புரியாததை புரிய வைப்பதா! | குழந்தைஇயேசு பாபு


Make them understand...

இன்றைய வாசகங்கள் (23.07.2020) - பொதுக்காலத்தின் 16 ஆம் வியாழன் - I. எரே. 2:1-3,7-8,12-13; II. தி.பா. 36:5-6,7-8,9-10; III. மத். 13:10-17 

நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு நண்பர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற மிகவும் கடினப்பட்டார். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றார். ஆங்கில மொழிப்பாடம் மட்டும் சற்று கடினமாக அவருக்கு இருந்தது. பேராசிரியர்கள் நடத்திய பாடங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதியில் அந்த நண்பர் என்னிடம் வந்தார். நான் ஆங்கில மொழி பாடத்தில் தேர்ச்சி பெற உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உடனே அந்த நண்பருக்கு புரியாத ஆங்கில இலக்கணத்தை மிகவும் எளிமையாக புரிய வைத்தேன். இறுதியில் ஆங்கில தேர்வில் வெற்றிபெற்று, இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு இளங்கலை பட்டத்திற்கான சான்றிதழை என்னிடம் கொடுத்து, "இது உம்மால் தான் கிடைத்தது" என்று கூறினார். அப்பொழுது நான், "இந்த வெற்றியானது உம்முடைய ஆர்வத்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் திறந்த மனதோடு இருந்ததாலும் மட்டுமே கிடைத்தது" என்று கூறினேன். அப்பொழுது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வெற்றிபெற்ற மனநிலையோடுவிடைபெற்றுச் சென்றார். இப்பொழுது அந்த நண்பர் நல்ல வேலை கிடைத்து பணிபுரிந்து வருகிறார்.

இந்த உண்மை நிகழ்வு புரியாதவர்களையும் புரியவைத்து, அவர்களின் வாழ்வில் வெற்றியடைய வழிகாட்ட வேண்டும் என்ற சிந்தனையை கொடுப்பதாக இருக்கின்றது. வாய்ப்பு கிடைக்காத பொழுதும் வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதும் அவற்றைத் தேடிச் சென்று பயன்படுத்தி வாழ்வில் வெற்றி அடைய அழைப்பு விடுப்பதாகவும் இன்றைய வாசகங்கள் இருக்கின்றன. "இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு" (2 திமோ. 4:2) என்ற பவுல் அடியாரின் வார்த்தைகள் இயேசுவைப் புரியாதவர்களையும்வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் புரிய வைக்க அழைப்பு விடுப்பதாக இருக்கின்றது. புரியாமல் அறியாமையில் இருக்கக்கூடிய பாமரர்களைப் புரியச் செய்து ஒளியின் பாதைக்குஅழைத்துச் செல்ல அழைக்கப்பட்டுள்ளோம். 

நம் ஆண்டவர் இயேசுவும் தன்னுடைய இறையாட்சி பணியை செய்கின்ற பொழுது, தன்னுடைய போதனைகளின் வழியாக புரிய முடியாத இறையாட்சி மறையுண்மைகளை படித்தவர் முதல் பாமரர்கள் வரை புரிந்து கொள்ளும் வகையில் பல உவமைகளை கூறி புரிய வைத்துள்ளார். இது இயேசுவின் கற்றுக்கொடுக்கும் மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறது. சீடர்கள் இயேசுவிடம், "ஏன் அவர்களோடு (மக்களோடு) உவமைகள் வழியாகப் பேசுகிறீர்?" என்று கேட்டார்கள். இதன் பின்னணி என்னவென்றால் இயேசு பெரும்பாலும் தன்னுடைய போதனைகளில் மிக எளிமையான உவமைகளைத் தான் போதித்தார். எனவேதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மறுமொழியாக, "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை" (மத். 13:11) என்று கூறினார். 

இறையாட்சியின் (விண்ணரசு) மறைபொருள் என்பது அறிவு பூர்வமாக அறிந்து கொள்வதன்று; மாறாக, அனுபவத்தின் வழியாக புரிந்துக் கொள்வது. அந்த அனுபவம் படிக்காத பாமரர்கள் புரிந்துகொள்வது சற்று கடினம். எனவே அந்த அனுபவத்தைகக் கொடுப்பதற்காகத்தான்இயேசு உவமைகள் வழியாக போதித்தார். அதுவும் அவர்கள் அன்றாட வாழ்வில் கண்ட மரம், செடி, கொடி, வலை, முத்து, விதை இது போன்றவைகளின் வழியாகத்தான் ஆண்டவர் இயேசு உவமைகளைக் கூறியுள்ளார். இது இயேசுவின் தனித்தன்மையை சுட்டிக்காட்டுகிறது. இறையாட்சி பற்றிய மறைபொருளை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இயேசு உவமைகள் வழியாக போதித்தது புரியாததை புரிய வைப்பதற்காகவே ஆகும். 

இன்றைய முதல் வாசகத்தில் பிற இனத்தார் புரிய இயலாதக் கடவுளை, அவரின் அரும்பெரும் செயல்கள் வழியாக இஸ்ரேல் மக்கள் புரிந்தும் வேற்று தெய்வங்களை வழிபட்டு தீச்செயல்களைச் செய்தார்கள். எனவே அவர்களுடைய தீச்செயல் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த இறைவாக்கினர் எரேமியாவை அழைத்து இறைவாக்கு அருளுகிறார். இதுவும் ஒருவகையில் புரிந்தும் புரியாத வகையில் வாழ்ந்த இஸ்ரேல் மக்களுக்கு புரிதலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் எரேமியாவை அனுப்பினார். 

புரியாத மறை பொருளாகிய இறைவன் என்ற இறையாட்சியை நம்முடைய திறந்த உள்ளத்தோடு ஏற்றுக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். அப்பொழுது இறையாட்சியின் மறைபொருளை அனுபவத்தின் வாயிலாக புரிந்து கொள்ளமுடியும். அப்பொழுது, "வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது." (தி.பா. 36:9) என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளுக்கேற்ப வாழ்வுதரும் ஊற்றாகிய மீட்பை சுவைக்க முடியும். 

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே இந்த உலகத்தில் எத்தனையோ நபர்கள் புரிய முடியாத மந்த நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் அறிந்ததை அவருக்குப் புரியாத வகையில் சொல்லாமல் இயேசுவைப்போல புரியும் வகையில் சொல்ல அழைக்கப்பட்டுள்ளோம். நம் நன்மை தனங்களை மறந்து, தீய செயல்களை செய்கின்ற பொழுதும் அவர்களை வெறுக்காது தாயுள்ளத்தோடு யாவே இறைவனை போல புரியவைக்க அழைக்கப்பட்டுள்ளோம். இதை கடைபிடிப்பது கடினமாக இருந்தாலும் கடைபிடிக்கும் பொழுது இறைவன் தரும் வாழ்வு தரும் மீட்பை நாமும் நம்மோடு வாழ்பவர்களும் சுவைக்க முடியும். எனவே புரியாதவர்களை புரியவைக்கும் மனப்பக்குவத்தைக் கேட்டு இறைவேண்டல் செய்வோம். 

இறைவேண்டல்

எளியோரின் இறைவா! இன்றைய உலகத்தில் எத்தனையோ பாமரர்கள் இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்று கூட தெரியாமல் அறியாமையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு எங்களுடைய எளிமையான போதனைகள் வழியாக புரியாததை புரியவைக்கும் ஞானத்தைத் தரவேண்டுமென்று உம்மை வேண்டுகிறோம். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

5 + 10 =