Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எவ்வாறு நம்பிக்கையின் அடையாளங்களாகச் செயல்படுவது
இறைவாக்கு நம்பிக்கையை விதைப்பவர்கள் என்ற தலைப்பில், அனைத்துலக பெண் துறவு சபைகளின் தலைவர்கள் மேற்கொள்ளும் 21வது நிறையமர்வுக் கூட்டம், வரும் வாரத்தில் உரோம் நகரில் இடம்பெறுகிறது.
மே மாதம் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 80 நாடுகளிலிருந்து 850 பெண் துறவுசபைகளின் தலைவர்கள் பங்குபெறும் இக்கூட்டத்தில், பிரிவினைகளாலும், போராலும் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வுலகில் வாழும் பெண்கள், மற்றும், குழந்தைகளுக்கு எவ்வாறு நம்பிக்கையின் அடையாளங்களாகச் செயல்படுவது என்பது குறித்து விவாதிப்பர்.
கலாச்சாரங்களிடையே புரிந்து கொள்ளல், துறவு வாழ்வின் வருங்காலக் கண்ணோட்டம், படைப்போடு ஒன்றித்து வாழ்தல், மதங்களிடையே நல்லிணக்கம் போன்ற முக்கிய தலைப்புக்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பெண் துறவு சபைத் தலைவர்கள் மேற்கொள்ளும் இந்த 5 நாள் கூட்டத்தின் இறுதி நாளான மே மாதம் 10 ஆம் தேதியன்று, இவர்கள் திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் துறவு சபைகளின் கூட்டமைப்பில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1900 பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்கள், உலகின் 4 இலட்சத்து 50 ஆயிரம் பெண் துறவறத்தாரின் பிரதிநிதிகளாவர்.
(வத்திக்கான் செய்தி - 30 ஏப்ரல் 2019)
Add new comment