தாழ்ச்சியுடையோர் வீழ்ச்சி அடையார் | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் 22 ஆம் ஞாயிறு 
I:  சீ:ஞா:  3:17-18,20,28-29
II: திபா 68: 3-4. 5-6. 9-10
III: எபி: 12: 18-19, 22-24
IV:லூக்: 14: 1,7-14

தாழ்ச்சி என்ற பண்பு உயர்ந்த பண்பாகும். நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் தாழ்ச்சியோடு இருந்தால் பிழைக்கத் தெரியாதவன், ஏமாளி, அதிகாரத்தை பயன்படுத்த தெரியவில்லை என்றெல்லாம் இவ்வுலக மக்கள் விமர்சனம் செய்யலாம்.  ஆனால் தாழ்ச்சியோடு இருக்கும்பொழுது  வெற்றியின் கனியை நிச்சயமாக சுவைக்க முடியும். மனிதவாழ்வின் உன்னதமான நிறைவு தாழ்ச்சி நிறைந்த வாழ்வில் தான் இருக்கின்றது. தாழ்ச்சியோடு இருந்தவர்கள் எத்தனையோ பேர் வாழ்வில் சாதனையாளர்களாக மாறியுள்ளனர். உயர்ந்த மாமனிதர்களாக மதிக்கப்படுகின்றனர். தாழ்ச்சி என்ற பண்பை மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க அழைக்கப்படுகிறோம். 

என்னுடைய வாழ்க்கையிலே எத்தனையோ அனுபவங்கள் தாழ்ச்சி நிறைந்த பண்புகளை அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளன.  அவற்றில் ஒரு நிகழ்வை இப்பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.  நான் குருத்துவ அருள்பொழிவு பெற்று முதல் நன்றி திருப்பலி நிறைவேற்றிய அடுத்த நாள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியிலிருந்து தலைமையாசிரியர் என்னுடைய வீட்டிற்கு வந்தார்.  நான் குருத்துவ அருள்பொழிவு அழைப்பிதழை கொடுக்க மறந்துவிட்டேன்.  ஆனால் எப்படியோ அந்த செய்தியை கேள்விப்பட்டு எல்லாம் முடிந்த பிறகு அவர் வந்தார்.  அந்த தலைமையாசிரியர் ஒரு இந்து  சமயத்தை சார்ந்தவர். ஆனால் என் வீட்டிற்கு வந்தவுடன் அவ்வளவு பெரிய மனிதர் எனக்கு முன்பாக முழங்கால்படியிட்டு தன்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த நிகழ்வு என் உள்ளத்தை மிகவும் சீர்தூக்கி பார்க்க வைத்தது.  இவ்வளவு பெரிய மனிதர் நான் அருள்பணியாளர் என்பதற்காக  தன்னிடம் படித்த மாணவனுக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட அந்த தாழ்ச்சி  நிறைந்த மனநிலை உயர்ந்த மனநிலையாக கருதப்படுகிறது. அன்று முதல் எல்லாச் சூழலிலும் தாழ்ச்சி நிறைந்தவனாக வாழ வேண்டும் என்கிற மனவுறுதியைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது.  

இன்றைய முதல் வாசகத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளிலும் பணிவோடு செய்ய ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார்.  நாம் பணிவோடு செய்யும் பொழுது கடவுள் நம்மை இன்னுமாக அன்பு செய்வார் என்ற உயரிய கருத்தை சுட்டிக்காட்டுகிறார்.  நாம் பெரியவனாக இருந்தாலும் கூட பணிவோடு நடக்கும்பொழுது ஆண்டவரின் பரிவு கிட்டும் என்பதையும் முதல் வாசகத்தில் அறிகிறோம்.  இருமாப்பு கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை. ஏனென்றால் தீமை அவர்கள் உள்ளத்தில் வேரூன்றி உள்ளது என்று முதல் வாசகத்தில் அறிய வருகிறோம்.  எனவே தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழும் பொழுது நாம் கடவுளின் பார்வையில் உயர்த்தப்பட்டவர்களாக மாறுவோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை நாம் பெற்றிட அழைப்பு விடுக்கிறார். ஒரு விருந்திற்கு சென்றால் முதன்மையான இருக்கையை தேடாமல், கடைசியான இருக்கையை தெரிவு செய்ய அழைப்பு விடுக்கிறார். அப்பொழுது உங்களை அழைத்தவர்கள் பார்வையில்   நீங்கள் முதன்மையானவர்கள் என்றால், உங்களை முதன்மையான இடத்திற்கு அவர் அழைப்பார். அப்பொழுது மற்ற விருந்தினருக்கு முன்பாக நீங்கள் பெருமைப்படுவீர்கள்.  முதன்மையான இருக்கையை நாம் தெரிவு செய்கிற பொழுது,  ஒருவேளை அழைப்பாளர்களுக்கு நம்மைவிட முதன்மையானவர்கள் இருக்கலாம். அந்தச் சூழலில் கடைசியாக செல்லுங்கள் என்று நம்மிடம் சொல்ல நேரிடும். அப்படி நடந்தால் மற்ற விருந்தினர்கள் நம்மை நகைப்போடு  பார்க்க நேரிடும்.  ஒருவேளை அவமானப்பட கூட நேரிடும்.

நம்முடைய மனித வாழ்க்கையில்தாழ்ச்சியோடு இருக்கும் பொழுது ஒருபோதும் நாம் வீழ்ச்சி அடைய மாட்டோம். விட்டுக் கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. பணிவில் தான் துணிவும் பிறக்கின்றது. எனவே கடவுளுக்கு முன்பாக நம்மையே தாழ்த்துகிற பொழுது வாழ்வில் உயர்த்தப்படுவோம். அன்னை மரியாள் கடவுளுக்கு முன்பாக தாழ்த்தினார்,  அவரின் மீட்பரின் தாயாக உயர்த்தப்பட்டார்.  புனித திருமுழுக்கு யோவான் கடவுளுக்கு முன்பாக தன்னையே தாழ்த்தினார், இயேசுவின் முன்னோடியாக உயர்த்தப்பட்டார்.  சக்கேயு இயேசுவுக்கு முன்னால் தன்னையே தாழ்த்தினார்,  இயேசு தந்த மீட்பை சுவைத்தார். சவுலாக இருந்த பவுல் தன்னைத் தாழ்த்தினார், திருத்தூதராக உயர்த்தப்பட்டார். பாவியான புனித அகுஸ்தினார் தன்னுடைய பாவத்தை முழுமையாக ஏற்று கடவுளுக்கு முன்பாக தன்னையே  தாழ்த்தினார், மிகச்சிறந்த மறைநூல் வல்லுனராகவும் ஆயராகவும்  புனிதராகவும் உயர்த்தப்பட்டார். 

எனவே நம்முடைய வாழ்க்கையில் தாழ்ச்சி நிறைந்த உயர்ந்த பண்பை வாழ்வாக்க முயற்சி செய்வோம். எல்லாச் சூழலிலும் இறைவனுக்கு முன்பாக நான் ஒன்றுமே இல்லை என்று தாழ்த்துவோம், அவர் நிச்சயமாக உயர்த்துவார்.  எவ்வளவு பேர் புகழ் பட்டம் வந்தாலும், தாழ்ச்சியோடு  நம் கடமைகளை செய்வோம். அப்பொழுது கடவுள் நம்மை நிச்சயமாக உயர்த்துவார்.  தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ தயாரா?

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்து உமது பார்வையில் விலையேறப் பெற்றவர்களாக வாழ்ந்திட நல்ல மனதையும் அருளையும் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

11 + 7 =