சபரிமலை விவகாரம் - பிற மாநிலங்களிலும் போராட்டங்கள்


இந்தியாவின் தெற்கு பகுதியிலுள்ள கேரளா மாநிலத்தில் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஜனவரி 2ம் தேதி  50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2 பேர் தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவத்தை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

 

சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

 

சபரிமலையில் பெண்களை அனுமதித்த விவகாரத்திற்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

 

அன்றைய தினம் சபரிமலை கோவிலில் அதிகாலையில் இரு பெண்கள் சாமி தரிசனம் செய்ய கேரள அரசு முழு உதவியையும் வழங்கியுள்ளது.

 

இருட்டில் கருப்பு உடையணிந்து, காவல்துறையின் பாதுகாப்புடன் கோவிலுக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல விரும்பினால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிராக கேரளாவில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றுள்ளன.

 

டெல்லியில் கேரள அரசு இல்லம் அமைந்துள்ள ஜந்தர்மந்தர் சாலையில் பேரணியாக சென்ற பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர், கேரள இல்லம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

மேலும், பெங்களூருவிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவை மாவட்டங்களிலும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Add new comment

11 + 0 =