வல்லமையோடு நற்செய்தியை அறிவிக்கப் புறப்படுவோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருவருகைக் காலம்- முதல் வெள்ளி
புனித சவேரியார் பெருவிழா
I : எசா: 61:1-3
II: திபா: 117 :1,2
III: 1 கொரி 9:16-19,22-23
IV: மாற்கு 16;15-20

" நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு " என புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 9:16 லே கூறியுள்ளார். திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நற்செய்தி அறிவிப்பது என்பது தலையாய கடமையாகும். படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்பதே உயிர்த்த இயேசு தன் சீடர்களுக்கு அளித்த கட்டளை. ஆம் நற்செய்தியாம் இயேசுவை நாம் நம்முடன் வாழும் சக மனிதருக்கு அறிவிக்க வேண்டும். நம் அன்பாலும் நற்செயல்களாலும் மனமாற்ற வாழ்வாலும் பிறரை மன்னிக்கும் குணத்தாலும் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற அழைப்பை இன்றைய நாள் வழிபாடு நமக்கு நினைவூட்டுகின்றது.

இன்று நாம் புனித சவேரியாரின் விழாவைக் கொண்டாடுகிறோம். இந்தியத் திருஅவை புனித சவேரியாரின் விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறது. மேலும் அவருடைய உடல் நமது மண்ணில் இன்னும் அழியாமல் இருப்பது நம் நாட்டுக்கே பெருமைதான்.

புனித சவேரியார் ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர். சிறுவயதிலே தன் தந்தையை இழந்த அவர் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். ஸ்பானிஷ் மொழியில் புலமை பெற்றவர் அவர். பாரிஸில் உள்ள ஒரு கல்லூரியில்  தத்துவ இயல் மற்றும் கலைத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  இறையியல்  படிக்கும் போது இன்னாசியாரின் நட்பு கிடைத்தது. ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழந்தால் பயன் என்ன என்ற வார்த்தையால் மனம் மாறி புதிய பாதையில் பயணிக்கலானார். இயேசு சபையில் இணைந்து குருவான அவர் ,இறை இயேசுவின் கட்டளையை ஏற்று நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டார். போர்ச்சுக்கீசிய காலணி ஆதிக்கத்தில் இருந்தநாடுகள் , நம் நாட்டைச்  சார்ந்த கடலோரப்பகுதிகள் ,ஐப்பான் போன்ற இடங்களில்  நற்செய்தியை அறிவித்தார். இறுதியில் சன்சியன் என்ற தீவில் நோய்வாய்ப் பட்டு இறந்தார்.

நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற தாகம் கொண்டவர் புனித சவேரியார். மக்களைக் கூட்டிச் சேர்க்க மணியடித்துக்கொண்டே செல்வார். மணியோசை மூலம் மக்களை நற்செய்தியைக் கேட்க அழைப்பார். மக்கள் கூடியதும் நற்செய்தியாம் இயேசுவைப் போதிப்பார். அவருடைய இவ்வார்வம் நற்செய்தியைக் கேட்கவும் அதைப் பறைசாற்றவும் நமக்குள்ள ஆர்வத்தை அளந்துபார்க்க நம்மை அழைக்கிறது.

நம்பிக்கை கொண்டோர் பல வல்லசெயல்களை ஆற்றுவர் என இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது. புனித சவேரியார் தன்னுடைய நம்பிக்கையின் வல்லமையால் பல வல்ல செயல்கள் ஆற்றியுள்ளார். ஐப்பானில் பார்வையற்ற ஒருவர் மீது சிலுவையை வைத்து செபிக்க அம்மனிதர் பார்வை அடைந்தார். திருவிதாங்கூர் மன்னர் கோவில் கட்ட இடம் தர மறுத்ததால் சவேரியார் ஒரு ஆட்டுத் தோல் அளவு இடம் கேட்டார். ஆனால் அந்த ஆட்டுத் தோல் விரிந்து கொண்டே சென்று அம்மன்னரின் மனதை மாற்றி கிறிஸ்தவராக மாற்றியது. அதே போல் தன் எதிரிகளை எதிர்க்க சவேரியாரின் துணையை மன்னர் நாடினார். அப்போது சவேரியார் தன் சிலுவையைத் தூக்கிக் காட்டிய போது எதிரிகளின் படை பின்வாங்கியதாக அவருடைய வாழ்க்கை வரலாறு கூறுகிறது. 
நாமும் நம்பிக்கையில் ஆழப்படும் போது நம்மாலும் நிச்சயம் வல்ல செயல்கள் செய்ய இயலும். 

எனவே புனித சவேரியாரின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இறைவார்த்தையை உளம் ஏற்று நற்செய்தியாம் இயேசுவை நம்பி வல்லமையோடும் ஆர்வத்தோடும் புனித சவேரியாரைப் போல நற்செய்தியை பறைசாற்றப் புறப்படுவோம். கடவுளின் கையில் நற்செய்தி பணியாளர்களாய் வாழ்வோம்.

 இறைவேண்டல் 

எல்லாம் வல்ல இறைவா! புனித சவேரியாரைப் போல முழு மனதோடு இயேசுவை நம்பி வல்லமையோடு நற்செய்தி அறிவிக்க எமக்கருள் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

10 + 8 =