புக்கள் மீது மட்டும் அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்வது குறித்து ஏற்கனவே கிறிஸ்தவ தலைவர்களுடன் இணைந்து இராஞ்சி துணை ஆயர் Telesphore Bilung அவர்கள், ஜார்கண்ட் ஆளுனரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அரசு சாரா கிறிஸ்தவ உதவி அமைப்புக்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை ஆராயும் நோக்கத்தில் 88 அமைப்புக்கள் மீது கடுமையான தணிக்கை முறைகளை ஜாரக்கண்ட் அரசு செயல்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் கிறிஸ்தவ அமைப்புக்கள் மீது அரசு கடுமையான தணிக்கை முறைகளை புகுத்தி வருவது, எவ்வித சந்தேகமும் இன்றி திருஅவை மீதான தாக்குதலேயாகும் என்று கூறிய இராஞ்சி பேராயர் ஃபீலிக்ஸ் டோப்போ அவர்கள், அரசின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்பது நிரூபணமாகும் என தெரிவித்தார்.
ஏழைகள், குழந்தைகள், மற்றும், பெண்களுக்கு நலப்பணிகளை ஆற்றிவரும் திருஅவையின் நடவடிக்கைகளை ஆராய்வதில் கிறிஸ்தவ அமைப்புக்களுக்கு மட்டும் அரசு கடுமையான தணிக்கை முறைகளை புகுத்தியுள்ளபோதிலும், தணிக்கையின்போது அவை, அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார், பேராயர் டோப்போ.
Add new comment