இயேசுவைப் போல் மாறாத குணம் உள்ளவர்களா நாம்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் நான்காம் வெள்ளி - I. எபி: 13:1-8; II. தி.பா: 27:1.3.5.8-9; III. மாற்: 6:14-29

பள்ளியில் மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது குறிப்பிட்ட அந்த வகுப்பிற்கு தாமதமாக வந்த ஆசிரியர், உள்ளே வந்த உடன் மாணவர்களை தங்களுடைய நோட்டுப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார். மாணவர்களோ "இதென்ன நன்னெறி வகுப்பில் கூட பாடமா?" என்று எண்ணிக்கொண்டே நோட்டுகளை எடுத்தார்கள். பின் ஆசிரியர் மாணவர்களை நோட்டுகளை முதல் பக்கத்திலிருந்து இறுதிப்பக்கம் வரை ஒவ்வொரு பக்கமாகப் பார்க்கச் சொன்னார். சிறிது நேர இடைவெளிக்குப் பின் ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். "உங்களில் எத்தனை பேருடைய கையெழுத்து முதல் பக்கத்திலிருந்து இறுதி வரை ஒன்று போல் உள்ளது?" என்பது தான் அக்கேள்வி. சிலரே கையை உயர்த்தினர். ஒருசில மாணவர்கள் நேரமில்லை அதனால் கையெழுத்து மாறிவிட்டது, சரியான மனநிலை இல்லை, விளையாட்டுத்தனமாக இருந்தேன் என்றெல்லாம் காரணங்களைக் கூறினர். அப்போது அந்த ஆசிரியர், "கையெழுத்து மாறுவதால் நோட்டுகள் பார்ப்பதற்கு அழகாகவும் படிப்பதற்கு ஏதுவாகவும் இருப்பதில்லை. அதே போல் வாழ்க்கையில் நம் குணங்களை நேரத்திற்கும்,சூழ்நிலைக்கும்,விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்றார் போல்  மாற்றிக் கொண்டே இருந்தால் நம் வாழ்வும் அழகாக இருக்காது" என்று கூறி நன்னெறி பாட வேளையை முடிக்க, மாணவர்களும் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினர்.

"இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்" என்ற வார்த்தைகளை இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். ஆம் இயேசு காலத்திற்கும், இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். அனைவருக்கும் அன்பு செலுத்துவதில் கருத்தாயிருந்தார். அவர் அதிகார அடக்குமுறைகளைக் கைகொண்ட யூதர்களைச் சாடியது கூட வெறுப்பினால் அல்ல. அவர்களை மனமாற்றி கடவுளிடம் அழைத்து வர வேண்டும் என்ற அன்பினாலேயே.

அதேபோல இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டுள்ள திருமுழுக்கு யோவானும் மாறுகின்ற குணாதிசயம் கொண்டவரல்ல. அவரும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். அரசரானாலும், சாதாரண மக்களானாலும் தன்னுடைய கருத்துக்களை தெளிவாகத் தைரியமாகக் கூறினார். அதற்காகவே கொல்லப்ட்டார் என நாம் அறிவோம்.

நம்முடைய வாழ்வை இன்று அலசிப்பார்ப்போம். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும், வசதி வாய்ப்பிற்கும், விருப்ப வெறுப்புகளுக்கும் ஏற்றார் போல நம் குணங்களை மாற்றிக்கொள்கிறோமா? தொடக்த்தில் இருந்த அன்பும், நேர்மையும், அனைவரிடமும் நன்கு பழகுகின்ற குணமும்  இன்றளவும் நம்மிடம் உள்ளதா? என்னைப் பார்த்து "பரவாயில்லை  எப்போதும்  தன்னிலை மாறாமல் இருக்கிறார்!" என யாராவது சொல்லமுடியுமா?... சிந்திப்போம்.

இறைவேண்டல்

என்றும் மாறாத இயேசுவே! நாங்கள் உம்மைப் போல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்து மாறாத நற்குணங்களை இறுதிவரை கொண்டிருக்க வரம் தாரும். ஆமென்.

Add new comment

8 + 1 =