கிறிஸ்துவை அறிவிக்கத் தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா
I: திப:  12: 1-11
II : திபா: 34: 1-2. 3-4. 5-6. 7-8
III: 2திமோ:4: 6-8, 17-18
IV: மத்:  16: 13-19

இன்று நம் தாய் திருஅவை புனிதர்களான பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. யூத நம்பிக்கையாளர்கள் மற்றும் புவினத்தாரிடையே இயேசுவைப்பற்றிய நம்பிக்கையை பறைசாற்றி திருஅவையை  வளர்ப்பதில் இந்த இரண்டு புனிதர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது.

அவர்களை இந்த உலகம் முழுவதும் இயேசுவை அறிவிக்க வைத்தது எது?  கடவுளின் மகன்  இயேசுதான் எனத் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் அனுபவத்தைத் தவிர வேறில்லை என நாம் அறுதியிட்டுக் கூறமுடியும் அன்றோ?

சீடர்களிடையே இயேசுவை"நீர் வாழும் கடவுளின்  மகன் . வரவிருக்கும் மெசியா "என்று பேதுருவைத் தவிர வேறு யாரும் உரக்கச் சொல்ல முடியவில்லை. அவர் இயேசுவை மெசியாவாக, வாழும் கடவுளாக நெருக்கமாக அனுபவித்திருந்தார். அவ்வாறு அனுபவித்ததை அவர் அறிக்கையிட்டார். அவருடைய இந்த நம்பிக்கை அறிக்கை அவரைத் திருஅவையின் தலைவராக்கியது.

தன்னை ஒரு திருத்தூதன் என்று கூறிக்கொண்ட பவுல், இயேசுவை சந்தித்தபின் ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டிருந்தார்.பேதுருவைப்போல பவுல் இயேசுவோடு வாழ்ந்து அவருடைய போதனைகளைக் கேட்கவில்லை. யூத மறையைத் தீவிரமாகத் தழுவிய அவர் புதிதாக உருவெடுத்த கிறிஸ்தவ நம்பிக்கையை வெறுத்தாலும்,  இயேசுவை தமஸ்கு போகும் வழியில் சந்தித்த நிகழ்வு  நற்செய்தியை அவர்  பரப்புவதற்கு ஒரு சிறந்த. உந்து சக்தியாக இருந்தது.

நாம் இயேசுவைத் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறோமா? நம் அன்றாட வாழ்க்கையில்  இயேசுவை சந்திக்கிறோமா? அவ்வாறெனில்  நாம் அனுபவித்த, மனதால் சந்தித்த இயேசுவைப் பறைசாற்றாமல் நம்மால்  அமைதியாக இருக்க இயலாது . எனவே இயேசுவை நம்முடைய ஆழ்மனதில் ஆழமாக அனுபவிக்க வரம் கேட்போம். நம் வார்த்தையால் மட்டுமல்ல வாழ்வாலும் இயேசுவைப் புனிதர்கள்  பேதுரு மற்றும் பவுலைப் போல பறைசாற்றத் தயாராவோம்.

இறைவேண்டல்

அன்பு இயேசுவே உம்மை எம் வாழ்வில் அனுபவித்து பறைசாற்ற வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 6 =