பிறர்நலத்தில் இறைவனைக் காண்போமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின்  ஐந்தாம் ஞாயிறு   
I: யோபு:  7: 1-4,6-7
II:  தி.பா: 147: 1-2. 3-4. 5-6
III: 1 கொரி: 9: 16-19, 22-23
IV: மாற்: 1: 29-39

மனித வாழ்வு என்பது இறைவன் நமக்குக் கொடுத்த கொடை. இந்த வாழ்வை நமக்காக மட்டும் வாழாமல் பிறருக்கு வாழ்வு கொடுக்கக்கூடிய வகையில் வாழ்வதுதான் உண்மையான வாழ்வு. நம்முடைய முன்மாதிரி ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறை மகனாக இருந்தபோதிலும் ஒரு மனிதருக்குரிய மனநிலையில் பிறர்நலத்தோடு தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து, நம்மையும் அவ்வாறு வாழ அழைக்கிறார். இப்படிப்பட்ட வாழ்வு எனக்குப் பின்னும் தொடரப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 12 சீடர்களை அழைத்து அவர்களுக்கு திருத்தூதர் என்று பெயரிட்டார். சீடர்களும் இயேசுவோடு இருந்து வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொண்ட பிறகு, இயேசுவின் பெயரால் துணிவோடு நற்செய்தியை உலகமெங்கும் அறிவிக்கத் தயாராகி எதையும் இழக்கத் துணிந்தனர். இயேசுவைப் போல பிறர்நலத்தோடு நம்மையே இழந்து பிறருக்கு வாழ்வளிக்கும் பொழுது, நாம் இறைவன் கொடுத்த இந்த மனித வாழ்விற்கு பொருள் கொடுக்கிறோம். இத்தகைய   பிறர் நலச்சிந்தனையை பற்றி சிந்திக்கத் தான் இன்றைய நற்செய்தி வாசகமானது நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

பிறர் நலவாழ்வுக்கு மனிதநேயம் தான் அடிப்படையாக இருக்கின்றது. நம்முடைய தமிழகத்தை எத்தனையோ இயற்கை சீற்றங்கள் தாக்கியது. சுனாமி பேரலை நிகழ்ந்த பொழுது எண்ணற்ற கடலோர மக்கள் பாதிக்கப்பட்டார்கள். தங்களுடைய வாழ்வாதாரத்தையும் உறவினர்களின் உயிரையும்  இழந்து தவித்து நின்றார்கள். அப்படிப்பட்ட அந்த மக்களுக்கு எண்ணற்ற நல்ல உள்ளங்கள் உதவி செய்து மறுவாழ்வு பெற்றுக்கொள்ள வழிகாட்டினார்கள். 

ஒக்கி புயலால் எண்ணற்ற கடலோர மக்கள்,   நிலப்பரப்பு பகுதியை கொண்ட மக்களும்  பாதிக்கப்பட்டு பெரும் சேதத்திற்கு உள்ளானார்கள். அப்பொழுதும்  பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியால்தான் அவர்கள் மறுவாழ்வு பெற்றார்கள். 

 தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மழைவெள்ளம் நகர்ப்புற பகுதிகளை பாதிப்புக்கு உள்ளாகியது. அதிலும் குறிப்பாக சென்னை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்பொழுது பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவிக்கரம் தான் அந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை கொடுக்க முடிந்தது.  

இவ்வாறாக பல்வேறு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தகைய நலப்பணிகளுக்கு அடிப்படையாக இருப்பது மனிதமும் மனிதநேயமும்  ஆகும்.  இப்படிப்பட்ட மனித நேயப்பார்வையோடு வாழத் தான் ஆண்டவர் இயேசு நம்மை அழைக்கிறார். இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்ந்து காட்டி நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார்.

ஆண்டவர் இயேசுவின் மூன்றாண்டு இறையாட்சிப் பணியை ஆய்வு செய்து பார்த்தோமென்றால் அவரின் பிறர்நல மனிதநேய செயல்பாடுகளை பார்க்க முடியும். இத்தகைய பார்வை இயேசுவுக்கு இருப்பதற்கு  "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்."        (லூக்: 4: 18-19) என்ற எசாயாவின் இறைவாக்கு அடிப்படையாக இருந்தது.  எனவேதான் தன்னுடைய போதனைகளின் வழியாகவும் வல்லசெயல்களின்  வழியாகவும் இறையாட்சி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்து பிறர்நலத்தோடு வாழ முடிந்தது. 

இயேசு தன்னுடைய வல்லசெயல்களை மூன்று இடங்களில் செய்தார் என்பதைப் பார்க்கிறோம். 1. தொழுகைக் கூடம்,  2. நண்பர்களின் வீடு,  மற்றும்  3. தெருவீதி.  இயேசு நேரம், இடம், நாள்,  ஆள் போன்றவற்றை பார்த்து அவர் தனது வல்ல செயலை செய்யவில்லை. மாறாக தேவையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனது உதவி கிடைக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருந்தார்.  அந்த வரிசையில் தான் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு  தொழுகைக் கூடத்தில் தனது பணியை செய்துவிட்டு உணவருந்தலாம் என்று சீமோன்  வீட்டிற்கு இயேசு சென்றார். களைப்போடு இயேசு இருந்த போதும், சீமோனுடைய மாமியார் காய்ச்சலால் படுத்து கிடந்ததைக் கண்டு இயேசு அவர்மீது பரிவு கொண்டார்.  தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக சீமோன்  மாமியாரின்  அருகில் சென்று, கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்கு பணிவிடை செய்தார் என்ற நிகழ்வை நாம் வாசிக்கிறோம். இந்த வல்லசெயல் இயேசுவின் மனிதநேயத்தையும் பிறர்நல எண்ணத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இன்றைய நாளில் இயேசு செய்த இந்த வல்லசெயலில்   வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு சீமோனின் மாமியாரின் காய்ச்சலை குணப்படுத்தினார். இந்த நிகழ்வு இயேசு பெண்களுக்கு கொடுத்த மதிப்பையும் மாண்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது . யூத சமூகத்தில் பெண்களை யூத ஆண்கள் இரண்டாம் தர குடிகளாகக் கருதினார்கள்.  குறிப்பாக ஒவ்வொரு யூத ஆணும் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் "நான் பெண்ணாக பிறக்காமல் இருந்ததற்காகவும் பிற இனத்தாராக   பிறக்காமல் இருந்ததற்காகவும் ஒரு நாயாய் பிறக்காமல் இருந்ததற்காகவும் இறைவா உமக்கு நன்றி! " என்று செபிக்கும்  வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்று விவிலிய அறிஞர்கள் கூறுவர்.  மேலும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் இருந்தன.  இப்படிப்பட்ட பின்னணியில் இருந்தபோதிலும் இயேசு பெண்களின் மதிப்பும் மாண்பும்  உயர்த்த பெற முக்கியத்துவம் கொடுக்கிறார். நம்முடைய வாழ்விலும்  நம்மோடு வாழக்கூடிய பெண்களை மதிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த உலகமே இயங்குகிறது என்றால் அது பெண்ணால்தான். ஏனெனில் கடவுள் மனிதனைப் படைக்கும் பொழுது பெண்ணுக்கு மட்டும்தான் ஒரு உயிரை பெற்றெடுத்து இந்த உலகத்திற்கு கையளிக்க அருளையும் ஆசியையும் கொடுத்துள்ளார். நாம் அனைவரும் இருக்கின்றோம் என்றால் அது நடமாடும் கடவுளாகிய நம்முடைய தாயின் வழியாகத்தான். எனவே நம்மோடு வாழக்கூடிய பெண்களை மதித்து அவர்களை நம் தாயாகவும் சகோதரிகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் எதிர்த்து  உரிமை குரல் எழுப்ப நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 

