நம் கடவுள் வாய்ப்புகளின் கடவுள்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
I: வி.ப:  3: 1-8,13-15
II :  திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11
III:1கொரி:  10: 1-6,10-12
IV: லூக்கா 13:1-9

சில நாட்களுக்கு முன்பு நான் கண்ட காணொளி.  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. வீட்டிற்கு மிகவும் சோகமாக வந்த மாணவன் மிகுந்த தயக்கத்தோடு விடைத்தாள்களை பெற்றோரிடம் காட்டினான். தந்தையானவர் அவ்விடைத்தாள்களை வாங்கிப் பார்த்துவிட்டு, தன் மகனை வெளியிலே அழைத்துச்சென்றார். ஒரு சிற்றுண்டிக் கடைக்குச் கூட்டிச்சென்று இரு தேநீர் மற்றும் ஒரு தோசை வாங்கினார். பையனோ, தனக்கு தேநீர் மட்டும் தான். அப்பாவுக்கு தான் தோசை. தான் தேர்ச்சி பெறாததால் தனக்கு அவர் வேறெதுவும் வாங்கித்தர மாட்டார் என எண்ணினான். ஆனால் தந்தையோ தேநீர் மட்டும் எடுத்துக்கொண்டு, தோசையை மகனுக்குக் கொடுத்தார். பின் மகனிடம் மிகுந்த அன்போடு, உன்னால் முடியும்.அடுத்த தடவை இன்னும் அதிகமாக முயற்சி செய் என்று கூறினார். மகனோ தன் தந்தை தன்னைப் புரிந்து கொண்டதை எண்ணி மகிழ்ந்து மறுமுறை நிச்சயமாக தேர்ச்சி பெறுவேன் என்ற எண்ணத்தை தன்னுள்ளே உருவாக்கிக் கொண்டான்.

வாய்ப்புகள் நம் வாழ்வில் வந்துகொண்டே இருக்கின்றன. பல வேளைகளில் அந்த வாய்ப்புகளை நாம் தவறவிடுகிறோம். வாய்ப்புகள் கிடைக்கும் போது அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நமக்கு வெற்றிகிடைக்கும். பலன் கிடைக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
நமது விண்ணகத்தந்தை வாய்ப்புகளின் கடவுள். அவர் நமக்கு ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை வாய்ப்புகளைத் தருகிறார். அவையெல்லாம் எதற்காக? நாம் அவருடைய பிள்ளைகளாக வாழ்ந்து கனிதரவேண்டும் என்பதற்காகவே.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டுள்ள கனிகொடாத அத்தி மர உவமை இச்சிந்தனையை இன்னும் ஆழமாக வழங்குகிறது. மரத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்த பின்னும் கனிகொடுக்கவில்லை மரம். ஆயினும் அம்மரத்திற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.இது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக விளக்குகிறது. தன்னைவிட்டு பிரிந்து சென்ற இஸ்ரயேலர் மீண்டும் தன்னோடு சேர்ந்துகொள்ளவும் ,உடன்படிக்கை மக்களாய் கனிதரவும் கடவுள் பல வாய்ப்புகளை நீதித்தலைவர்கள் மூலமாகவும் அரசர்கள் மூலமாகவும் இறைவாக்கினர்கள் மூலமாகவும் தந்துகொண்டே இருந்தார். ஆனால் பலமுறை இஸ்ரயேலர் அவ்வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல் கடவுளுக்கு எதிராக முறுமுறுக்கும் மக்களாகவும் கடவுளின் அடியார்களை துன்புறுத்தும் மக்களாகவும் இருந்தனர். ஆயினும் அவர் வாய்ப்புகள் தருவதை நிறுத்தவில்லை. 

இதேபோல நாமும் நம்முடைய பாவ வாழ்க்கையால் பலமுறை தவறி வீழ்ந்து பலனளிக்காது போனாலும் அவர் மனம்மாறவும் அவர்பிள்ளைகளாய் வாழவும் வாய்ப்புகள் தந்துகொண்டே இருக்கிறார். இறைவார்த்தையும் அருட்சாதனங்களும் நமக்கு முன்மாதிரியாய் வாழ்ந்த மூத்தோர்களின் அனுபவ அறிவுரைகளும் நமக்குத் தரப்படுகின்ற அரிய வாய்ப்புக்களாகும். இதைக் கண்டுகொண்டு அவ்வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினோம் என்றால் நாமும் நிச்சயம் கனிதருவோம் என்பதில் ஐயமில்லை. 

கடவுள் கருணையுள்ளவர். நம்மை திக்கற்றவர்களாக அவர் விடமாட்டார். நாம் வளர்வதற்கும் வாழ்வதற்கும் அவர் விரும்புவதைப்போல கனிதருவதற்கும் வாய்ப்புகளை நமக்குமுன் வைத்துள்ளார். அதை உணர்ந்து மோசே மலையில் மிதியடிகளை நீக்கியவராய் கடவுளின் பிரசன்னத்தில் நுழைந்ததுபோல, நம்முடைய பாவ வாழ்வை நீக்கி கடவுளருகே செல்ல முயற்சிப்போம்.அதேபோல நாமும் யாருடைய செயல்களையும் தவறுகளையும் கண்டு அவர்களை ஒதுக்கிவிடாமல் அவர்களுக்கும் வாய்ப்பு தந்து அவர்களோடு உள்ள இணக்கத்தைப் புதுப்பித்துக்கொள்வோம்.

இறைவேண்டல் 
எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் இறைவனே! நீர் வழங்கும் அருளாசிரையும் பல்வேறு வாய்ப்புகளையும் பயன்படுத்தி கனிதரும் மக்களாய் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 14 =