புனித சந்தியாகப்பர் | குழந்தைஇயேசு பாபு


St. James

இன்றைய வாசகங்கள் (26.07.2020) - பொதுக்காலத்தின் 16 ஆம் சனி - I. 2 கொரி. 4:7-15; II. திபா. 126:1-6; III. மத். 20:20-28

இன்றைய நாளில் தாய் திருஅவையோடு இணைந்து புனித சந்தியாகப்பருடையத் திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளின் புனிதர் உண்மையான சீடத்துவ வாழ்வுக்கு சான்று பகர்பவராக இருக்கின்றார். தொடக்கத்தில் சீடத்துவ வாழ்வைப் பற்றி சரியான புரிதல் இல்லாவிட்டாலும் இயேசுவிடமிருந்து அதை அறிந்த பிறகு, உண்மையான சீடத்துவ மதிப்பீடுகளோடு இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டுக்கு சான்று பகர்கிறார். புனித சந்தியாகப்பர் என்ற பெயரானது யாக்கோபு என்ற பெயரில் இருந்து வந்தது. இவர் பெரிய யாக்கோபு என்றும் அழைக்கப்படுகிறார். பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த செபதேயு மற்றும் சலோமி ஆகிய இருவரின் மகனாக கருதப்படுகிறார். 

இன்றைய நற்செய்தியில் புனித சந்தியாகப்பரின் மனநிலை இயேசுவைப் பின்பற்றும் பொழுது எப்படி இருந்தது என்பதைப் பற்றி கூறுகின்றது. தன்னுடைய தாயாரின் வழியாக இயேசுவின் அரியணையில் தானும் தனது சகோதரரும்இடம் பெற ஆசைப்படுகின்றனர். இது அவர் சீடத்துவத்தைப் பற்றிக் கொண்டிருக்கக்கூடிய புரிதலற்ற தன்மையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மையான சீடத்துவ வாழ்வைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார். "மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தமது உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் (மத். 20:28).

சீடத்துவ வாழ்வு என்பது தொண்டு ஏற்பதற்கு அல்ல என்ற சிந்தனையை இன்றைய விழா நாள் நாயகருக்கு ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டுகிறார். அரியணையில் அமர்வதன் வழியாக தொண்டு ஏற்கலாம் என்று நினைத்த இன்றைய புனிதர், இயேசு கூறிய அந்த வார்த்தையை கேட்டவுடன் தன் வாழ்நாள் முழுவதும் பணிவிடை புரிபவராக மாறினார் . இயேசுவின் சீடத்துவம் என்பது அன்பு, கனிவு, பொறுமை, நீதி, தாழ்ச்சி மற்றும் தூய்மை என்பதைப் புரிந்து கொண்டு மிகச்சிறந்த திருத்தூதுப் பணி செய்தார். தான் செய்த இறையாட்சி பணிக்கு பரிசாக திருத்தூதர்களின் முதல் மறைச் சாட்சியாக மாற வாய்ப்பு பெற்றார்.துன்பக்கிண்ணத்திலிருந்து எங்களால் பருக இயலும் என்று கூறிய வார்த்தைகளை எண்பித்துக்காட்டினார். 

தொண்டு புரிதல் அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தன்னையே வெறுமையாக்குவதன் அடையாளம். இயேசுவின் ஒவ்வொரு போதனையும், புதுமையும், பாதம் கழுவும் நிகழ்வும், ஏன் சிலுவைச்சாவும் அவர் தம்மையே வெறுமையாக்கி தொண்டாற்றினார் என்பற்கு மிகச்சிறந்த உதாரணங்கள். 

சீடர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவருமே நம்மையே வெறுமையாக்கி தொண்டாற்ற நம்மையே இறைபாதம் சமர்பித்து வேண்டுவோம். தொண்டாற்ற நமக்கு கிடைத்த அரிய அழைப்பே மட்பாண்டமாகிய நமக்கு கிடைத்த அரிய செல்வம் என்பதை உணர்ந்து தொண்டாற்றுவோம்.

இறைவேண்டல்

தன்னையே வெறுமையாக்கி தொண்டாற்றிய இறையே உம்மைப் பின்பற்றி துன்பக்கிண்ணத்தில் பருகத்துணிந்த புனித யாக்கோபுவை போல நாங்களும் துணிந்து எங்களையே வெறுமையாக்கி தொண்டாற்ற வரம் தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

2 + 5 =