பறைசாற்ற தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 14ஆம் புதன் 
I : ஓசேயா: 10: 1-3,7-8,12
II : திபா:105: 2-3. 4-5. 6-7
III : மத்தேயு: 10: 1-7

திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரையும் இறைவன் நற்செய்தியை பறைசாற்ற சிறப்பான விதத்தில் அழைப்பு விடுக்கிறார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளை குணமாக்கவும் சீடர்களுக்கு இயேசு அதிகாரம் கொடுத்தார். தான் பெற்ற வல்லமையை ஆற்றலை ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடருக்கும் கொடுத்து இறையாட்சி பணி செய்ய வழிகாட்டினார். சீடர்களும் இயேசு கொடுத்த வல்லமையை பயன்படுத்தி அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தனர்.

ஆண்டவர் இயேசு வழி தவறி போன இஸ்ராயேல் மக்களை வழிகாட்ட சீடர்களுக்கு சிறப்பான விதத்தில் அழைப்பு விடுக்கிறார். ஒரு தொலைநோக்கு பார்வையும் இலக்கு தெளிவும் நம்முடைய பணியில் இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக ஆண்டவர் வெளிப்படுத்தி உள்ளார். 

நம்முடைய எதார்த்த வாழ்க்கையில் கத்தோலிக்க திருஅவையிலிருந்து எண்ணற்ற திருமுழுக்கு பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலர் பிரிவினைச் சபைக்கு செல்கின்றனர். இப்படிப்பட்ட வழிதவறி செல்லும் மக்களை அடையாளம் கண்டுபிடித்து, வழி நடத்தும் பொழுது ஆண்டவன் இயேசுவின் மறு உருவமாக மாற முடியும்.  இறைவனுடைய பணி என்பது அருள்தந்தையர்களுக்கும் அருள் சகோதரர்களுக்கும் அருள் சகோதரிகளுக்கு மட்டும் ஒதுக்கி வைத்த பணி  அல்ல; மாறாக திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் இயேசுவின் தனிக்குருத்துவத்திலும் பொதுக்குருத்துவத்தில் இணைந்து ஆண்டவரின் இன்ப கனவான இறையாட்சியை கட்டி எழுப்ப நம்மையே ஒப்ப‌க்கொடுக்க முயற்சி செய்வோம். அப்பொழுது இயேசுவின் பாதையில் மறு கிறிஸ்துவாக இறைவனை பணியை செய்ய முடியும். "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்று பறைசாற்றி மக்களை ஆயத்தப்படுத்தினார். எனவே இறையாட்சி மதிப்பீடுகளை பறைசாற்றி, மறு கிறிஸ்துவாக சீடர்களைப் போல் வாழ்ந்திடுவோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எங்கள் வாழ்வில் இறையாட்சியின் மதிப்பீடுகளை பின்பற்றி வாழ்த்து நற்செய்தியை பறைசாற்றிட அருளை தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 1 =