Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருத்தப்பட விரும்புவோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் நான்காம் புதன்
I: எபி: 12:4-7,11-15
II: தி.பா 103:1-2,13-14,17-18
III: மாற்கு: 6:1-6
திருத்தப்பட விரும்புவோமா?
ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள ஒரு மாணவியை எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பார். குறிப்பாக அவருடைய கையெழுத்து மிக மோசமாக இருந்ததால் அவர் எழுதியவற்றை சில சமயங்களில் கிழித்துவிடுவார்.பல சமயங்களில் எழுத்து திருந்த வேண்டும் என்பதற்காக அடிக்கவும் செய்வார். இதனால் அம்மாணவிக்கு அந்த ஆசிரியரைப் பிடிக்காது. பள்ளிப் படிப்பு முடிந்து,கல்லூரியில் சேர்ந்தார் அம்மாணவி. கல்லூரியில் நடைபெற்ற கையெழுத்துப் போட்டியில் அம்மாணவி சேர நேர்ந்தது. அவ்வாறு போட்டியில் சேர்ந்த மாணவி முதல் பரிசும் பெற்றார். ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மாணவி அப்போது தான் தன் ஆசிரியரை நினைவு கூர்ந்தார். தன்னுடைய கையெழுத்து முதல் பரிசு பெறுமளவிற்கு உருமாறியது என்றால் அது அந்த ஆசிரியரால்தான் என்பதை உணர்ந்து கொண்டார். அப்போதுதான் அவ்வாசிரியர் தன்மீது கொண்டிருந்த அன்பையும் அக்கறையையும் அவர் மனது புரிந்து கொண்டது.
இன்றைய முதல் வாசத்தில் தந்தையாம் கடவுள் யாரை ஏற்றுக்கொண்டு அன்பு செய்கிறாரோ அவர்களையே கண்டித்துத் திருத்துகிறார் ; அச்சமயத்தில் அக்கண்டிப்பு நமக்கு வேதனை அளித்தாலும், பிற்காலத்தில் நம் வாழ்வின் வளர்ச்சிக்கு அதுவே உறுதுணையாய் விளங்கும் என்ற கருத்து கூறப்பட்டுள்து.இதன் மூலம் கடவுள் எந்த அளவுக்கு தன் சொந்தப்பிள்ளைகள் அழியாமல்,தவறிச்செல்லாமல் நல்வழியில் செல்ல வேண்டும் என விரும்புகிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.
நம்மீது அன்பும் அக்றையும் கொண்டவர்கள் மட்டுமே நம்மை உரிமையுடன் கண்டித்துத் திருத்துவார்கள். வீட்டில் நமது பெற்றோர்கள்,பள்ளியில் நமது ஆசிரியர்கள்,நம் பணித்தளத்தில் நண்பர்கள், வாழ்வின் இறுதிவரையில் நம் வாழ்க்கைத்துணை இன்னும் துறவற வாழ்வில் நமக்குப் பொறுப்பாயிருப்பவர்கள் எல்லாரும் நம்மை கண்டிப்பது நம் மீது கொண்டுள்ள அக்கறையினாலேயே.பல சமயங்களில் அத்திருத்தங்கள் நமக்கு மன வேதனையைத் தந்தாலும் அவற்றை நம் நன்மைக்காக ஏற்று நம் வாழ்வுப் பாதையை மாற்ற முயலுகின்ற போது நாம் நிறைவான மகிழ்வான வாழ்வைப் பெற முடியும் என்பது திண்ணம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு தம் சொந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையைக் காண்கிறோம். இயேசு தம் போதனைகள் வழியாக தவறைச் சுட்டிக் காட்டி மனமாற்றத்திற்கு அழைத்தார். அவர் கூறியவை தமக்கு நன்மை பயக்கும் என எண்ணாமல் அவருடைய குடும்பப் பிண்ணணியை சுட்டிக்காட்டி அவரை ஏற்க மறுக்கிறார்கள் அவருடைய சொந்த ஊர் மக்கள். நாமும் பல சமயங்களில் மற்றவர்கள் நம்மைக் கண்டித்துத் திருத்த முற்படும் போது அவர்களை ஏற்றுக்கொள்ளாமல்,அவர்களுடைய பிண்ணணி என்னவென்பதை ஆராயத் தொடங்குகிறோம். இப்படிப்பட்ட மனநிலையை அகற்ற இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
இறைவேண்டல்
எங்களை நல்வழிப் படுத்துபவரே இறைவா! எம்மீது அக்கறை கொண்டு அன்போடு எம்மைக் கண்டித்துத் திருத்துபவர்களிடம் உம்மைக் காணவும்,அவர்களின் பிண்ணணியை ஆராயாமல் அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி எம் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் அருள் தாரும். ஆமென்.
Add new comment