கடவுளின் உடனிருப்பைத் தவிர எல்லாம் சிறிது காலமே! | குழந்தைஇயேசு பாபு | Daily reflection


பாஸ்கா காலம் - ஆறாம் வியாழன்; I: திப: 18:1-8; II: தி.பா: 98:1,2-3,3-4; III : யோவான்: 16:16-20

மனிதனுடைய வாழ்வு நிலையற்றது. மகிழ்ச்சியான தருணங்களும் சில நாட்களே. வாழ்வின் கஷ்டமான சூழ்நிலைகளும் சிலநாட்களே.ஆனால் கடவுளின் உடனிருப்பும் அன்பும் நம் வாழ்வில் எப்போதும் இருக்கக்கூடியவை என்பதை உணர்ந்து வாழ இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.

இயேசு தம் சீடரிடம்: “இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்றார். என்று இன்றைய  நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகளைத் தியானிக்கும் போது நமக்குச் சற்று குழப்பமான மனநிலை உருவாகலாம். ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் போது அதில் பொதிந்துள்ள இறை செய்தியை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

எல்லாருடைய வாழ்விலும் கடவுள் அனுபவம் மிக இன்றியமையாதது. கடவுளின் உடனிருப்பை நாம் பல வேளைகளில் உணர்கிறோம். ஆனால் சில வேளைகளில் உணர இயலவில்லை. கடவுள் நம் அருகில் இல்லாதது போலத் தோன்றும். இத்தகைய அனுபவங்களை கடவுள் நமக்குத் தருவது ,நாம் வாழ்வில் நம்பிக்கை இழக்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக அச்சமயத்திலும் கடவுளின் உடனிருப்பை நம்பி வாழ்வில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதற்காகவே.

சீடர்கள் ,இயேசு உயிர்த்தபிறகு இயேசுவைக் கண்டாலும் அவர்களிடம் மனக்கலக்கம் இருந்தது. மேலும் அவருடைய விண்ணேற்பு பற்றிய செய்திகள் அவர்களின் மனதில் இயேசு தங்களோடு இருக்கப்போவதில்லை என்ற பயத்தை அதிகரித்தது. எனவே தான் இயேசு சிறிதுகாலம் என்னைக் காணமாட்டீர்கள். துக்கத்தில் மூழ்குவீர்கள். அழுவீர்கள். ஆனால் மீண்டும் என்னுடைய உடனிருப்பு உங்களை ஆதரிக்கும். நீங்கள் மகிழ்வீர்கள் என்று வாக்களிக்கிறார்.

நம்முடைய துன்ப துயர நேரங்களில் நாம் உணர வேண்டியது இதுவே. "கடவுள் என்னோடு இல்லாதது போலத் தோன்றும் இந்நாட்கள் சிலகாலமே. எல்லாம் கடந்து போகும். கடவுள் மட்டும் என்னோடு இருப்பார்".
இத்தகைய நம்பிக்கையில் நாளும் வளர இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நீர் எங்களோடு என்றும் இருக்கிறீர். துன்ப துயர நாட்களில் உம்முடைய உடனிருப்பை உணர்ந்து வாழ அருள் தாரும்.ஆமென்.

Add new comment

7 + 6 =