Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மிரட்டல்களை கண்டு பணிய மறுக்கும் பிலிப்பீன்ஸ் ஆயர்
பிலிப்பீன்ஸ் அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் அந்நாட்டு ஆயர் ஒருவர் கொலை மிரட்டல்களை பெற்றுள்ள நிலையிலும், தனது விமர்சனத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை எதிர்க்க போவதாக தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய பாதுகாப்பு பற்றி அச்சப்படுவதற்கு முன்னால், அரசின் போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் ஏழைகளின் பாதுகாப்பு பற்றி தான் அச்சப்படுவதாக பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள காலூகான் மறைமாவட்ட ஆயர் பாபிலோ விர்ஜிலியோ கூறியுள்ளார்.
விரக்தியாலும், நம்பிக்கையில்லாத நிலையாலும் சட்டபூர்வமற்ற போதைப்பொருள் வர்த்தகத்தால் மிகவும் பாதிக்கப்படும் வர்த்தக்தினராக ஏழைகள் உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான அரசின் நடவடிக்கை அறநெறியற்றதாகவும், நினைத்து கூடபார்க்க முடியாத கொடுமையாகவும், விரக்தியின் உச்சக்கட்டமாகவும் இருப்பதாக பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவையின் துணை தலைவரான இவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போதைப்பொருள் ஒழிப்பை செயல்படுத்துவோர் மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்குகின்ற சட்டத்தின் சரத்துக்களை மதித்து செயல்படுத்தியிருந்தால், இந்த போதைப்பொருள் ஒழிப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
அதிபர் பொறுப்பை ஏற்றவுடன், மூன்று முதல் ஆறு மாதங்களில் போதைப்பொருட்களை ஒழித்து விடுவதாக அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே வாக்குறுதி அளித்திருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் சட்டத்திற்கு புறம்பாக மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Add new comment