முழு மூச்சுடன் இறை பணி செய்பவர்களா நாம்! | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


பாஸ்கா காலம் -நான்காம் ஞாயிறு; I: திப: 4:8-12; II: தி.பா: 118: 1,8-9. 21-23. 26,28,29 ; III:1 யோவான் 3:1-2; IV : யோவான் 10:11-18

சமூகப் பணிபுரியும் ஒரு சகோதரியை சில ஆண்டுகளுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. அச்சகோதரி சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக பணிசெய்து வந்தார். அவர் பணிசெய்த அந்த குறிப்பிட்ட கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுத்தர அவர் பலவாறு முயற்சித்தார். தினமும் அரசு அலுவலகங்கள் சென்று வந்தார். மக்களைத் திரட்டி விழிப்புணர்வு அளித்தார். பல நாட்கள் ஓய்வின்றி உழைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆயினும் அவர் தளரவில்லை. தான் மேற்கொண்ட அந்த பணியை இயேசுவின் பெயரால் மக்களுடைய நல்வாழ்விற்காக அவர் செய்து முடித்தார். இதனால் அவர் பலவாறு அலைக்கழிக்கப்பட்டார். எதிர்ப்புகளையும் சந்தித்தார்.

இன்றும் இயேசுவின் பெயரால் மக்களின் நன்மைக்காக உழைக்கும் அருட்பணியாளர்கள்,அருட்சகோதரிகள்,பல சமூக ஆர்வலர்கள்  நம் நடுவில் உள்ளனர். அருட்பணி ஸ்டேன் சுவாமி நாம் வாழும் இக்காலத்தில் நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.இன்றைய சமூகத்தில் நல்லது செய்தாலோ அல்லது தீமையை எதிர்த்துப் பேசினாலோ நமக்குக் கிடைப்பது எதிர்ப்புகள், விமர்சனங்கள்,அவப்பெயர்கள். ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் நமது பணியைத் தொடர வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.

இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் நற்பணியைத் தொடர்ந்ததால் விசாரணைக் கைதிகளாயினர் சீடர்கள். ஆயினும் அவர்கள் மனந்தளராமல் தாங்கள் செய்வது அனைத்துமே இயேசுவால் நடந்தது என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறார்கள். இது அவர்களின் துணிச்சலையும் இயேசுவின் பணியை முழுமூச்சுடன் செய்ய அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் புலப்படுத்துகிறது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு என் ஆடுகளுக்காக நான் என் உயிரையே கொடுப்பேன் என்கிறார். தந்தை தனக்குக் கொடுத்தப் பணியை முழுமூச்சுடன்,துணிச்சலுடன், அர்ப்பண உணர்வுடன், ஆர்வத்துடன் நிறைவேற்றத் துடித்தார் இயேசு. அதற்காகத் தன் உயிரையே கொடுப்பேன் எனவும் வாக்களிக்கிறார்.

நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை இயேசுவைப்போல திருத்தூதர்களைப் போல நாம் முழுமூச்சுடன் செய்கிறோமா என ஆய்வு செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவே நம் ஆயர். அவருடைய குரலை அறிந்தவர்களாய் இயேசுவை நமக்குள் இருந்து பணியாற்ற நாம் அனுபதிக்கும் போது நிச்சயமாக எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நம்மால் முழுமூச்சுடன் பணிசெய்ய முடியும். ஆழ்ந்து சிந்திப்போம்.இறையருள் பெறுவோம்.

இறைவேண்டல்

இறைவா உம் திருமகன் விட்டுச்சென்ற பணிகளை நாங்கள் முழுமூச்சுடன் செய்யவும், அதன் மூலம் இயேசுவுக்குச் சான்று பகரவும் அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தை இயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 1 =