மத எல்லைக்கு அப்பாற்பட்ட தமிழ் மொழி – கனடா பேராசிரியர்


செந்தமிழாம் தமிழ்மொழி மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்று கனடாவின் துரந்தோ பல்கலைகழகப் பேராசிரியரும் கவிஞருமான உருத்ரமூர்த்தி சேரன் தெரிவித்துள்ளார்.

 

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் இந்திய மொழிகள் துறையில் சொற்பொழிவாற்றியபோது இந்த கருத்தை அவர் தெரிவித்தார். .

 

இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில், புலம்பெயர் இலக்கியம் குறித்த உரையரங்கத்தில், "புலம்பெயர் இலக்கியம்; இடப்பெயர்வும் அடையாளச் சிக்கல்களும்" எனும் தலைப்பில் கனடாவின் துரந்தோ பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான உருத்ரமூர்த்தி சேரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 

புலம்பெயரும் நிகழ்வை புலம்பெயர்வு-புலப்பெயர்வு எனப் பாகுபடுத்தலாம். இதில் புலம்பெயர்வு என்பது எவ்விதக் கட்டாயமுமின்றி தானாக இடம்பெயர்வது.

 

புலப்பெயர்வு என்பது கட்டாயத்தின் பேரிலான குடியேற்றம். இதற்கு பொருளாதார நெருக்கடி, சுற்றுச்சூழல் நெருக்கடி, வாழ்வியல் நெருக்கடி போன்றவை காரணிகளாக அமைகின்றன.

 

பழைமை வாய்ந்த செவ்வியல் மொழிகளில் தமிழ்மொழி மட்டும் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டுத் திகழ்கிறது.

 

அதனை மத எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை. சமணம், புத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம், என எல்லாவற்றுக்கும் பொதுவானது.

 

அதேபோல், நிலவரையறைகளுக்கும் அப்பாற்பட்டது தமிழ் மொழி. அதனாலே தான் ’தமிழ்கூறு நல்லுலகம்’ எனும் தொடர் உருவாக்கம் பெற்றிருக்க முடியும் என்று அவர் பேசியுள்ளார்.

Add new comment

1 + 4 =