Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சமூக ஊடகத்திலும் உண்மையாய் நடந்துகொள்ள இளையோர்க்கு அழைப்பு
இக்காலத்தில் போலியான செய்திகளும், ஸ்மார்ட் கைபேசிகள் போன்ற சிறிய தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமையாகும் நிலையும், பரவி வருவது குறித்து எச்சரித்தார், பிலிப்பைன்சின் மனிலா கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே.
கடந்த வாரப் புனித நாள்கள் திருவழிபாடுகளில் இவ்வாறு எச்சரித்த, கர்தினால் தாக்லே அவர்கள் அருள்பணியாளர்கள் உட்பட கத்தோலிக்கர் அனைவரும், தங்களின் அர்ப்பணத்திற்கு ஏற்ற வகையில் வாழவும், ஏழைகளுக்கும், துன்புறுவோர்க்கும், நற்செய்தியை அறிவிக்கவும் கேட்டுக்கொண்டார்.
ஏராளமான இளையோர் ஒருபோதும் நல்ல செய்திகளைப் பெறுவதில்லை, மாறாக, அவர்கள் குறைகூறுதலையும், எதார்த்தமில்லாத எதிர்பார்ப்புக்களைச் சந்திப்பதற்குத் திறனற்ற செய்திகளையுமே கேட்கின்றனர் என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் கவலையுடன் தெரிவித்தார். இயேசுவின் உயிர்ப்புப் பெருநாளன்று ஆற்றிய மறையுரையில், இளையோர் சமூக ஊடகத்திலும், உண்மையாய் நடந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார் கர்தினால் தாக்லே.
சமூக ஊடகங்களில் வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துவோரும் உள்ளனர், நீங்கள் உண்மையாய் இருந்தால், உங்களின் சொந்தப் பெயர்களைப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், உங்களின் தனித்துவத்தை மறைத்தால் நீங்கள் கோழைகள் என்றும் கூறினார்.
தானும் தனித்துவத் திருட்டுக்குப் பலிகடாவாக மாறியுள்ளதாகத் தெரிவித்த கர்தினால் தாக்லே அவர்கள், தான் உருவாக்காத நான்கு முகநூல்கள் தனது பெயரில் உள்ளன எனவும் கூறினார்.
(UCAN)
Add new comment