Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நாம் யாரைச் சார்ந்தவர்கள்?..உலகையா? கடவுளையா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம் -ஐந்தாம் சனி; I: திப: 16: 1-10; II: தி.பா: 100: 2, 3, 5; III : யோவான்: 15: 18-21
ஒரு அலுவலகத்தில் இருவர் பணிசெய்து வந்தனர். அவர்களில் ஒருவர் எவ்வளவுதான் நேர்த்தியாகவும் உண்மையுடனும் பணிசெய்தாலும் பலருடைய வெறுப்புக்கு ஆளானார். மற்றவரோ சக பணியாளர்களின் மதிப்பைப் பெற பல தவறான காரியங்களை மறைவாகச் செய்து கொண்டு வெளியில் நடித்தார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த நேர்மையாளர் ஒருநாள் மற்றொரு நபரிடம் "திருட்டுத்தனம் செய்து கொண்டு நல்ல பெயர் எடுப்பது சரியல்ல" எனக் கடிந்து கொண்டார். அதற்கு அந்த நபர் "ஊரோடு ஒத்து வாழ பழகிக்கணும்" என்று சிரித்துக்கொண்டே சொல்லிச் சென்றாராம்.
மேற்கூறிய இந்த சிறுகதை இன்றைய உலக நிலையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. பத்தோடு ஒன்று பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்ற மனநிலையில் தான் எல்லாரும் வாழ்கின்றோம். தனித்து தைரியமாக நின்றால் அவன் இவ்வுலகைப் பொறுத்தவரையில் முட்டாள். எல்லோராலும் எதிர்க்கப்படுபவனாகவே அவன் இருப்பான். அன்றிலிருந்து இன்றுவரை சமுதாய சீர்த்திருத்தத்திற்காக உழைத்த அனைவருமே எதிர்க்கப்பட்டார்கள். துன்புறுத்தப்பட்டார்கைள். ஏன் கொலைசெய்யப்பட்டார்கள்.
இயேசு தனித்துத் துணிவுடன் நின்றவர். உலகத்தைச் சார்ந்து அவர் வாழவில்லை. ஆநீதி புரிபவருடன் ஒத்துப் போகவில்லை. அதனால் தான் எதிர்க்கப்பட்டார். அவருடைய சீடர்களையும் அவ்வாறே வாழ வேண்டும் என அழைக்கிறார். தன்னை உலகம் வெறுத்தது போல தன் சீடர்களையும் உலகம் வெறுக்கும் என முன்னரே கூறி தன் சீடர்களைத் தயார் படுத்துகிறார்.
இன்று நம்முடைய மனநிலை என்ன? நாம் இவ்வுலகத்தைச் சார்ந்து வாழ்கிறோமா? எப்பொழுதெல்லாம் "நமக்கு ஏன் பிரச்சனை. மற்றவர்களைப் போல ஒதுங்கி விடுவோம்" என்று நம்மை ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்துக்கொண்டு ஆநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் உலகத்தைச் சார்ந்தவர்களே. கண்விழித்துப் பார்ப்போம். நம் நிலை உணர்ந்தவர்களாய் தனித்துத் துணிவுடன் இயேசுவின் வழியில் பயணிப்போம். உலகம் நம்மை நிச்சயம் வெறுக்கும். எனவே இயேசுவின் வழியில் நம் மனதைத் தயார் செய்வோம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே! நாங்கள் இவ்வுலகத்தைச் சாராமல் உமது வழியில் துணிச்சலுடன் பயணிக்க வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment