Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இந்திய குடியுரிமை கோரும் இலங்கை தமிழர்கள்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை தாருங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் பலர், 1990-ஆம் ஆண்டு இராமேஸ்வரம் திரும்பினார்கள். அவர்கள் காவல்துறையின் பாதுகாப்பில் தீவிர விசாரணைக்குப்பின் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள்.
விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு, மேட்டமலை ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் தாங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லையென்றும், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி எல்லா இந்தியர்களைப்போல அனைத்து உரிமைகளையும் வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்கள்.
மேலும் இது குறிதது;து அகதிகள் முகாமைச் சேர்ந்த வசந்தன் கூறுகையில், இலங்கையில் இருந்து 1990 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் வந்தபோது எனக்கு வயது 7. அதன்பின் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து தங்கினோம். எனக்கு இப்போது வயது 35 ஆகின்றது. இங்கே மட்டும் 80 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ரேஷன் கடையில் எங்களுக்கு தனி அட்டை வழங்கப்படுகின்றது. அங்கே அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கும். ஆனால் எங்கள் முகவரிக்கான ஆதாரமாக ரேஷன் அட்டையைப் பயன்படுத்தமுடியாது. ஓட்டுரிமை இல்லை. இருசக்கர வாகம் வாங்கவோ, சொத்து வாங்கவோ முடியாது.
நாங்கள் இங்கே இருந்து கூலிவேலை செய்துதான் வாழ்க்கையை நடத்திவருகின்றோம். ஆனால் தற்போது நாங்கள் இலங்கைக்கு சென்றால் புதிய வாழ்க்கையைத் தான் தொடங்கவேண்டும். எங்களுக்கு மீண்டும் இலங்கை செல்ல விருப்பமில்லை. எனவே எங்களுக்கு இந்திய குடியுரிமை தாருங்கள் என்று கூறினார்.
Add new comment