Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனச்சான்றின் குரலை அமைதிப்படுத்த ஆற்றுவதல்ல பிறரன்பு செயல்
அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் 21வது பொது அவைக் கூட்டத்தில் பங்குபெறும் ஏறத்தாழ 400 அங்கத்தினர்களை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்பு, ஒன்றிணைந்த வளர்ச்சி, ஒன்றிப்பு என்ற மூன்று தலைப்புக்களைக் கொண்டு உரையாற்றினார்.
நம் மனச்சான்றின் குரலை அடக்குவதற்கோ, அல்லது, அமைதிப்படுத்தவோ ஆற்றுவதல்ல பிறரன்பு நடவடிக்கை, மாறாக, அது, இறைவனில் தன் ஆதாரத்தைக் கொண்டுள்ளது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பிறரன்பு நடவடிக்கைகள், உலகில் ஓரங்கட்டப்பட்டுள்ள மக்களைச் சென்றடைவதையும், அவர்களின் வளர்ச்சியையும், நோக்கம் கொண்டதாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தூக்கியெறியும், மற்றும், பாராமுகத்துடன் செயல்படும் இன்றைய கலாச்சாரத்தில், நம் பிறரன்பு பணி என்பது மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உழைப்பதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய மூவொரு கடவுளாக, ஒன்றிப்பில் வாழும் இயேசுவால் கற்பிக்கப்பட்டுள்ள நாம், கிறிஸ்துவுடனும் திருஅவையுடனும் கொண்டுள்ள ஒன்றிப்பின் வழியாகவே, பெரும் பிறரன்பு நடவடிக்கைகளை ஆற்றமுடியும் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகளுடன் நெருங்கிய உள்ளார்ந்த உணர்வையும், உறவையும் கொண்டிராமல், பிறரன்பில் வாழமுடியாது எனவும் எடுத்துரைத்தார்.
(வத்திக்கான் செய்தி - மே 28, 2019)
Add new comment