கடமையில் கருத்தாய் இருப்போமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(08.11.2022) 
ஆண்டின் பொதுக்காலம் 32 வாரம் - செவ்வாய்  
மு.வா: தீத்து:  2: 1-8,11-14
ப.பா: தி பா : 37: 3-4, 18,23. 27,29
ந.வா: லூக்: 17: 7-10

 கடமையில் கருத்தாய் இருப்போமா? 

கடமை என்பது வெறும் மூன்றெழுத்து வார்த்தையல்ல. அது ஒவ்வொருவருக்குள்ளும் குடியிருக்க வேண்டிய உணர்வு.இந்த கடமை உணர்வு என்ற ஒன்று இல்லாவிட்டால் எந்த பணியும் சிறப்பாக அமையாது என்பதுதான் உண்மை. வேலை அல்லது பணியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதன் நிறைவினை அதன் பலனை கடமை உணர்வு உள்ளவர்களாலேயே உணர முடியும்.

வேலையாள் கூலியை எதிர்பார்ப்பது தவறில்லை. ஆனால் செய்த வேலைக்கு பாராட்டும் அங்கீகாரமும் எதிர்பார்ப்பது தவறு. அவை எப்போதும் கிடைப்பதில்லை. அவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை பார்த்தால் அல்லது பணியைச் செய்தால் அது உண்மையான பணியாளருக்கு அழகில்லை. இதைத் தான் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு விளக்குகிறார்.

"நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.” என்று இயேசு கூறுகிறார். அதாவது நாம் செய்த பணிகளுக்கான கைமாறை நாம் எதிர்பார்க்காது நாம் கட்டாயமாக செய்து முடிக்க வேண்டிய ஒரு பணி என்ற எண்ணத்தோடு நாம் செய்ய என்பதே இதன் பொருள். 

ஏனெனில்  பாராட்டையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து நாம் கடமைகளைச் செய்யும்  போது நம்முடைய உள்நோக்கம் தன் தூய்மையை இழக்கிறது. எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. அவை நிறைவேறா வேளைகளில் வெறுப்பும் ஏனோதானோ என பொறுப்புகளை செய்யும் மனநிலையும் வளர்கிறது. இறுதியில் நாம் எந்த பாராட்டையும் சன்மானத்தையும் பெற எண்ணினோமா அதற்கு எதிர்மாறான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் இகழ்ச்சிகளையும் நாம் பெற வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. நம்மிலே பலருக்கு கடமை உணர்வுகள் மழுங்கியதற்கு இதுவே காரணம். எனவே "கடமையைச் செய். பலனை எதிர்பாராதே "என்ற மனநிலையில் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

திருமுழுக்கு பெற்ற நம் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது நம்மேல் சுமத்தப்பட்ட கடன். அதை நாம் எத்தகைய கடமை உணர்வோடு செய்கிறோம் எனவும் நாம் சிந்திக்க வேண்டும். அக்கடமையை நாம் மிகுந்த கடமை உணர்வோடு செய்தோமெனில் நாம் எதிர்பார்க்கத் தேவையில்லை. நமக்கான கைமாறு உறுதியாக விண்ணகத்தில் கிடைக்கும்.
கடமையில் கருத்தாய் இருப்போமா?

 இறைவேண்டல் 
ஆற்றலின் இறைவா!
சன்மானம் எதிர்பாராது கடமைகளில் கருத்தாய் இருந்து பணிபுரிய வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 0 =