Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நன்மையையே நினை ! நல்லதையே செய் ! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 15ஆம் சனி
I : மீக்கா 2:1-5
II : 9B:1-4,7-8,14
III : மத்தேயு: 12:14-21
நம்முடைய எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் நமது சொற்களும் செயல்களும் எப்போதும் நல்லவையாகவே இருக்கும் என்பது உளவியல் உண்மை. எனவேதான் வாழ்க்கையில் அனுபவமிக்க பெரியவர்கள் நன்மையை மட்டுமே நாம் சிந்திக்கவும் செயல்படுத்தவும் வேண்டும் என்பார்கள். சில வேளைகளில் நாம் நல்லவர்களாக இருப்பதால் பலவித துன்பத்திற்கு உள்ளாகலாம். அதற்காக நாம் தீமையை நாடக்கூடாது. இன்றைய வாசகங்கள் நமக்கு இதையே கற்றுக்ருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மீக்கா மூலமாக கடவுள் பிறர்வாழ்வைக் கெடுக்க நினைத்து தீய திட்டங்களை தீட்டுவோருக்கு ஐயோ கேடு என்று கூறுகிறார். அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்க்கையில் மகிழ்வதாகத் தோன்றும். ஆனால் செய்த வினை அவர்களுக்கு திரும்ப வந்தே தீரும் என்ற உண்மையை இங்கே ஆணித்தரமாகக் கூறுகிறார் இறைவாக்கினர் மீக்கா. நம் கண்முன்னே நாம் எத்தனையோ உதிரணங்களைக் கண்டிருக்கிறோம். மக்களிடம் கொள்ளையடித்து பணம் பதவி மோகங்களில் வாழ்ந்த எத்தனையோ அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், கொள்ளைக்கார்களின் இறுதி வாழ்க்கை அழுகையிலும் கவலையிலும் முடிவுற்றதை நாம் அறிவோம் அன்றோ.
கிறிஸ்தவர்களாகிய நாம் இத்தகைய மனநிலையை அறவே விலக்க வேண்டும். மாறாக நாம் இயேசு கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். பரிசேயர் சதுசேயர் போன்றோர் இயேசுவின் நன்மையைக் காணாமல் அவரைக் கொல்லத் தேடினர். இதனால் இயேசு தன் தன்மையை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் தன்னிடம் வந்தவர்கள் அனைவரையும் அரவணைத்தார். குணமாக்கினார்.அவர்களுக்கு புத்துயிர் ஊட்டினார்.
"ஒன்றே செய். நன்றே செய்.அதுவும் இன்றே செய் " என்று நாம் கூறுவது வழக்கம். அந்த நன்றை நாம் செய்ய நம்முடைய எண்ணங்களும் நன்றாய் இருக்க வேண்டும். பிறருக்கு வாழ்வளிக்கும் இயேசுவின் மனநிலை நம்மிலும் வளர வேண்டும்.பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என எண்ணக் கற்றுக்கொள்வோம். ஒரு கணம் கூட பிறருக்கு தீமை நடக்க வேண்டும் என்ற எண்ணம் நம்முள் நுழையாது காத்துக்கொள்வோம். அத்தகைய எண்ணம் நம்மில் நுழைய நேரிட்டால் நமது வாழ்வு இருண்டு விடும் என்பதை உணர்ந்து கொள்வோம். நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்.
இறைவேண்டல்
நல்லவரே இறைவா! எமக்கும் பிறக்கும் எந்நாளும் எப்போதும் நன்மையை மட்டுமே நாடும் நல்ல மனம் தந்து எம்மை ஆசிர் வதியும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment