நம்பிக்கைதான் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் மூன்றாம் சனி - I. எபி: 11:1-2,8-19; II. லூக்: 1:69-70.71-73.74-75; III. மாற்கு: 4:35-41

சிவகங்கை மறைமாவட்டத்தில் முத்துப்பட்டினம் என்ற ஒரு கிராமம் இருக்கின்றது. அங்கு புனித வனத்து  அந்தோனியாரின் திருத்தலம் இருக்கிறது. அங்கு ஏராளமான திருப்பயணிகள் இறைவேண்டல் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். நோயும் பேயும் புனித வனத்து அந்தோணியாரின் பரிந்துரையால் தங்களை விட்டு விலகுகின்றது என்று ஆழமாக நம்பிக்கை கொண்டு வருகின்றனர். இந்தப் புனிதமான திருத்தலத்தில் எனது சொந்த ஊரிலிருந்து ஒருவர் தீய ஆவியால் பாதிக்கப்பட்டதால் மிகவும் துன்பப்பட்டார்கள். பல்வேறு நோய்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளானார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் முத்துப்பட்டணம் புனித வனத்து அந்தோனியாரின் ஆலயத்தை நோக்கிச் சென்று அங்கே தங்கினர். அப்பொழுது அங்கு சென்றவுடன் தான் நலம் அடைவதாக நம்பினார். அவருடைய பிரச்சனை ஒரு வகையில் பயம் என்ற உளவியல் பிரச்சினை என்றாலும் புனித வனத்து அந்தோணியார் தன்னை இயேசுவிடம் பரிந்துரைத்து குணமளிப்பார் என்று ஆழமாக நம்பினார். இறுதியில் அவர் இத்தகைய உளவியல் சிக்கலிலிருந்து வெளியே வந்து புனித வனத்து அந்தோனியாரின் பரிந்துரையால் இறைவன் தன்னை முழுமையாகக் குணப்படுத்தி விட்டார் என்று நம்பினார். இப்பொழுது அவர் நலமோடு வாழ்கிறார்.

நம்பிக்கை என்பது? நாம் எதிர்நோக்கி இருப்பவை நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதி. இன்னும் ஆழமாகச் சொன்னால் "நம்பிக்கை என்பது நாம் கண்ணால் காண முடியாததை கூட எந்தவொரு ஐயமுமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலை". கடவுளை நாம் கண்ணால் காணாவிட்டாலும், நம்மைப் படைத்தவர் கடவுள் என்பதை நம்பி அவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பொழுது நம் வாழ்வு வளமான வாழ்வாக மாறும். நம்முடைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ பிரச்சனைகள் வரும். குடும்ப அளவில் சண்டை, புரிதலற்ற தன்மை, கடன் பிரச்சனை, சுயநலம், நோய் நொடிகள், ஏமாற்றம் போன்ற பல பிரச்சினைகள் இருக்கலாம். இவை அனைத்தும் இருந்தாலும் கடவுள் நம்மை முழுமையாகக் குணப்படுத்துவார் என்று ஆழமாக நம்பும் பொழுது, நிச்சயமாக நம் வாழ்வில் வளமையையும் வசந்தத்தையும்  காணமுடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் திருவிவிலியத்தில் நமக்கு முன்னோடியாக இருக்கும் யோபு.  யோபுவின் வாழ்வை ஆழமாகத் தியானித்துப் பார்த்தால், அவர் வாழ்வில் மகிழ்ச்சியை விட துன்பத்தையே அதிகமாக அனுபவித்தார். இருந்தபோதிலும் தன்னைப் படைத்த கடவுள் தன்னை கைவிட மாட்டார் என ஆழமாக நம்பி, இறுதியில் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றார். இத்தகைய மனநிலையை நாம் கொண்டிருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமின் நம்பிக்கையை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் வாசிக்கின்றோம். ஆபிரகாமை நம்பிக்கையின் தந்தை என அழைக்கின்றோம். இதற்குக் காரணம் என்னவெனில் ஆபிரகாமின் ஆழமான இறை நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் வயது முதிர்ந்த காலத்திலும் தன் மனைவி சாராள் வழியாக ஆண் குழந்தையைப் பெற்றார். கடவுள் தன் மகன் ஈசாக்கை பலியாக கேட்டபொழுது, ஒரு பக்கம் பாசம் தன்னை கவலைக்கு உட்படுத்தினாலும் இறைநம்பிக்கையின் பொருட்டு தனது அன்பு மகனையே பலி கொடுக்க முன்வந்தார். இத்தகைய நம்பிக்கை வாழ்வை தான் நம்முடைய வாழ்வாக மாற்றிக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.

