Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மீட்புப் பெற வேண்டுமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலம் 33 செவ்வாய்; I : 1 மக்: 6: 18-31; II: திபா: 3: 1-2. 3-4. 5-7; III: லூக்கா: 19: 1-10
கிறிஸ்தவ வாழ்வு ஒரு ஆசீர்வாதத்தின் வாழ்வு. மனிதர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக ஆண்டவர் இயேசு தன்னுடைய இறையாட்சி பனிக்காலங்களில் எண்ணற்ற நல்ல மதிப்பீடுகளை விட்டுச் சென்றுள்ளார். அந்த இறையாட்சி மதிப்பீடுகளை வாழ முயற்சி செய்து கொண்டிருக்கும் சமூகம்தான் கிறிஸ்தவ சமூகம். அதிலும் குறிப்பாக மீட்பின் கனியை முழுமையாகச் சுவைத்து வாழ்வில் நிறைவு பெற ஆண்டவர் இயேசு தன்னுடைய போதனைகளின் வழியாகவும் வல்ல செயல்களின் வழியாகவும் ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுக்கிறார். எனவே நாம் மீட்புப் பெற வேண்டுமெனில் எத்தகைய மனநிலையோடு வாழ வேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தி நமக்குச் சான்றாக இருக்கின்றது.
இன்றைய நற்செய்தியில் சக்கேயுவின் மனமாற்றத்தை தியானித்துக் கொண்டு இருக்கிறோம்.
சக்கேயுவின் மனமாற்றம் அவருக்கு மீட்பினை வழங்கியது. ஒருகாலத்தில் சக்கேயு வரி வசூலிப்பவர்களின் தலைமை ஆயனாகவும் மக்களை வருத்தி, அநியாயமாக வரி வசூலிக்கும் செல்வந்தனாகவும் இருந்தார். தனக்கு நிறைய வேண்டும் என்ற சுயநலப் பேராசை அவருக்கு இருந்தது. எனவே இவரால் பாதிக்கப்பட்ட மக்கள் இவர் மீது கோபம் கொண்டனர். இவர் மக்களால் வெறுக்கப்பட்டார். பொன்னும் பொருளும் இருந்தும் அவருக்கு நிம்மதி இல்லை. ஏதோ ஒரு வெறுமை அவரை அழுத்திக் கொண்டே இருந்தது. எப்படியாவது இந்த நிலையிலிருந்து மாறி மன நிம்மதி பெற வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் இருந்தது. எனவே தான் இயேசுவை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அவரிடம் இருந்திருக்கலாம்.
மனமாற்றம் பெற வேண்டுமென்று தாகத்தோடு இயேசுவை எதிர்பார்த்திருக்கலாம். "நேர்மையாளர்களை அல்ல; பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன் " (லூக்: 5:32) என்று இயேசு கூறிய வார்த்தைகளை அவர் கேள்விப்பட்டிருக்கலாம். இயேசு தன்னைப்போல பாவிகளை நிச்சயமாக மன்னித்து மீட்பு வழங்குவார் என்ற நம்பிக்கையோடு அவரைத் தேடி இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் தான் இயேசுவை சந்திக்க நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம்.
இயேசுவை காண்பதற்காக இயேசு நடந்து வரும் வழியில் உள்ள அத்திமரத்தில் ஏறி காண முயற்சி செய்கிறார் சக்கேயு. இவர் மனமாற்றத்திற்கு தயாராக இருந்ததையும் இவருடைய நம்பிக்கையும் கண்டு இயேசு அவர் ஏறியிருந்த மரத்தின் கீழ் நின்றார். இயேசு அண்ணார்ந்து சக்கேயுவைப் பார்த்தார் என்று வாசிக்கிறோம். "சக்கேயுவே விரைவாய் இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் " (லூக்: 19: 6) என்று இயேசு அழைத்தார். சக்கேயு இயேசுவைக் காண வேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால் இயேசு அவர் வீட்டில் தங்கும் அளவுக்கு முன்வருகிறார். இயேசுவை தன் வீட்டிலே ஏற்ற பிறகு, சக்கேயு தன் உள்ளக் கதவை இயேசுவின் வருகைக்காக திறக்கிறார். இயேசுவின் வருகைக்காக தன்னையே ஆயத்தப்படுத்த முயற்சி செய்தார். அதன் விளைவாகத்தான் பாவத்திலிருந்து முற்றிலும் மனமாற்றம் அடைய முன்வந்தார்.
தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை அடைந்து மன நிம்மதியுள்ள வாழ்வு வாழ முயற்சி செய்தார். எனவேதான் அபகரித்த சொத்துக்களை 4 மடங்காகத் திருப்பித் தரும் அளவுக்கு முன்வருகிறார். ஆண்டவர் இயேசு அந்த வீட்டுக்கு மீட்பு உண்டானதாக கூறினார். மேலும் இவனும் ஆபிரகாமின் மகன் தானே ; இழந்து போனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார் என்றும் கூறினார். சக்கேயுவின் திறந்த மனநிலை அவருக்கு மீட்பினையும் மனநிறைவுள்ள வாழ்வையும் கொடுத்தது.
நம்முடைய அன்றாட வாழ்விலும் சக்கேயுவைப் போல இவ்வுலகம் சார்ந்த பொருட்கள் மீது அதிக நாட்டம் நாம் கொண்டுள்ளோம். அதிகமான சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற மனநிலையும் இருக்கின்றது. சுயநலம் என்ற பேராசை கடவுளிடம் நெருங்குவதற்குத் தடையாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி அதிகமாய் உள்ள இந்த காலகட்டத்தில் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட இவ்வுலகம் சார்ந்த பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பணம் இருந்தால் போதும் கடவுள் தேவையில்லை என்ற மனப் போக்கும் போய்க்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் களைந்து நேரிய வழியில் மனமாற்ற வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நாம் இயேசு தரும் மீட்பைச் சுவைக்க முடியும். எனவே நாம் திறந்த உள்ளத்தோடு மனமாற்றம் பெற முயற்சி செய்வோம். மீட்பின் கனியை சுவைப்போம். தேவையான நல்ல மனநிலையை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
மன்னிப்பை எமக்கு நல்கும் இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் உமக்கு எதிராகச் செய்கின்ற பாவங்களிலிருந்து நாங்கள் மனமாற்றம் பெற்று, நீர் தரும் மீட்பைச் சுவைத்திட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment