Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அதிகாரம் எதற்காக? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - இரண்டாம் செவ்வாய் - I. எசா: 1:10,16-20; II. தி.பா: 50:8-9.16-17.21,23; III. மத்: 23:1-12
அதிகாரம் இந்த உலகத்தில் மக்களை ஆட்சி செலுத்தி வருகிறது. அதிகாரம் தான் மக்களின் வாழ்வையே தீர்மானிக்கின்றது. ஒரு நாட்டு மக்கள் மகிழ்வோடும் நிறைவோடும் வாழ்வது அதிகாரம் படைத்தவர்களின் கையில்தான் இருக்கின்றது. அதிகாரத்தை தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் தவறாகப் பயன்படுத்தினால், நிச்சயம் அந்த மக்களின் நிலை அவல நிலைதான். உண்மையான அரசு என்பது அதிகாரத்தை நன்முறையில் பயன்படுத்துவதாகும். மக்களை அடக்கி ஆள்வது அல்ல; மாறாக, மக்களை முழு உரிமையோடும் சுதந்திரத்தோடும் அமைதியோடும் வாழ வைப்பதே.
இந்த உலகத்தில் அதிகாரத்தை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர் அதிகாரத்தோடு போதித்தார். அதிகாரத்தோடு குணமாக்கினார். அதிகாரத்தோடு பேய்களை ஓட்டினார். அதிகாரத்தோடு தவறுகளைச் சுட்டிக்காட்டினார். ஆனால் அந்த அதிகாரத்தில் அன்பு இருந்தது.அந்த அன்பு கலந்த அதிகாரம் தான் மக்களை அவர்பால் ஈர்த்தது.இன்றளவும் இயேசுவை அரசராகக் கொண்டாடுகிறோம்.
அதிகாரத்தை எவ்வாறு கையாளக் கூடாது என்பதற்கு உதாரணம் ஹிட்லர். அடக்குமுறையை பயன்படுத்தி உலகத்தையே தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என விரும்பினார். அனைவரின் வெறுப்புக்கும் ஆளானார்.இன்றளவும் மற்றவர்களை அதிகாரத்தோடு அடக்கி ஆள்பவர்களை ஹிட்லர் என்ற புனைப்பெயரிட்டு அழைப்பது நமக்குத் தெரிந்ததே.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு அதிகாரத்தைப் பற்றியத் தெளிவான விளக்கம் தருகிறார். தந்தையாம் கடவுள் மட்டுமே இவ்வுலகத்தின் மீது முழு அதிகாரம் கொண்டவர். ஆசிரியர் எனவும் அழைக்கப்படத் தகுதியுள்ளவர்.மற்ற அனைவருக்கும் கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிநடத்துவதற்காகவே. ஆனால் பல வேளைகளில் நம்மிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் போது ஏதோ உலகத்தையே நாம் தூக்கி சுமப்பதுபோலவும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் நமக்கு பணிவிடை புரிந்து கீழ்படிய வேண்டும் என்ற மனநிலையிலும் வாழ்கிறோம். இதனால் நாம் சம்பாதிப்பது பிறரின் வெறுப்புக்களையே. பரிசேயர், சதுசேயர் இப்படிப்பட்ட மனநிலையில் வாழ்ந்ததாலேயே ஏழை எளிய மக்களால் வெறுக்கப்ட்டனர்.தங்களுக்கு மரியாதை வேண்டும், தங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என எண்ணினார்களே தவிர அதன்படி அவர்கள் வாழவில்லை. எனவே தான் இயேசு "அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அவர்களைப் போல வாழாதீர்கள்" என்கிறார்.
எனவே நம்முடைய மனநிலையை அலசிப் பார்போம்.நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை அன்போடு பயன்படுத்துவோம். கடவுளைத் தவிர யாருக்கும் எவர்மீதும் அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்து, அதிகாரம் என்பது இயேசுவைப் போல அன்போடு பணிவிடை புரியவே என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
இறைவேண்டல்
எங்கள் மேல் முழு அதிகாரம் கொண்ட ஆண்டவரே! அதிகாரத்தைக் கொண்டு அல்ல, மாறாக அன்பினால் பணிவிடை புரிய அருள் தாரும். ஆமென்.
Add new comment