Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மே 5, வருகிற ஞாயிறு முதல், இலங்கை ஆலயங்களில் திருப்பலி
இலங்கையில் மூடப்பட்டுள்ள கத்தோலிக்க ஆலயங்களில், மே மாதம் 5ம் தேதி, வருகிற ஞாயிறு, திருப்பலிகள் மீண்டும் துவங்கும் என்று, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.
வருகிற ஞாயிறு, ஒரு சில ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றப்படும் என்றும், நாட்டில் நிலவும் பாதுகாப்பை கணித்து, ஏனைய ஆலயங்களில் திருப்பலிகளைத் தொடர்வோம் என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, மே மாதம் 6ம் தேதி, வருகிற திங்களன்று, இஸ்லாமியரின் புனித மாதமான இரமதான் மாதம் துவங்கவிருப்பதையொட்டி, இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இலங்கையில், பல ஆண்டுகளாக, உள்நாட்டுப் போர் நிகழ்ந்த நேரத்திலும், கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலிகள் நிறுத்தப்படவில்லை என்றும், ஏப்ரல் 28 கடந்த ஞாயிறன்று கோவில்களில் திருப்பலிகள் நிகழாதது, இலங்கையில் முதல் முறை நிகழ்கிறது என்றும், மக்கள் வருத்தத்துடன் கூறினர்.
உயிர்ப்புப் பெருவிழாவன்று நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களில் இதுவரை 253 பேர் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில், 42 வெளிநாட்டவரும், 45 குழந்தைகளும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளனர் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.
(வத்திக்கான் செய்தி - 02, மே 2019)

Add new comment