Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தாழ்ச்சி நம்மை வீழ்ச்சிக்குள்ளாக்காது! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection
ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு
I: சீஞா: 35: 12-14, 16-18
II: திபா 34: 1-2. 16-17. 18,22
III: 2 திமொ: 4: 6-8, 16-18
IV: லூக்:18: 9-14
தாழ்ச்சி என்ற ஒரு உன்னதமான பண்பு மனிதனை மாண்பு மிக்கவராய் மாற்றுகின்றது எனக் கூறினால் அது மிகையாகாது. தாழ்ச்சி என்பது என்ன? உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்வதே தாழ்ச்சி. Accepting the reality என ஆங்கிலத்தில் சொல்வார்கள். உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளுதல் எனக் கூறும் போது அதிலே தன்னை மிகைப்படுத்தி பிறரை குறைபடுத்தி ஒப்பிட்டுப் பார்க்கும் குணமானது அடியோடு இருக்காது. அதுதான் தாழ்ச்சி.
ஒருமுறை ஒரு கல்லூரியில் நடன கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வழக்கமாக அக்கல்லூரியில் நடனம் என்றாலே இவர்தான் எனச் சொல்லும் அளவுக்கு ஒரு மாணவியின் நடனம் எப்போதும் பங்குபெறுவதுண்டு. அந்த வருடம் அம்மாணவியின் காலில் ஏற்பட்ட பிரச்சினையால் ஆட இயலவில்லை. மற்றொருவர் நடனமாடினார். அவரும் நன்கு பயிற்சி எடுத்து சிறப்பாகவே செய்தார். எல்லாருடைய பாராட்டையும் பெற்றார். இதை ஏற்றுக்கொள்ள இயலாத மாணவி தம் அருகிலுள்ளோரிடம் "நான் ஆட வேண்டியது. என்னால் இயலவில்லை. நான் ஆடியிருந்தால் இதைவிட சிறப்பாகவே செய்திருப்பேன் " என்று கூறிக்கொண்டே இருந்தார். நடனமாடிய மாணவியை பாராட்டச் சென்ற அவர் "பரவாயில்லை. இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் " என்று மற்றவர் கேட்கும்படி சொல்லிவிட்டுச் சென்றாராம்.
அம்மாணவி நன்றாக நடனமாடுபவர் தான். ஆயினும் தன்னுடைய நிகழ்கால நிலையை உள்ளவாறு ஏற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. எனவே தன்னை மிகைப்படுத்தி மற்றவரைத் தாழ்த்தும் குணம் மேலோங்கி நின்றதை நாம் காண்கிறோம் அன்றோ. இத்தகைய மனநிலை நம்மிலே எத்தனை பேருக்கு உண்டு? நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நம்மிலே பலர் இம்மனநிலை கொண்டுதான் வாழ்கிறோம்.
இன்றைய நற்செய்தியில் காணும் பரிசேயர் இந்த மனநிலையையே பிரதிபலிக்கிறார்.
தற்பெருமை எண்ணம் கடவுளுக்கு முற்றிலும் அருவருக்கத்தக்கது. தாழ்ச்சியற்ற மனநிலைதான் தூதராக இருந்த லூசிபரை சாத்தானாக்கியது என்கிறது நம் கிறிஸ்தவ பாரம்பரியம்.
கடவுளுக்கு உகந்த மனநிலை தாழ்ச்சி நிறைந்த உள்ளமே. தாழ்ச்சியோடு செபிக்கிறவரின் குரல் முகில்கள் வழியே ஊடுருவி ஆண்டவரை அடைவதாகச் சொல்கிறது முதல் வாசகம். தாழ்ச்சியோடு தன் மார்பில் அடித்துக்கொண்டு வேண்டல் செய்த வரிதண்டுபவர் கடவுளுக்கு ஏற்புடையவரானார் என்கிறார் இயேசு நற்செய்தியில்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் தாழ்ச்சியுடையவராய் வாழ முயற்சித்துப் பார்ப்போமா? நிச்சயம் நம்மை நம்மோடு வாழும் எல்லாருக்கும் பிடிக்கும். அதைவிட கடவுளுக்கு இன்னும் அதிகம் பிடிக்கும். நம்மை எல்லாரும் அணுகுவார்கள். நம்மை அண்ணார்ந்து பார்ப்பார்கள். இது உண்மை. உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொண்டு ஒப்பிட்டு பார்ப்பத்தைத் தவிர்த்தால் நாம் உயர்ந்து கொண்டே செல்லலாம். கடவுளுக்கும் உகந்தோராகலாம். தாழ்ச்சியோடு செபிப்போம். கடவுள் முன்னும் பிறர் முன்னும் பணிவோடு வாழ்வோம். உயர்வோம்.
தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இறைமகன் இயேசுவின் உள்ளம். நம் தாய் அன்னை மரியாள் கொண்டிருந்த உள்ளம். தொடக்கத்தில் ஆதி பெற்றோர்கள் தாழ்ச்சி இல்லாமல் இருந்தார்கள். எனவே இந்த உலகத்திற்கு பாவம் சாத்தான் வழியாக வந்தது. அன்னை மரியாவும் இயேசுவும் தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ்ந்தார்கள். எனவே இந்த உலகத்திற்கு மீட்பு வந்தது. எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தாழ்ச்சி நிறைந்த ஆன்மீக உள்ளத்தோடு வாழ்வில் சிறப்பாக பயணமாவோம். நம்முடைய வாழ்க்கையில் நம்மைப் பற்றி தற்பெருமையாக பேசக்கூடிய மனநிலையை முற்றிலும் அகற்றுவோம்.
நம்முடைய கத்தோலிக்கத் திருஅவை கேவலம் சாதியை வைத்து பிழைப்பு நடத்தக்கூடிய அவல நிலையில் பயணமாகிக் கொண்டிருக்கிறது. திருஅவையின் போர்வையிலே சாதியக் கூட்டங்களும் தன் சாதியை மையப்படுத்திய உரையாடல்களும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த மனநிலை இறைவனுக்கு அர்ப்பணிக்க பட்டவர்கள் மத்தியிலும் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற இறைமக்கள் மத்தியிலும் போய்க் கொண்டிருப்பது கடவுளுக்கு முன்பாக அருவருப்பானது. தன்னுடைய சாதி தான் உயர்ந்தது என்று தற்பெருமை யோடு வாழக்கூடியவர்களுக்கு வீழ்ச்சி என்பது வெகு தொலைவில் இல்லை. யாரெல்லாம் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளை வாழவில்லையோ, அவர்களால் சிறப்பான ஆசிர்வாதத்தை நோக்கிப் போக முடியாது. முழுமையான நிறைவான வாழ்க்கையைப் பெற முடியாது.
எனவே பாகுபாடுகளைக் களையும் பொழுது தான் நம்முடைய திரு அவையும் இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வளரும். இல்லையென்றால் திருஅவை அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எனவே தற்பெருமையோடு சாதியத்தை தூக்கி பிடிக்கும் கிறிஸ்துவின் இறைப்பணியாளர்களையும் இறைமக்களையும் பார்த்து கடவுள் கண்டனம் செய்கிறார். எனவே நம்மோடு வாழக்கூடிய ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு பயணமாக முயற்சி செய்வோம். எனவே இறைவனின் அருளைப் பெற எதெல்லாம் இறையாட்சி மதிப்பீடுகளுக்கு எதிராக இருக்கின்றதோ அவை அனைத்தையும் களைய முற்படுவோம். தற்பெருமையை அகற்றி தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்து இயேசுவின் இறையரசைக் கட்டி எழுப்ப தேவையான அருளை வேண்டுவோம். அழிவை நோக்கி வழிநடத்தும் சாதியத்தை உயர்த்தி பிடிக்க ஊக்கமூட்டும் தற்பெருமையை அகற்ற நல்ல ஞானத்தை வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பான இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நாங்கள் அனைவரும் உம்முடைய பிள்ளைகள் என்ற மனநிலையில் வாழ அருளைத் தாரும் .தாழ்ச்சி நிறைந்த மனநிலையோடு உள்ளதை உள்வாறு ஏற்கும் மனநிலையைத் தாரும். எங்களைப் பிளவுபடுத்த கூடிய கேவலம் சாதி போன்ற பாகுபாடுகளைக் களைந்து இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி எந்நாளும் வாழ்ந்திட நல்ல ஞானத்தைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment