Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வாழ்வுக்கு வழிகாட்டும் காவல் தூதர்கள்! | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 26 ஆம் வெள்ளி - புனித காவல் தூதர்கள் திருவிழா - I. விப: 23:29-23; II. திபா: 91:1-6,10-11; III. மத்: 18:1-5,10
"முன்னோக்கிச் செல்ல அச்சம் கொள்ளும் நேரங்களில், நம்மை வழிநடத்தி, முன்னே அழைத்துச் செல்பவர் நம் காவல்தூதரே" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். நம்முடைய அன்றாட வாழ்விலே நாம் பயணிக்கும் இந்த வாழ்க்கையில் காவல் தூதர்களை கடவுள் நமக்குக் கொடையாக அளித்துச் சிறப்பான உதவிகளைச் செய்து வருகிறார். காவல் தூதர்கள் நாம் பயணிக்கும் பாதையில் நம்மோடு இருந்து நம்மை வழிகாட்டி வருகின்றனர். அதற்காக சிறப்பான விதத்தில் நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
நம்முடைய தாய் திருஅவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புனிதருக்கு வணக்கம் செலுத்தி வருகின்றது. அந்த வரிசையில் அக்டோபர் 2ஆம் தேதி புனித காவல் தூதர்களின் திருவிழாவினை கொண்டாடி மகிழ்கின்றது. இந்த விழாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவெனில், நம்முடைய மனித வாழ்வில் நமக்கு வழிகாட்டியாகவும், பாதுகாப்பாகவும், தேவையில் உடனிருப்பவர்களாகவும் காவல் தூதர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வழிநடத்துதல் நம்மை தவறான பாதையிலிருந்தும், ஆபத்தான நேரங்களிலிருந்தும் மீட்டு நம்மை வெற்றியின் பாதையில் வழி நடத்தி வருகின்றனர். அவர்களின் வழிநடத்தலை நிறைவாகப் பெற்றிட நாம் இறைவேண்டலில் இணைய வேண்டும். காவல் தூதர்களுடைய வழிநடத்துதலை அனுபவிக்க நாம் இறைவேண்டல் செய்யும் மக்களாக மாறவேண்டும். நல்லது எது, தீயது எது என பகுப்பாய்வு செய்ய காவல் தூதர்கள் நமக்கு உதவி செய்தாலும் அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள இறைவேண்டலிலும், நேர்மறை எண்ணங்களிலும், நல்ல செயல்பாடுகளிலும் முழு ஈடுபாட்டைக் காட்ட வேண்டும். அப்பொழுது நிச்சயமாக காவல் தூதர்களின் உடனிருப்பை உணர முடியும்.
நம்மை வழி நடத்துகின்ற காவல் தூதர்களுக்கு செவிமடுக்க வேண்டும். அதற்கு நம் உள்ளம் தூய்மை உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு தூய்மையான உள்ளத்தோடு செவிமடுக்கும் பொழுது இறை உறவில் முழுமையாக உணர முடியும். எனவேதான் நம் திருத்தந்தை பிரான்சிஸ் "நம்மை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள நம் காவல் தூதர்களுக்கு நாம் செவிமடுக்க வேண்டும். ஏனெனில், நம்மோடும் இறைவனோடும் நெருங்கிய உறவு கொண்டுள்ள காவல் தூதர், இறைவனுக்கும் நமக்குமிடையே ஒரு பாலமாகச் செயலாற்றுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.
இன்றைய முதல் வாசகத்தில் "வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்" (விப: 23:20) இன்று கடவுள் வாக்குறுதி கொடுத்துள்ளார். நம்முடைய அன்றாட வாழ்விலே நாம் பயணிக்கின்ற பாதைகளில்நமக்கு பாதுகாவலராக நம்முடைய காவல் தூதர்கள் இருக்கின்றனர். அதேபோல கடவுள் நமக்கு ஏற்பாடு செய்துள்ள இடத்தில் நம்மைக் கொண்டுச் சேர்க்கவும் காவல் தூதர்கள் நமக்கு துணையாக இருந்து வருகின்றனர். எனவே காவல் தூதர்களின் வழிகாட்டுதலின்படி வழிநடக்க நாம் தீய வாழ்வை விட்டுவிட்டு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏனெனில் கடவுள் "அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது" (விப: 23:21) என்ற ஆழமான கருத்தையும் வலியுறுத்தியுள்ளார். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம் காவல் தூதர்களுடைய வழிநடத்துதலை முழுமையாக பெற நம்முடைய குற்றங்களை எல்லாம் விட்டுவிட்டு தூய உள்ளத்தோடு வாழ முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு வாழும் பொழுது நம்முடைய இன்பத்திலும் துன்பத்திலும் காவல் தூதர்கள் நம்மோடு இருந்து நம்மை ஆற்றல் மிக்கவர்களாக வழிநடத்துவார்கள்.
இன்றைய பதிலுரைப் பாடலிலும் திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரின் தூதர்களைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். "நீ செல்லும் இடங்களில் எல்லாம் உன்னைக் காக்கும்படி தம் தூதருக்கு உன்னைக் குறித்துக் கட்டளையிட்டார்" (தி.பா: 91:11) என்ற வார்த்தைகள் காவல் தூதர்களின் பாதுகாப்பையும், உடன் இருப்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. "ஆண்டவரே, எங்களுக்குத் துணை நிற்பதற்காகப் புனித தூதர்களை எங்களிடம் அனுப்பி வருகின்றீர். எங்களுக்காகப் பணிபுரியும்போது, அவர்கள் விண்ணகத்தில் ஓய்வு பெறாது பார்த்துக் கொள்கிறீர்" என்று புனித பெர்னார்தின் தனது மறையுரையில் கூறியுள்ளார்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" (18:10) என்று கூறியுள்ளார். எனவே மனிதராய் பிறந்த ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்கவில்லை எனில் காவல் தூதர்களுக்கு எதிராக நாம் பாவம் செய்கின்றோம். இத்தகைய சிந்தனையைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நம் ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நம்முடைய இறைவேண்டலின் வழியாக காவல் தூதர்களுடைய வழிநடத்துதலை உணர்வோம் . ஏனெனில் அவரகள் எங்கே சென்றாலும் நம்மோடு வருகிறவர்கள். இதைத்தான் புனித அகுஸ்தினார் "நாம் எங்கே சென்றாலும் சரி; அங்கெல்லாம் நம்முடன் காவல் தூதர்கள் எப்போதும் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். மேலும் புனித ஜெரோம் "மனித ஆன்மா எத்துணை விலையேறப்பெற்றது எனில், அதன் பிறப்பு முதல் ஒரு காவல் தூதர் கொடுக்கப்பட்டு உள்ளார்" என்று கூறியுள்ளார். இவ்வுலகம் சார்ந்த தீய ஆவிகளையும், எதிர்மறை எண்ணங்களையும், இடையூறுகளையும் எதிர்கொள்ள நமக்கு கொடுக்கப்பட்ட காவல் தூதர்களை நம்மில் செயல்பட வைப்போம். அதற்குத் தடையாய் உள்ள நம்முடைய பாவ வாழ்வை விட்டுவிட்டு புனித வாழ்வில் இணைவோம். அப்பொழுது நம்முடைய காவல் தூதர்கள் இணைப்புப் பாலமாக இருந்து கடவுளின் பாதத்தில் சேர்ப்பர். எல்லாவகையான அருளையும், ஆசீரையும் பெற்றுக் கொடுப்பர். அதற்குத் தேவையான அருளைத் தொடர்ந்து மன்றாடுவோம்.
இறைவேண்டல்
"உன் காவல் தூதரை மதித்து நடந்து கொள்" என்ற புனித பெர்நார்து அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்ப எங்களுடைய காவல் தூதர்களை மதிக்கத் தூய்மையான உள்ளத்தைத் தாரும். எங்களுடைய தூய்மையான வாழ்வால் காவல் தூதர்களின் வழிநடந்து இறையாட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment