இலத்தீன் அமெரிக்க புலம்பெயர்ந்தவர்களுக்கு திருத்தந்தை உதவி


மெக்சிகோவுக்கு வருகின்ற இலத்தீன் அமெரிக்க புலம்பெயர்ந்த மக்கள் மெக்சிகோவுக்கு வருகின்ற இலத்தீன் அமெரிக்க புலம்பெயர்ந்த மக்கள், (Vatican News)

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைவோம் என்ற நம்பிக்கையில், மெக்சிகோ நாட்டு எல்லையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இலத்தீன் அமெரிக்க நாடுகளின் புலம்பெயர்ந்த மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவசரகால உதவிகளை அனுப்பியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ நாட்டிற்கு இடையேயுள்ள எல்லையை மூடி வைத்திருப்பதால், அந்தப் பகுதியில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, மெக்சிகோ மறைமாவட்டங்களும், துறவற சபைகளும், அவசரகால உதவிகளைச் செய்து வருகின்றன.

அம்மக்களுக்குத் தேவையான குடியிருப்பு, உணவு மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளுக்கு, மெக்சிகோ தலத்திருஅவை விண்ணப்பித்திருக்கும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 16 மறைமாவட்டங்கள் மற்றும் துறவற சபைகளுக்கென 27 திட்டங்களுக்கு ஐந்து இலட்சம் டாலர்களை அனுப்பியுள்ளார்.

ஹொண்டூராஸ், எல் சால்வதோர், குவாத்தமாலா போன்ற நாடுகளிலிருந்து, வறுமை மற்றும் வன்முறைக்கு அஞ்சி, அண்மை மாதங்களில், கால்நடையாகவும், வாகனங்களிலும் நான்காயிரத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, ஆயிரக்கணக்கான மக்கள் மெக்சிகோ வந்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு எல்லை மூடப்பட்டிருப்பதால், அம்மக்கள் மெக்சிகோவிலே பரிதாபமாக உள்ளனர். 2018ம் ஆண்டில், ஏறக்குறைய 75 ஆயிரம் பேர், சிறிய வாகனங்களில் மெக்சிகோ வந்துள்ளனர். 

(வத்திக்கான் செய்தி)

 

Add new comment

1 + 0 =