Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனமாற்றமும் மன்னிப்பும் அன்பின் வடிவங்களே! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 24 வியாழன்; I: 1திமொ 4:12-16; II : தி.பா: 111: 7-8. 9; III : 7: 36-50
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனமாற்றமும் மன்னிக்கும் அனுபவங்களும் நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அன்பு என்ற கயிறு அறுபடாமல் இருக்க இவை இரண்டும் மிக மிக அவசியமாகிறது. இவை இல்லாவிட்டால் உறவு நிலைக்காது. இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் நிகழ்வு இதை நமக்கு மிக ஆழமாகச் சுட்டிக்காட்டுகிறது.
பாவி என்று அழைக்கப்பட்ட பெண் இயேசுவைத் தேடி வருகிறார். அவரின் பாதங்களைக் கழுவுகிறார். கூந்தலால் துடைக்கிறார். இவை அனைத்தும் மனமாற்றத்தின் வெளிப்பாடுகள். அன்றைய யூத சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண் , இயேசு பாவிகளை அரவணைக்கிறார் எனக் கேள்வியுற்று அருடைய அரவணைப்பைப் பெற விரும்புகிறார். அவ்விருப்பம் மனமாற்றமாய் உருவெடுக்கிறது அப்பெண் மனதிலே. ஆம். பாவிகளும் கடவுளின் அன்பைப் பெறமுடியும் என்ற இயேசுவின் போதனையை ஆழ்மனதில் பதித்தவராய் அவரை மனமாற்றத்துடனும் கண்ணீருடனும் அணுகிச் செல்கிறார்.
ஊரெல்லாம் பாவி என்று ஒதுக்கி வைக்கும் பெண்ணை நான் மட்டும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என இயேசு எண்ணவில்லை. ஏனெனில் இயேசுவின் சொல்லும் செயலும் என்றுமே வெவ்வேறாக இருந்ததில்லை. மனமாற்றதோடு புதுவாழ்வு தேடிவந்த அப்பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார் இயேசு. அங்கே இருவரிடைய நல்ல உறவு உருவாகிறது. அன்பு ஆழப்படுகிறது.
நாம் பலவீனமானவர்கள். தவறி விழுந்தால் எழுந்து நிற்கவேண்டும். விழுந்தவர்களை தூக்கி விடவும் வேண்டும்.
நம் வாழ்க்கை அனுபங்களில் ஒரு சில தருணங்கள் நாம் அப்பெண்ணைப் போல் செய்த பிழைகளுக்காக மனம் வருந்தி நிற்பவர்களாக இருக்கிறோம். வேறு சில தருணங்களில்
இயேசுவைப் போல மன்னித்து ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கிறோம். மனமாற்றமோ அல்லது மன்னிப்போ எதுவாக இருந்தாலும் நாம் அதை உண்மையாக நேர்மையாக ஆழமாக செய்யும் போது அங்கே அன்பு அதிகரிக்கும். உறவு வலுவடையும். அன்புக்குரியவர்களே இவ்விரண்டு பண்புகளும் நம்மிலே வளர நாம் முயல வேண்டும். இறைவனிடம் அதற்கான வரம் வேண்டுவோம். உண்மையான மனமாற்றத்தாலும், மன்னிக்கும் மனநிலையாலும் அன்பில் வளர்வோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! தவறும் நேரங்களில் மனம்திரும்பவும், மனந்திருந்தி வருபவர்களை மன்னிக்கவும் அதன்மூலம் நாங்கள் அன்பில் வளரவும் அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment