உள்ளவர்களுக்கு அதிகம் கொடுக்கப்படுமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் மூன்றாம் வியாழன்    
I: எபி: 10: 19-25
II: திபா: 24: 1-2. 3-4. 5-6
III: மாற்கு:  4: 21-25

 

இந்த உலகத்தில் ஏழைகள் ஏழைகளாக இருப்பதும் செல்வந்தர்கள் செல்வந்தராக இருப்பதும் நாம் அறிந்த ஒன்றே ஆகும். இதற்கு முக்கிய காரணம் வாய்ப்புகள் கொடுக்கப்படாமையும் செல்வங்கள் பகிரப்படாமையுமே . இதை நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு "உள்ளவருக்கு கொடுக்கப்படும் "என்ற சிந்தனையை வழங்கியுள்ளார். இந்த வார்த்தைகளை மேலோட்டமாக சிந்தித்தோமென்றால் இயேசு ஏன் இவ்வாறு கூறுகிறார்? என நமக்கு கேள்வி எழும். அதன் உண்மையான இறையியல் பின்னணி என்னவென்பதை பின்வருமாறு காண்போம்.

தாலந்து உவமையை நாம் வாசித்திருப்போம். தலைவர் தன் மூன்று பணியாளர்களை அழைத்து தாலந்துகளை ஒவ்வொருவருடைய திறமைக்கேற்ப வழங்கினார். முதல் இரண்டு பணியாளர்கள் தங்களுக்குக் கொடுத்த தாலந்துகளை வைத்து அதை இரட்டிப்பாக மாற்றினார்கள். எனவே தன் தலைவரிடம் பாராட்டுதலையும் சிறப்பு பொறுப்பையும் பெற்றார்கள். ஆனால் தாலந்தை மண்ணுக்குள் புதைத்து சோம்பேறியாக இருந்த அந்த மூன்றாவது நபருக்கு தண்டனை கொடுக்கப்படுகின்றது. இந்த விவிலிய நிகழ்வு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றது. நமக்கு கொடுக்கப்படுகின்ற வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்துகின்ற பொழுது, நிச்சயமாக கடவுள் மீண்டும் மீண்டுமாக வாய்ப்புகளை கொடுத்து வெற்றியின் கனியை சுவைக்க வழிகாட்டுவார். அதுதான் உண்மை. இந்தப் பின்னணியில்தான் நாம் "உள்ளவருக்கு கொடுக்கப்படும் ; இல்லாதவரிமிருந்து  உள்ளதும் எடுக்கப்படும் " (மாற்: 4: 25) என்ற இறை வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மைப் படைத்த கடவுள் நமக்கு பற்பல வாய்ப்புகளை கொடுக்கின்றார். அவற்றை எந்த அளவுக்கு முழு ஈடுபாட்டோடு பயன்படுத்தி வெற்றி அடைய முன் வந்திருக்கின்றோம் என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் கடவுள் பற்பல ஆற்றல்களையும் திறமைகளையும் அறிவார்ந்த சிந்தனைகளையும் கொடுத்துள்ளார். அவை அனைத்தையும் இறையாட்சியின் மதிப்பீட்டிற்காக பயன்படுத்தி நமது இலக்கு நோக்கி பயணிக்கின்ற பொழுது நம் வாழ்வில் வெற்றியை அடைய முடியும்.

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் ; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும் " (மாற்: 4: 24) என்ற இறைவார்த்தை   நம்மை இன்னும் கூடுதலாக சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது. நாம் எந்த அளவுக்கு நம்முடைய ஆற்றலையும் திறமைகளையும் அறிவார்ந்த சிந்தனைகளையும் கடவுளின் இறையாட்சி பணிக்காகவும் நற்செய்தியின் மதிப்பீட்டிற்காகவும் பயன்படுத்துகின்றோமோ  கடவுள் அதற்கு மேலான ஆசிர்வாதத்தை நமக்கு வழங்குவார். நாம் செய்கின்ற அந்தப் பணியின் பலனை உழைப்பிற்கேற்ப வழங்குவார். 

எனவே இறைவார்த்தை என்னும் விதையை நம் உள்ளத்தில் ஆழமாக தியானித்து அதை வாழ்வாக்கி அதைப் பிறருக்கு கொடுக்கின்ற பொழுது, கடவுள் தரும் மீட்பின் கனியை   நாம் சுவைக்க முடியும். இந்த சமூகத்தில் அநீதிகள் நடக்கின்ற பொழுது, நமது குரலை கொடுக்க முன் வர வேண்டும். குறிப்பாக நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் விவசாயிகள் வேளாண் மசோதாவுக்கு எதிராக தங்களுடைய குரலை எழுப்பி வருகின்றனர். அதன் பொருட்டு பல்வேறு அடக்குமுறைகளுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். அவர்களோடு அவர்களாக நாம் உடனிருக்கின்ற பொழுது, நாமும் இறையாட்சியின் கருவிகளாக உருமாற முடியும். இத்தகைய மனநிலையோடு பயணிக்கின்ற பொழுது கடவுள் இன்னுமாக நமக்கு ஆற்றலைக் கொடுத்து கொண்டே வருவார். அதேபோல நம்மிடம் இருக்கும் திறமைகளை பிறருக்கு கற்றுக்  கொடுக்கும் பொழுது, கடவுள்  மென்மேலும் நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவி செய்வார். நம்மிடமுள்ள  செல்வங்களைப் பிறரோடு பகிர்ந்து மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபடும் பொழுது, கடவுள் நிச்சயமாக நமக்குப் பல்வேறு செல்வங்களையும் ஆசீர்வாதத்தையும் கொடுப்பார். உள்ளவர்களுக்கு இன்னும் அதிகமாக கொடுக்கப்படும் என்பதற்கு மேற்கூறப்பட்டவையே பொருளாகும். எனவே நம்மிடம் இருக்கும் ஆற்றல்களையும் அறிவார்ந்த சிந்தனைகளையும் செல்வங்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள நாம் தயாரா?  நாம் தயாராக இருந்தோமென்றால்  நிச்சயமாக கடவுள் நமக்கு பன்மடங்கு ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பார். அத்தகைய மனநிலையயைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்: 
வல்லமையுள்ள இறைவா!  எங்களுக்கு நீர் கொடுத்துள்ள திறமைகளையும் அறிவார்ந்த சிந்தனைகளையும் செல்வங்களையும் எங்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் பிறர் நலத்தோடு பயன்படுத்தவும் அதன் வழியாக இன்னும் உமது ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளவும் தேவையான அருளைத் தாரும்.  ஆமென்.

Add new comment

1 + 0 =