Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எந்த ஒரு மனிதரும், வாழ்வுக்குப் பொருத்தமில்லாதவர் அல்ல
எந்த ஒரு மனிதரும், வாழ்வோடு ஒத்துவராதவராய், வாழ்வுக்குப் பொருத்தமில்லாதவராய் ஒருபோதும் இருக்க முடியாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று, தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு குழுவினரிடம் கூறினார். பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையும், “Heart in a Drop” அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறத்தாழ 300 பிரதிநிதிகளை, மே 25, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு கொடையாகும், அது, ஒரு குடும்பத்தின் வரலாற்றை மாற்றக்கூடியது என்றும், இந்தக் குழந்தை, வரவேற்கப்பட்டு, அன்புகூரப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
மிக வலுவற்ற நிலைகளில் பிறக்கும் குழந்தைகள், வாழ்வோடு ஒத்துவராதவர் என, வீணாக்கும் கலாச்சாரத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருவில் வளரும் குழந்தை பரிசோதிக்கப்படுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்தும் எச்சரித்தார்.
ஒரு தாய் கருவுற்ற முதல் வாரங்களில், வளரும் குழந்தையைப் பாதித்துள்ள நோய்கள் மற்றும் உருவ அமைப்புகளின் பாதிப்பு பற்றிப் பரிசோதிக்கும் நவீன தொழில்நுட்பங்கள் பற்றிக் கூறியத் திருத்தந்தை, நோய் என்ற சந்தேகத்தின்பேரில் அடிக்கடி வெளியாகும் பரிசோதனை முடிவுகள், கர்ப்பகால அனுபவத்தை மாற்ற முடியும் என்றும், இவை, பெண்கள் மற்றும், தம்பதியரை மனச்சோர்வுக்கு இட்டுச் செல்கின்றன என்றும் கூறினார்.
சிறிய நோயாளிகள்
கருவில் வளரும் குழந்தைகள், சிறிய நோயாளிகள் என்றும், மருந்துகள் பற்றிய ஆய்வு மற்றும், அறுவை சிகிச்சையில் இடம்பெறும் முன்னேற்றங்கள், தானாக முன்வந்து கருக்கலைப்பு செய்வதற்கும், கடும் நோய்களோடு பிறக்கும் பல சிறார், பிறப்பின்போது அக்கறை காட்டப்படாமல் இருப்பதற்கும் காரணமாகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.
மருத்துவர்களின் பங்கு பற்றியும் உரையாற்றிய திருத்தந்தை, மருத்துவம் ஒரு மறைப்பணியாகும், ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் மாண்பை மதிக்கும் முறையில், தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கருக்கலைப்பு ஒருபோதும் தீர்வாகாது, மனித வாழ்வு புனிதமானது, எனவே, சில காரணங்களுக்காக, கருவில் வளரும் குழந்தையைப் பரிசோதிப்பது தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில், இது, குடும்பங்கள், தங்களின் வலுவிழந்த குழந்தைகளை வரவேற்று, அரவணைத்து, அன்புகூரும் அனுபவத்தைப் பறித்துக் கொள்கின்றது என்று கூறினார்.
“வாழ்வுக்கு ஆகட்டும்! – வாழ்வை அதன் வலுவின்மையில் சிறந்த கொடையாகப் பராமரிப்பது” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை இணைந்து நடத்திய “Heart in a Drop” அறக்கட்டளை, மிக வலுவற்ற நிலைகளில் பிறக்கும் குழந்தைகளை ஏற்பதற்காக உழைத்து வருகிறது.
(வத்திக்கான் செய்தி - மே 26, 2019)
Add new comment