Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வாழ்விக்கும் இறைவன்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
இன்றையவாசகங்கள் (18.12.2020) திருவருகைக் காலத்தின் மூன்றாம் வெள்ளி
I: எரேமியா23:5-8
II: தி.பா :72:1-2,12-13,18-19
III: மத்தேயு:1:18-24
வாழ்விக்கும் இறைவன்!
வாழ்வு என்பது ஏற்றங்களும்,மகிழ்ச்சியும், செல்வமும், நேர்மறையான நிகழ்வுகள் மட்டும் நிறைந்தது அல்ல. வீழ்ச்சிகளும், சோகங்களும்,தடுமாற்றங்களும், எதிர்மறை நிகழ்வுகளும் சேர்ந்து அடங்கியது தான். ஆனால் பல சமயங்களில் எதிர்மறையானவை நம் வாழ்வில் நிகழும் போது வாழ்வது அர்த்தமில்லை என்று நாம் புலம்புவதோடு கடவுளே இல்லை, கடவுள் என்னைக் கைவிட்டுவிட்டார் என்ற உணர்வுகள் தான் தலை தூக்கி நிற்கிறது.ஆனால் அத்தகைய எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெற நம்முடைய பலவீனங்களும்,நம்பிக்கையின்மையும் தான் காரணம், அவற்றை நாம் கடவுளின் துணையோடு வென்று விடலாம் என்பதை மறந்து விடுகிறோம்.
இன்றைய முதல்வாசகமும் நற்செய்தியும் வாழ்வளிக்கும் இறைவனை நினைவுபடுத்துகின்றன.முதல் வாசகத்தில் தாவீதின் அரசை கடவுள் எரேமியா இறைவாக்கினர் வழியாக நிலைநிறுத்துவதை நாம் வாசிக்கிறோம்.தன் தவறுக்காய் மனம் வருந்திய தாவீதை கடவுள் மன்னித்து அவருக்கு புதுவாழ்வு அளித்தார் .மேலும் உடன்படிக்கை வாழ்விலிருந்து விலகி வேற்று தெய்வங்களை வழிபட்டு, நாடுகடத்தப்பட்டு அகதிகளாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடிய வேளையில் அவர்களை தம் சொந்த நாட்டுக்கு கடவுள் அழைத்து வந்தார் என்பதையும் நாம் முதல் வாசகத்தில் வாசிக்கிறோம்.இதன் மூலம் கடவுள் வாழ்வளிப்பவர் என்பதை நம்மால் ஆழமாக உணர இயலுகிறது. ஆண்டவரே நமது நீதி என்ற வார்த்தைகள் கடவுளின் நீதியையும் இரக்கத்தையும் நமக்கு எடுத்தியம்புகின்றது.
நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் கடவுள் நல்லவர். இரக்கமுள்ளவர். மன்னிப்பவர். நம்முடைய பாவங்களாலும்,
பலவீனங்களாலும் நம்பிக்கை இழந்து நாம் வாழ்வின் கடைசி நிலைக்குப் போனாலும், இனி வாழ்ந்து பயனில்லை என எண்ணினாலும் மனம் நொந்து ஆண்டரரை நோக்கி அழைக்கும் போது அவர் நமக்குப் புதுவாழ்வு அளிப்பார்.
நாம் விரைவில் கொண்டாட இருக்கும் கிறிஸ்துவின் பிறப்பு விழா இதற்கு ஒரு சான்று. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்வை நாம் வாசிக்கிறோம். உலகிற்கெல்லாம் மீட்பளிக்கும் மெசியாவை கடவுளின் தூதர் மூலம் மரியாவுக்கு வாக்களித்த இறைவன் ,மீண்டுமாக. யோசேப்புக்கு அதை உறுதிப்படுத்தி தன் திருஉளத்திற்கு ஒத்துழைக்கத் தூண்டுகிறார். எனவே இன்றைய வாசகங்களைத் தியானிக்கும் வேளையில் நம் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்திருப்போமாயின் கடவுள் மீண்டுமாய் நமக்குப் புது வாழ்வு அருள்வார் என நம்பி அவருடைய மீட்கும் திருவுளத்திற்குப் பணிவோம். ஆண்டவரே நமக்கு நீதி.
இறைவேண்டல்
வாழ்வளிக்கும் இறைவா! நாங்கள் பாவங்களாலும் சோகங்களாலும் சோர்ந்த வேளைகளில் உம்மை நம்பி எங்களையே உம்மிடம் ஒப்படைத்து நீர் தரும் புதுவாழ்வை அனுபவிக்கும் அருள் தரும். ஆமென்.
Add new comment