Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இரண்டாம் தொடக்கம் | யேசு கருணா | Sunday Reflection
21 பிப்ரவரி 2021 தவக்காலம் முதல் ஞாயிறு
I. தொடக்கநூல் 9:8-15
II. 1 பேதுரு 3:18-22
III. மாற்கு 1:12-15
ஒலிம்பிக் புகழ் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் பற்றி ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுவதுண்டு. ஓட்டப் பந்தயத்தின் நம்பிக்கை நாயகராகக் களம் இறங்குகிறார் உசேன் போல்ட். ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டி. தங்கமா, வெள்ளியா என்பதைத் தீர்மானிக்கிற போட்டி. அந்தப் போட்டிக்கு ஓடத் தயாராக இருந்த வீரர்களில் ஒருவராக உசேன் போல்ட் இருக்கிறார். ஓடுவதற்குக் கொடுக்கப்படும் துப்பாக்கி ஒலி சமிக்ஞை கேட்பதற்கு முன் தன் காலை உயர்த்தியதால் அவர் அந்தப் போட்டியிலிருந்து நீக்கப்படுகின்றார். அரங்கம் அமைதி காக்கின்றது. ஒரு மாவீரனுக்கு நேர்ந்த இந்த நிலை குறித்து ஸ்தம்பித்துப் போகிறது. ஆனால் அவர் சிரித்த முகத்துடன் வெளியேறுகிறார். அடுத்து ஐந்து ஆண்டுகள் அவர் காத்திருக்க வேண்டிய சூழல் வருகிறது. மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். 100 மீட்டர் தூரத்தை வெறும் 9 நொடிகளில் ஓடிக் கடக்கின்றார். அது அவருடைய வாழ்வின் இரண்டாம் தொடக்கமாக அமைகிறது.
தங்கள் வாழ்வில் முதல் தொடக்கத்தை இழந்துவிட்டு, இரண்டாம் தொடக்கத்தை இறுகப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் ஏராளம்.
தவக்காலம் நம் வாழ்வில் இரண்டாம் தொடக்கத்திற்கான வழியை ஏற்படுத்தித் தருகிறது. முதல் தொடக்கம் சரியாக இல்லையென்றால், நம் வாழ்க்கைப் பாதையில் தடைகள் வருகிறதென்றால், மீண்டும் ஒருமுறை அனைத்தையும் 'ரீஸெட்' செய்து புதியதாகத் தருகிறது வாழ்க்கை.
இன்றைய முதல் வாசகத்தில், ஒட்டுமொத்த படைப்பே தன் இரண்டாம் தொடக்கத்தைக் காண்கிறது. அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், மனிதர்களைப் படைத்தவுடன், மிகவும் நல்லதெனக் கண்ட கடவுள், மனித உள்ளத்திலிருந்த தீய சிந்தனையின் பொருட்டு ஒட்டுமொத்த படைப்பையும் அழிக்க விழைகின்றார். நோவாவும் அவருடன் இணைந்து சில விலங்குகளும் பறவைகளும் அவரால் காப்பாற்றப்படுகின்றன.
முதல் வாசகம், பெருவெள்ளத்தைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தூய ஆவியால் பாலை நிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். அங்கே இயேசு சோதிக்கப்படும் நிகழ்வை மாற்கு நற்செய்தியாளர் மிகவும் சுருக்கமாகப் பதிவிடுகின்றார். ஆனால், முக்கியமான சில தரவுகளைத் தருகின்றார்.
இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களை இணைத்துப் பார்ப்போம்.
முதல் வாசகத்தில் நோவா தனியாக நிற்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு தனியாக நிற்கின்றார்.
அங்கேயும் அவரைச் சுற்றிக் காட்டு விலங்குகள் இருக்கின்றன. இங்கேயும் இயேசுவைச் சுற்றிக் காட்டு விலங்குகள் இருக்கின்றன.
அங்கே சுற்றிலும் தண்ணீர். இங்கே சுற்றிலும் பாலை.
அங்கே நோவாவுடன் உடன்படிக்கை செய்கிறார் ஆண்டவராகிய கடவுள். இங்கே இயேசுவுடன் உடனிருக்கிறார் ஆண்டவரின் தூதர்.
அங்கே படைப்பு இரண்டாம் தொடக்கம் பெறுகிறது. இங்கே இயேசு சோதிக்கப்படும் நிகழ்வு அவருடைய பணி வாழ்வின் இரண்டாம் தொடக்கமாக இருக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், பேதுரு, துன்புறும் தன் திருச்சபைக்கு ஆறுதல் சொல்லி, அவர்களை நம்பிக்கை வாழ்வு என்னும் இரண்டாம் தொடக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.
நம் வாழ்வின் இரண்டாம் தொடக்கத்தை இன்று நாம் கண்டுகொள்ள என்ன செய்ய வேண்டும்?
இறைவன் நம்மை நினைவுகூர்கிறார் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பது.
சோதனைகள் நம் வாழ்வின் எதார்த்தங்கள் என ஏற்றுக்கொள்வது.
Add new comment