மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு - I. யோனா 3:1-5,10; II. திபா: 25:4-9,6-7,8-9; III. 1 கொரி. 7:29-31; IV. மாற்கு: 1:14-20

ஒரு ஊரில் மதுப்பிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு நாளைக்கு குறைந்தது 200 ரூபாய்க்கு மது வாங்கிக் குடிப்பார். இதனால் இவரின் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானது. இவரின் மனைவியும் இரு மகன்களும் தங்கள் அன்றாட வாழ்விற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள மிகவும் துன்பப்பட்டனர். இவரின் மகன்கள் இருவரும் வீட்டு வறுமையின் காரணமாக ஒரு வேளை உண்ண கூட போதிய உணவு இல்லாமல் தவித்தனர். ஒரு முறை இந்தக் இரு குழந்தைகளின் தந்தை மது அருந்திவிட்டு சாலையில் நடந்து வந்த  பொழுது தன்னுடைய இரு குழந்தைகளும் பசியைப் போக்க உணவகத்தில் வெளியிலுள்ள எச்சில் இலையை பொறுக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதை கண்டதும் அந்த மதுப்பிரியர் தன் குழந்தைகளின் பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். தன்னால் தான் இத்தகைய அவல நிலைக்கு தன் குழந்தைகள் சென்றுவிட்டனர் என்பதை அறிந்து குடியை விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் பிறகு புதிய மனிதனாக மனமாற்றம் அடைந்து நன்றாக வேலைக்கு சென்று தன் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.

இன்றைய நற்செய்தி மூன்று முக்கியமான வார்த்தைகளைச் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது. முதலாவதாக மனமாற்றம், இரண்டாவதாக நற்செய்தி மற்றும் மூன்றாவதாக நம்பிக்கை. பாவத்திலே பாவத்தோடு பாவியாக இருந்தவன், தன் பாவத்தை வெறுக்கின்ற நிலைதான் மனமாற்றம். இப்படிப்பட்ட மனமாற்றத்தை பெற்று நற்செய்தியை நம்பிட இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

கிறிஸ்தவ வாழ்வில் மனமாற்றம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் ஏழு அருள்சாதனங்களில் ஒப்புரவு அருட்சாதனம் மிக முக்கியப் பங்கு வகிப்பதற்கு காரணம் மனமாற்றத்தின் வழியாக இறையாட்சியின், மீட்பின் கனியை சுவைக்க வேண்டும் என்பதற்காகவே. மனமாற்றம் என்பது நம் உள்ளத்திலிருந்து வர வேண்டும். சக்கேயு மனமாற்றம் அடைந்தார். அது அவருடைய உள்ளத்தின் மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே தான் அவரால் தான் குறுக்கு வழியில் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் நான்கு மடங்காகத் திருப்பித் தர முன்வர முடிந்தது. இயேசுவோடு சிலுவையில் தொங்கிய நல்ல கள்வர் மனமாற்றம் பெற்று விண்ணக வீட்டை பரிசாக பெற்றார். இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் நினிவே நகர மக்கள் மனமாற்றத்தால் கடவுளின் தண்டனையிலிருந்து தப்பித்தனர். ஏன் கடவுளே அவர்களுடைய மனமாற்றத்தைக் கண்டு தன்னுடைய மனதை தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலையிலிருந்து  மாற்றிக்கொண்டார். கடவுளின் வார்த்தையை உள்வாங்கி மனமாறும் பொழுது நமக்கு நிச்சயமாக புது வாழ்வு உண்டு என்ற சிந்தனையை கொடுப்பதாக  இவ்வார்த்தை அமைகின்றது.  மனமாற்றம் அடைகின்ற பொழுது நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் காண முடியும். 

