Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சாதித்த பெண் கேட்டி பௌமேன்: கருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்த பின்னணியில் உள்ள பெண்
கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை எடுத்துள்ள அல்கோரிதத்தை உருவாக்க உதவியதற்காக 29 வயதான கேட்டி பௌமேன் உலக அளவில் புகழ்பெற்றுள்ளார்.
இந்த திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய புகைப்படத்தை எடுக்கும் கணினி செயல் நிரலியை உருவாக்குவதற்கு கேட்டி பௌமேன் தலைமை தாங்கினார்.
பூமியில் இருந்து 500 மில்லியன் டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவிலுள்ள தூசு மற்றும் வாயுவின் ஒளிவட்டத்தை காட்டுகின்ற வியக்கதக்க இந்த புகைப்படம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த முன்முயற்சியை அடைய முடியாது என்று முன்னர் நம்பப்பட்டதாக பௌமேன் கூறுகிறார்.
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் பட்டதாரி மாணவராக இருந்தபோது, பௌமேன் இந்த அல்கோரிதத்தை உருவாக்க தொடங்கினார்.
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் கணினி அறிவியல் பிரிவை சோந்த குழுவினர், செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், த ஹார்வேடு-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய ஹேஸ்டாக் வான் கண்காணிப்பு நிலையம் போன்ற பலரின் உதவியோடு இந்த பணித்திட்டத்தை பௌமேன் நடத்தினார்.
டாக்டர் பௌமேன் உருவாக்கிய அல்கோரிதத்தால், ஒன்றோடொன்று தொடர்பு ஏற்படுத்தப்பட்ட 'இவண்ட் ஹோரிசன் தொலைநோக்கி'யால் (இஹெச்டி) கருந்துளை புகைப்படமாகியுள்ளது.
இந்த புகழ்மிக்க புகைப்படம் வெளியான சில மணிநேரங்களில், ட்விட்டரில் பெயர் டிரண்டாக டாக்டர் பௌமேன் சர்வதேச அளவில் பேசப்படும் நபரானார்.
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம் மற்றும் ஸ்மித்கோசியன் வானியற்பியல் மையத்தாலும் டாக்டர் பௌமேன் பாராட்டப்படுகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டதாரி மாணவி கேட்டி பௌமேன் கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை உருவாக்குவதற்கான புதிய அல்கோரிதத்தை உருவாக்குவதற்கு தலைமைதாங்கினார். இன்று, இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது" என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையமும் அதன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் தெரிவித்துள்ளது.
இதற்கு உதவிய குழுவினரும் பெயர் பெறுவதற்கு சம அளவில் கடமைப்பட்டுள்ளனர் என்று கலிஃபோர்னிய தொழில்நுட்ப நிலையத்தின் கணக்கீடு மற்றும் கணிதவியல் துணை பேராசிரியாக வேலை செய்தவரும் டாக்டர் பௌமேன் வலியுறுத்தியுள்ளார்.
அண்டார்டிக்கா முதல் சிலி நாடு வரை வேறுபட்ட இடங்களில் இருக்கும் தொலைநோக்கிகளை பயன்படுத்தி இந்த புகைப்படத்தை உருவாக்குவதில் 200-க்கு மேலான விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
"எங்களில் யாரும் தனியாக இதனை செய்திருக்க முடியாது" என்று சிஎன்என்-க்கு தெரிவித்த டாக்டர் பௌமேன் பல்வேறுபட்ட பின்னணிகளில் இருந்து வந்த வித்தியாசமான விஞ்ஞானிகள் பலரால் இது கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். (BBC Tamil)

Add new comment