தொடக்க கால கிறிஸ்தவர்கள் உண்மையான நம்பிக்கை வாழ்வுக்கு முன்னோடிகளாக இருக்கின்றனர். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் பல்வேறு துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும் உள்ளானாலும், கடவுள் தங்களை வழிநடத்துவார் என நம்பிக்கையோடு தங்கள் வாழ்விலே பயணித்தனர். இந்த மண்ணுலக வாழ்வை பெரிதும் பொருட்படுத்தாமல் கடவுளின் பேரின்ப வாழ்வைப் பெற்றுக்கொள்ளும் விண்ணக வாழ்வை நோக்கித்தான் அவர்கள் இருந்தனர். இதன் வழியாக அவர்கள் சொல்லும் பாடம் என்னவெனில் இந்த உலக வாழ்வு நிலையற்றது. எனவே இறை நம்பிக்கையோடு நம்மாலான நற்செய்திப் பணியை நம்முடைய சொல்லாலும் செயலாலும் செய்து, நாமும் பிறரும் மீட்பின் கொடையைப் பெற்றுக்கொள்ள தேவையான மனநிலையை பெற்றுக் கொள்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு நம்மை நம்பிக்கை உள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். இயேசுவோடு உடன் பயணித்த சீடர்கள் இயேசுவை முழுமையாக நம்பவில்லை. எனவே இயேசு அவர்களை நம்பிக்கை உள்ளவர்களாக வாழ அழைப்பு விடுத்துள்ளார்.  கலிலேயக் கடல் அடிக்கடி புயல் காற்று வரும் புவியியல் அமைப்பைக் கொண்டது. இதுவும் எதார்த்தமான ஒரு இயற்கை நிகழ்வு. அவற்றை கூட எதிர்கொள்ள முடியாத நம்பிக்கையற்ற மனிதர்களாக சீடர்கள் இருந்தனர். எனவே தான் அவர்களை கடிந்து கொண்டு "உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்ற வினாவினை முன்வைத்தார்.

கடவுள் நம்மைப் பார்த்தும் இந்தக் கேள்வியை நிச்சயம் கேட்பார். எப்பொழுதெனில் நாம் கிறிஸ்தவ வாழ்வை வாழுகின்றோம். இப்படிப்பட்ட வாழ்வு இறை நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதை நம்பாமல், நம் மனம் போன போக்கில் வாழும் பொழுது . ஒரு குழந்தை திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவின் பிள்ளையாக மாறுவதற்கு அடிப்படையாக இருப்பது நம்பிக்கை. ஒப்புரவு அருள்சாதனத்தின் வழியாக   நம் பாவங்களை குருவானவர் வழியாக இயேசு மன்னிக்கிறார் என்பது நமது நம்பிக்கை. இயேசு சாதாரண அப்பத்தின் வழியாகவும் இரசத்தின் வழியாகவும் தன்னுடைய பிரசன்னத்தை வழங்குகிறார் என்பதும் நமது நம்பிக்கை. தூய ஆவியார் உறுதிப்பூசுதல் என்னும் அருளடையாளத்தின் வழியாக நம்மை கிறிஸ்தவ வாழ்வில் முதிர்ச்சி நிறைந்தவர்களாக உறுதிப்படுத்துகிறார் என்பதும் நமது நம்பிக்கை.

குருத்துவம் என்னும் அருளடையாளத்தின் வழியாகத் ஒரு குறிப்பிட்ட பணிக்காக க் கடவுள் தமக்கென பணியாளர்களை அருள்பொழிவு செய்கிறார் என்பது நமது நம்பிக்கை.  திருமணம் என்னும் அருள்சாதனத்தின் வழியாக கடவுள் ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக உடன்படிக்கை செய்ய வைக்கிறார் என்பது நமது நம்பிக்கை. நோயில் பூசுதல் என்னும் அருள்சாதனத்தின் வழியாக நோயாளர்களுக்கு உடல் மற்றும் ஆன்ம நலனை  மருத்துவரான இறைவன் நமக்கு கொடுக்கிறார் என்பது நமது நம்பிக்கை. இவ்வாறாக நம்பிக்கையில்தான் கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமே இருக்கின்றது. நம்பிக்கை இல்லையெனில் கிறிஸ்தவ வாழ்வு கிடையாது. நாம் இறைவனை முழுமையாக நம்பும் பொழுது நம்மோடு வாழக்கூடிய மற்றவர்களை நம்ப முடியும். இவ்வாறாக நம்பிக்கையுள்ளாக இருக்கும்பொழுது கடவுளின் ஆசிர்வாதமும் அருளும் நிறைவாக ஆபிரகாமுக்கும் யோபுக்கும் அன்னை மரியாவுக்கும் கிடைத்தது போல நமக்கும் நிச்சயமாக கிடைக்கும். நம்பிக்கை வாழ்வின் வழியாக நம்முடைய கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகர இறைவேண்டல் செய்வோம்.

இறைவேண்டல்  
நம்பிக்கை நாயகனே எம் இறைவா! எங்களுடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்வில் இறைநம்பிக்கையில் வளர்ந்து உமது நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகரத் தேவையான அருளைத் தாரும்.ஆமென்.

Add new comment

6 + 2 =