இரண்டாவதாக நாம் சிந்திக்க இருக்கும் வார்த்தை "நற்செய்தி" நற்செய்தி என்பது நல்ல செய்தி. அதாவது சொல்பவருக்கும் கேட்பவருக்கும் நல்லுணர்வுகளை, மகிழ்ச்சியை, அமைதியைத் தரக்கூடிய செய்தி.துன்ப துயர வாழ்க்கையில் உழல்பவர்களைத் தூக்கிவிடும் செய்தி. இங்கு நாம் நற்செய்தியாகக் காண்பது இயேசுவைத்தான். ஆம் இயேசுவே உண்மையான நற்செய்தி. உடன்படிக்கை அன்பை மறந்து கடவுளைவிட்டுப் பிரிந்த மக்களுக்கு கடவுள் மன்னிப்பு வழங்கி தன்னோடு இணைத்துக்கொள்ள, மீண்டும் அன்பு செய்ய ஆவலாய் இருக்கிறார் என்ற செய்தியை தன் வாழ்வாலும் போதனையாலும் வழங்கிய இயேசுவே நற்செய்தியாய்த் திகழ்கிறார். இயேசுவைப் போலவே நாமும் நற்செய்தியை வழங்குபவர்களாக மட்டுமல்லாமல் பிறருக்கு நற்செய்தியாகவே திகழ அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய உடனிருப்பு நம்மைச் சார்ந்தர்களுக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லுணர்வுகளையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் தருமாயின் நாமும் நற்செய்தியே.

மூன்றாவதாக நம் சிந்தனைக்கு நம்பிக்கை என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். "நம்பிக்கை" என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை நடைபெறும் என்ற திடமான மனநிலை. கடவுள் நம்மை மன்னித்து நமக்குப் புதுவாழ்வு தருவார் என்ற எதிர்நோக்கு. என் கடவுள் எனக்குத் தேவையானவற்றை தகுந்த சமயத்தில் தருவார். என்னைச் சரியான பாதையில் நடத்துவார் என்ற உறுதியான உளப்பாங்கு. நல்வாழ்வின் அடையாளமாய் விளங்கும் இயேசுவை ஏற்று, துன்பத்திலும் மனந்தளராமல் அவர் வழி நடப்பதே திடமான நம்பிக்கை.

சுருக்கமாக ஒரே வரியில் கூறினால் பாவநிலையிலிருந்து மனமாற்றம் பெற்று, கடவுள் தரும் புதுவாழ்வின் அடையாளமாய்த் திகழும் இயேசு என்னும் நற்செய்தியை நம்பி அவர் வழி நடக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இச்சிந்தனைகளை நம் உள்ளத்தில் இறுத்தி, இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல உலகத்தைச் சாராதவர்களாய் வாழ்ந்து உண்மையான மனமாற்றம் பெற்று, நற்செய்தியாம் இயேசுவை நம்பி அவர் வழி வாழ்ந்திடத் தேவையான அருளை வேண்டுவோம்.

மேலும் மனம் மாறி நற்செய்தியை நம்பிய பிறகு அந்த நற்செய்தி பிறருக்கு அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கிணங்க நற்செய்தி பிறருக்கு அறிவித்து இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகரவும் நம்மையே முழுமையாக இறைவனின் கரங்களில் ஒப்படைப்போம். குயவனின் கையிலுள்ள மண் எவ்வாறு அழகிய பானையாக உருமாறுகின்றதோ, அதேபோல நம்மையே முழுமையாக இறைவனின் பாதத்தில் ஒப்படைத்து அடைந்த மனமாற்ற வாழ்வில் நிலைத்திருந்து நம்பிய நற்செய்தியை பிறகு அறிவித்து இறைக்கருவியாக மாறிட  தேவையான அருளை வேண்டுவோம். 

இறைவேண்டல்

புதுவாழ்வு அருளும் இறைவா! எங்கள் பழைய பாவ நிலையை விட்டகன்று, மனம் மாறவும், உமதன்பின் நற்செய்தியான இயேசுவை நம்பி வாழ்ந்து நாங்களும் நற்செய்தியாய்த் திகழவும் அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 1 =