நம் திறன்களை பயன்படுத்தி இறைவனை மகிழ்விப்போமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 21 ஆம்    சனி
I: 1 தெச 4:9-11
II : தி.பா: 97:1,7-9
III: மத்: 25:14-30

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தன் தாயிடம் மகள் " அம்மா , தேர்வு நெருங்குகிறது. நானும் பக்கத்துவீட்டிலுள்ள என் தோழியும் சேர்ந்து கூட்டாகப் படிக்கலாம் என எண்ணியிருக்கிறோம்." என்று சொன்னாள். அம்மா "தேர்வு  சமயத்தில் நீ தனியாகப் படிப்பதுதான் நல்லது. யாருடனும் சேர்ந்து படிக்கத் தேவையில்லை" என்று பதில் கூறினார். உடனே மகள் அம்மாவிடம் " அம்மா என் தோழி சற்று படிப்பதற்கு சிரமப்படுகிறாள். எனக்குத் தெரிந்ததை நான் அவளுக்கு சொல்லித்தரும் போது, படித்தவை எனக்கும் தெளிவாகும். அவளுக்கும் புரியும். நான் மட்டும் நல்ல மதிப்பெண் எடுக்கப்போவதில்லை. அவளும் நல்ல மதிப்பெண் எடுப்பாள். அது இரு வீட்டுக்கும் பெருமைதானே அம்மா ? " என்று கூறி தன் அம்மாவின் சம்மதத்தைப் பெற்றாள்.

இச்சிறுநிகழ்வு நமக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது ? தன்னிடம் உள்ள அறிவுத்திறனை சரியாகப் பயன்படுத்தி தான் மட்டுமல்ல மற்றவரும் பயன்படும் அளவுக்கு அதைப் பெருக்கிக்கொள்ளும் நல்ல மனநிலையை நாம் காண்கின்றோம் அல்லவா?

அன்புக்குரியவர்களே நம்மிடம் உள்ள திறன்களை எந்த அளவிற்கு நாம் பயன்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு அத்திறமைகள் வளரும். அவற்றை நாம் பயன்படுத்தாமல் போனால் பயனற்றதாகிவிடும். என்ற கருத்தையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் தாலந்து உவமை எடுத்துரைக்கிறது. இரும்பு மிகுந்த பயனுள்ள உலோகம். ஆனால் அது பயன்படாமல் கிடந்தால் துருபிடித்து ஒன்றுக்கும் உதவாமல் போகும். அதேபோல்தான் நம்மிடம் உள்ள தாலந்து எனும் திறன்கள்.

ஒவ்வொருவருக்கும் பலவிதமான திறன்களைக் கடவுள் கொடையாகக் கொடுத்துள்ளார். அவை மனிதருக்கு மனிதர் மாறுபடலாம். அவ்வாறு கொடுக்கப்பட்ட திறன்களை வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்தினால்தான் அத்திறன்கள் வளரும். புதிய உத்திகள் கிடைக்கும். வாய்ப்புகள் நம்மைத் தேடிவரும். நன்மதிப்பும் பாராட்டுகளும் கிடைக்கும். மாறாக அவற்றை நாம் பயன்படுத்தவில்லை எனில் பிறர் நமக்கு ஒன்றும் தெரியாது எனவோ, நம்மால் யாருக்கும் பயனில்லை எனவோ எண்ண நேரிடும். இதனால் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை நாம் இழக்கிறோம்.இது நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்தும் ஏன் நம்மை படைத்த கடவுளிடமிருந்தும் நன்மதிப்பைப் பெற்றுத்தராது.
எனவே நமக்கு கடவுள் கொடுத்துள்ள தனித்திறன்களைக் கண்டறிந்து சிறந்த முறையில் பயன்படுத்தி அவற்றை வளர்ப்போம். இறைவன் நம்மிலே மகிழ்வார்.

இறைவேண்டல்

எம்மை படைத்தவரே இறைவா!

நீர் எமக்குத் தந்த தாலந்துகளைப் பயன்படுத்தி அவற்றை பெருக்கவும் அதன்மூலம் உமது அருளை நாங்ளும் பிறரும் அடையவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 0 =