Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வங்கதேசம் மற்றும் மியான்மரை தாக்கிய மோச்சா சூறாவளி | வேரித்தாஸ் செய்திகள்
மோச்சா சூறாவளி புயல் வங்கதேசம் மற்றும் மியான்மரை மே 14 அன்று தாக்கி கோரமுகத்தை காட்டியது இதில் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மோச்சா என்று பெயரிப்பட்ட சூறாவளி புயல் வங்காளதேச எல்லைக்கு தெற்கே வடமேற்கு ரக்கைன் மாநிலத்தின் கடற்கரையை மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது. பலத்த காற்று வீசியதில் பலர் உயிர் இழந்தனர்.
பங்களாதேஷின் கடலோர காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள டெக்னாஃப் பகுதியில் சுமார் 10,500 வீடுகள் மோச்சா புயலால் சேதமடைந்துள்ளன. கடந்த பத்து வருடங்களில் வங்காள விரிகுடாவைத் தாக்கிய மிகப் பெரிய புயல் இதுதான்.
பல்வேறு ஊடகங்களின் செய்திகளின்படி, 3 லட்சத்து 34 ஆயிரம் பேர் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புனித மார்ட்டின் மற்றும் டெக்நாப் ஆகிய சில கடற்கரைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் புனித மார்ட்டின் தீவில் சுமார் 2,500 வீடுகள் அடியோடு புயலால் தூக்கி எறியப்பட்டுள்ளது , ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக உள்ளனர்.
சூறாவளியின் தாக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை காக்ஸ் பஜார் மாவட்ட நகரம், டெக்னாஃப் உபாசிலா மற்றும் புனித மார்ட்டின் தீவு மற்றும் பிற உபாசிலாவை தாக்கத் தொடங்கியது இதில் வீடுகள் , பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
டெக்னாஃபில் உள்ள ஷாபாரி தீவின் யூனியன் உறுப்பினரான எம்.டி. அப்துஸ் சலாம், நஃப் நதி முழுப் பகுதியையும் சூழ்ந்துள்ளது. சக்திவாய்ந்த புயலால் 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததை அடுத்து, தற்போது 1,500 பேர் வீடு இல்லாமல் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
பிற்பகல் 4 மணிக்கு பின்னர் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரித்தது; கடலோரப் பகுதிகளில் பயங்கரமான கோர தாண்டவம் ஆடியது. ஞாயிற்றுக்கிழமை சூறாவளி தாக்கிய பின்னர் புனித மார்ட்டின் தீவில் அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 147 கிலோமீட்டர் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புனித மார்ட்டின் தீவின் யூனியன் கவுன்சில் தலைவர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், இந்த சூறாவளி புயல் மார்ட்டின் கடற்கரைப் பகுதியை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது . மரங்கள் மற்றும் வீடுகள் வேரோடு சாய்ந்து போனதை பார்க்கும் பொழுது மிகுந்த வேதனை அடைந்ததாக கூறினார்.
புனித மார்ட்டினில் காற்றின் வேகம் குறைந்துள்ள நிலையில் லேசான மழை பெய்து வருகிறது. குறைந்தது 1,800 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பத்து பேர் காயமடைந்துள்ளனர். புனித மார்ட்டின் மருத்துவமனை இப்போது இந்த சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறது.
இது குறித்து மாவட்ட வானிலை ஆய்வு மையத்தின் முதன்மை வானிலை ஆய்வாளர் எம்.டி. அப்துர் ரஹ்மான் கூறும்போது, பிற்பகல் 3 மணியளவில் இந்த சூறாவளி புயல் வங்கதேசத்தின் கரையை கடந்து மியான்மரை நோக்கி நகர்ந்தது. புயல் கரையை கடந்துவிட்ட காரணத்தினாலே இனி ஆபத்து இல்லை என்று கூறியுள்ளார்.மேலும் புயல் வலுவிழந்து விட்டதால் அதனால் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் குறையும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் வெள்ள அபாயமும் இலலை என்று ஆறுதல் தகவல் கிடைத்துள்ளது.
மறுபுறம், மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் பல பகுதிகளும் இந்த சூறாவளி புயலால் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் அனைத்து தொலைபேசி தொடர்புகளுடன், வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன.
மியான்மரில் இந்த சூறாவளி காரணமாக குறைந்தபட்சம் ஐந்து பேர் பலியானதாகவும் , மேலும் பலர் காயமடைந்ததாகவும் மணிலா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, இராணுவ ஆட்சிக்குழு விவரங்கள் எதுவும் தெரிவிக்காமல் அறிக்கையில் மட்டும் இதனை கூறியது எனபது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 860க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 14 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் சேதமடைந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.
இந்த சூறாவளி புயலினால் பாதிக்கப்பட்ட இந்த நாடுகளுக்கு இறைவன் பாதுகாப்பை வழங்க பிரார்த்தனை செய்ய வேண்டியது நமது கடமை ஆகும்.
_ அருள்பணி வி.ஜான்சன்
(Source from RVA English News)
Add new comment