இயேசு பேதுரு மாமியாருடைய கையை பிடித்து அவரை தூக்கி காய்ச்சலிருந்து அவரை குணப்படுத்தினார். 'தொடுதல்' என்பது முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. நாம் வாழக்கூடிய பகுதிகளில் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ நபர்கள் இருப்பார்கள். அவர்களை கண்டும் காணாமல் இருக்காமல், அவர்களை சந்தித்து "நான் இருக்கின்றேன். கடவுள் உங்களோடு இருக்கிறார்.தொடர்ந்து உங்களுக்காக செபிக்கிறேன்" என்று சொல்லி அவர்களை திடப்படுத்தும் பொழுது அவர்கள் விரைவிலேயே குணமடைய முடியும். இவற்றைத்தான் ஆண்டவர் இயேசுவும் செய்தார். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் ஒருவர் நோயுற்றால் 'அவர் கடவுளால் சபிக்கப்பட்டவர் ' என்று ஒதுக்கப்பட்டார்.   இயேசு இத்தகைய பார்வையைத் தவறென தன்னுடைய வல்லசெயல்களின் வழியாக சுட்டிக்காட்டினார். நோயாளர்களை குணப்படுத்தி புது வாழ்வை வழங்கினார். அவர்களும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வழிகாட்டினார். இத்தகைய பணிகளைத் தான் நாமும் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். கொரோனா என்ற தொற்றுநோய் இந்த உலகையே உலுக்கிய பொழுது,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களுக்கு உதவி செய்ய பலர் தயங்கினார்கள். அது தன்னையும் பாதித்து விடுமோ என்று பயப்பட்டார்கள். ஒரு சில தன்னார்வ தொண்டர்கள் கொரோனாதொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்தார்கள். நாம் நம்மோடு வாழக்கூடியவர்கள் நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு இயேசுவின் அன்பையும் இரக்கத்தையும் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு கொடுக்கின்ற பொழுது நாம் நோயாளர்களுக்கு சமூக அங்கீகாரத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கொடுக்க முடியும்.

"மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள்,  பேய் பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள் " (மாற்: 1: 32) என வாசிக்கின்றோம். இயேசு நோயாளர்களையும் பேய் பிடித்தவர்களையும் குணமாக்கி அவர்களுக்குப் புது வாழ்வை வழங்கினார்.இத்தகைய மனநிலை தான் பிறர் நல மனநிலை. இத்தகைய மனநிலையை வாழ்வாக்க தான் இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். 

மனிதநேயம் நிறைந்த பிறர்நலப் பணிசெய்ய இயேசுவுக்கு ஆற்றல் கிடைத்ததற்கு அடிப்படைக் காரணம் என்ன?  என்பதும் இன்றைய நற்செய்தியில் நாம் அறிய முடிகின்றது. "இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனியான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.  அங்கே  அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்" (மாற்: 1:35). இயேசு இறைவேண்டலின் வழியாகத்தான் தன் தந்தையின் திருவுளத்தை அறிந்து அதை நிறைவேற்ற ஆற்றலையும் பெற்றுக்கொண்டார். எனவே பிறர் நலப்பணி செய்ய அடிப்படையாக இருப்பது இறைவேண்டல். நாம் எந்தப் பணி செய்தாலும் இறைவனிடம் முழுவதுமாக அர்ப்பணித்து விட்டு செய்யும் பொழுது, நாம் வெற்றியை சுவைக்க முடியும். புனித அன்னை தெரசாள் எண்ணற்ற பிறர்நல மனிதநேயப் பணிகளைச் செய்தார் என்பது நாம் அறிந்ததே. அவர்கள் செய்த இந்த பணிக்கு அடிப்படையாக இருந்தது இறைவேண்டல் மட்டுமே. இறைவேண்டலின் வழியாகத்தான் ஆண்டவர் இயேசுவின் மனநிலையை பெற்றுக்கொள்ள  முடியும். ஆண்டவர் இயேசுவின் மனநிலையில் பயணிக்கின்ற பொழுது மட்டும் தான் மனித சேவையில் புனிதம் காணமுடியும்.   கடவுள் கொடுத்த இந்த வாழ்வை பிறருக்காகவும் இறையாட்சி மதிப்பீட்டிற்காக வாழ்வோம். அப்பொழுதுதான் நம் வாழ்வு ஆண்டவர் இயேசுவைப் போல  பொருள் நிறைந்த வாழ்வாக  மாறும். பிறர் நலப்பணியின் மூலம் இயேசுவின் இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகரத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! நீர் எங்களுக்குக் கொடுத்த வாழ்விற்காய் நன்றி செலுத்துகிறோம். இந்த வாழ்வை எங்களுக்காக மட்டும் வாழாமல், உன் மகன் ஆண்டவர் இயேசுவைப் போல பிறர்நலத்தோடு  வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

9 + 8 =