Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அமேசான் மக்கள் மீது திருத்தந்தை கொண்டுள்ள அக்கறை
இத்திங்கள் காலை, பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி Kayapo பழங்குடியினத்தவரின் தலைவரையும், அவருடன் வந்த குழுவினரையும், சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். அமேசான் மழைக்காடுகளையும், அப்பகுதி பூர்வீக இனத்தவரின் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில் போராடிவரும் இத்தலைவர் Raoni Metuktire அவர்கள், திருத்தந்தையை சந்தித்து உரையாடியது முக்கியமானதாக கருதப்படுகின்றது.
இச்சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருப்பீடத்தின் இடைக்கால தகவல் தொடர்புத் தலைவர், அலசாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், அமேசான் மக்கள் மீதும், சுற்றுச்சூழல் மீதும், திருத்தந்தை கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாகவும், நம் பொதுவான இல்லமாகிய பூமியைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பை உணர்த்துவதாகவும் இச்சந்திப்பு அமைந்தது என்றார்.
‘அமேசான்: திருஅவைக்கும், ஒருங்கிணைந்த உயிர்ச் சூழலியலுக்கும் உரிய பாதைகள்' என்ற தலைப்பில் அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை இடம்பெறவிருக்கும் கத்தோலிக்க ஆயர் மாமன்றத்தின் சிறப்பு அவைக்குரிய தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும், திருத்தந்தைக்கும், Raoni அவர்களுக்கும் இடையே, இச்சந்திப்பு, இடம்பெற்றுள்ளது என்று கூறினார் ஜிசோத்தி.
(வத்திக்கான் செய்தி - மே 28, 2019)
Add new comment