பரிவு கொள்பவர்களா நாம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின்  நான்காம் சனி  
I: எபி:  13: 15-17, 20-21
II:  தி.பா: 23: 1-3. 3-4. 5. 6 
III: மாற்: 6: 30-34

தெருவோரத்தில் ஒரு சிறுவன் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் உணவகத்தின் வெளியில் எச்சில் இலையை பொறுக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு நல்மனம் படைத்த நபர் அந்த உணவகத்திற்கு வந்தார். இந்த நிகழ்வை கண்டதும் அவர் கண்கள் கலங்கின. அந்தச் சிறுவன் மீது அவர் பரிவு கொண்டு, அவர் அந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது குழந்தையைப் போல் வளர்த்து படிக்க வைத்தார். அந்தச் சிறுவனும் படித்து மிகப்பெரிய நிலையை பிற்காலத்தில் அடைந்தார். வசதியான வாழ்வு அவர் கண்ணை மறைத்தது. ஒரு முறை அவரும் தன்னை வளர்த்த அந்த தந்தையும் வாகனத்தில் பயணம் செய்து  கொண்டிருந்த பொழுது, சிக்னல் இருந்த இடத்தில் ஒரு சிறுவன் அவரிடம் உண்ண உணவிற்காக பணம் கேட்டான். ஆனால் இவரோ "பணம் உனக்கு கிடையாது. ஓடிப் போய்விடு "என அதட்டினார். இதைக்கண்ட இவரின் வளர்ப்பு தந்தை இவரை தத்தெடுத்து வளர்த்ததற்காக  மனம் கலங்கினார். இருந்தபோதிலும் தன் வளர்ப்பு மகன் சிறுவயதில் துன்பப்பட்ட நிலையை அவர் தனியாக அவருக்கு எடுத்துக் கூறினார். அப்பொழுதுதான் வாழ்வின் உண்மையான பொருளை உணர்ந்து கொண்டார். அந்த ஏழைச் சிறுவனிடம் தான் நடந்து கொண்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். பின்பு அந்தச் சிறுவனை தேடிச்சென்று அந்தச் சிறுவனை படிக்கவைத்து புது வாழ்வை காண வழிகாட்டினார்.

 பரிவு என்பது பிறரை அன்போடு அரவணைத்து புது வாழ்வை வழங்குவதாகும். கடவுள் பரிவு மிக்கவராக இருக்கிறார். எனவேதான் 480 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்து நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை மோசே வழியாக மீட்டு, பாலும் தேனும் ஓடக்கூடிய கானான் நாட்டை வழங்கினார். இது கடவுளின் பரிவுள்ளத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவர் இயேசு தன்னுடைய  மூன்றாண்டு  இறையாட்சி பணிக்காலங்களில் பல்வேறு வல்ல செயல்களைச் செய்தார். இதன் வழியாக எண்ணற்ற நோயாளர்களுக்கும் பாவிகளுக்கும் புது வாழ்வை  வழங்கினார். இது இயேசுவின் பரிவுள்ளதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. 

இயேசுவின் பரிவு உள்ளத்தை தான் இன்றைய நற்செய்தியும் நமக்கு எடுத்துரைக்கின்றது. "மக்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்" (மாற்: 6: 34) என்று வாசிக்கின்றோம்.  தன்னுடைய போதிக்கும் பணியின் வழியாக இயேசு தன்னுடைய பரிவுள்ளத்தை மக்களுக்கு காண்பித்தார். இயேசுவின் போதனை எண்ணற்ற மக்களுக்கு ஆறுதலாகவும் வழிகாட்டுதலாகவும் புதுவாழ்வை வழங்கக் கூடியதாகவும் இறைநம்பிக்கையில் வளர ஊக்கமூட்டுவதாகவும் இருந்தன.

இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்பற்றுகின்ற நாமும் நம்முடைய சொல்லாலும் செயலாலும் நம்மோடு வாழக்கூடிய மக்களுக்கு நம்முடைய பரிவினைக் காட்ட  அழைக்கப்பட்டுள்ளோம். நோயால் அவதிப்படுபவர்களுக்கு நாம் ஆறுதலாகவும் வாழ்க்கைப் பயணத்தில் தள்ளாடுபவர்களுக்கு வழிகாட்டியாகவும் சுமைகளால் சோர்ந்தோரைத் திடப்படுத்தக் கூடியவர்களாகவும்  வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இத்தகைய பணிகளைச் செய்ய  நம் ஆண்டவர் இயேசுவே நமக்கு முன்னோடியாகத் திகழ்கின்றார். நம்முடைய போதிக்கும் பணியின் வழியாக நம்மோடு வாழக்கூடிய மக்களுக்கு பரிவையும் அன்பையும் காண்பிக்கத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
பரிவுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் பரிவுள்ளத்தோடு வாழ்ந்து , நற்செய்தி மதிப்பீட்டுக்கு சான்று பகர தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

3 + 7 =