Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
யார் உடன்பிறந்தவர்கள் : திருத்தந்தை
Tuesday, June 18, 2019
உடன்பிறந்த உணர்வுடன் இருப்பவர்கள், ஒருவரை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் மனநிலையினர் அல்ல, மாறாக, ஒருவரையொருவர் கட்டியெழுப்புபவர்கள். எனவே உடன்பிறந்த உணர்வு கொண்டு அமைதியை பரிசாற்றுங்கள் என தன்னை சந்திக்க வந்திருந்த கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையினரிடம் கூறினார்.
அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் புதிய உலகத்தலைவருடன் தன்னை சந்தித்த கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையின் புதியதாக தேர்ந்தெடுத்த உலக தலைவருடன் உலகப்பொது அவை பிரதிநிதிகளை ஜூன் 17 இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
புதிய உலகத்தலைவர் அருள்பணி. கார்லோஸ் ட்ரோவரெல்லி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், இவர்களின் சிறப்புப் பொதுமன்றக் கூட்டத்தில், சபை விதிமுறைகளை புதுப்பித்ததும், அதற்கு திருப்பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதும் குறித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தார்.
நற்செய்திக்கு செவிமடுப்பதிலிருந்து பிறந்ததாக தன்னை வெளிப்படுத்தி, நற்செய்தியையே தன் வாழ்வாகவும், வாழ்வுச் சட்டமாகவும் கொண்டிருக்கும் கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபை, இளந்துறவிகளுக்கு பயிற்சியளித்தல், கலாச்சாரங்களிடையே ஏற்புடைமை, பகிர்தல், பொருளாதார வெளிப்படைத்தன்மை போன்றவைக் குறித்து அண்மையில் விவாதித்து, மாற்றங்களை புகுத்தியுள்ளதையும் தனது தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
அதிகாரத்திற்கான சோதனை மிகப் பெரியதாக இருக்கும் இவ்வுலகில், உங்களுடைய நோக்கமெல்லாம் பிறருக்கு பணியாற்றுவதிலேயே இருக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களும் பணிபெறுபவர்களாக இல்லாமல் இயேசுவைப்போல், பணியாளர்களாக செயல்படவேண்டும் என அசிசியின் புனித பிரான்சிஸ், தனது சபை உறுப்பினர்களிடம் வலியுறுத்தியதை நினைவில் கொண்டுவந்தார்.
அமைதியை எடுத்துரையுங்கள் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்குரிய முன்நிபந்தனையாக ஒப்புரவு இருப்பதையும், மன்னிப்பும் இரக்கமும் இன்றி அமைதி பிறக்கமுடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அமைதி என்பது, பிரச்சனைகள் ஏதுமற்ற ஒரு நிலை அல்ல, மாறாக, இறைவனின் இருப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்கள்.
Click to share
Add new comment