Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தேவை, விருப்பம் எதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம்?
பொதுக்காலத்தின் 25 ஆம் புதன் - I. நீதிமொ: 30:5-9; II. திபா: 119:29,72,89,101,104,163; III. லூக்: 9:1-6
ஒரு ஊரிலே பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். தேவைக்கு அதிகமாக எல்லாம் இருந்தது. எதற்காகவும் யாரையும் யாசிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எப்போதும் விலை உயர்ந்த ஆடை, அனுதினமும் ஆடம்பர அறுசுவை உணவு என வாழ்க்கை ஓஹோ என்று போய்க்கொண்டிருந்தது.பணக்காரர் என்பதால் சமூகத்தில் நல்ல மதிப்பும் கிடைத்தது. ஆனால் இவை அனைத்தையும் அருளிய கடவுள் பற்றிய நினைவு இல்லாமலே போனது. இச்சமயத்தில் தான் ஒரு கொடிய நோய் அவரைத் தாக்கியது. தன் செல்வங்களை எல்லாம் செலவிட்டும் முன்னேற்றம் இல்லாமல் போயிற்று. அப்பொது தான் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் வரத்தொடங்கியது. அவரை பார்க்க வரும் நண்பர்களும் உறவினர்களும் "மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபியுங்கள். நானும் வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றனர். அப்போது தான் தன்னிலை உணர்ந்த அவர் "தேவைக்கு அதிகமாக செல்வத்தை வைத்திருந்தேன். ஆனால் தேவையான ஒன்றை தேடவில்லை. கடவுளின் ஆசீரை நாடவில்லை. இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டேன்" என தனக்குள் வருந்திக்கொண்டார்.
நாம் வாழும் இன்றைய அறிவியல் உலகில் எல்லாம் ஏராளம். ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஏராளமான கண்டுபிடிப்புகள் நம் அனைவரின் கண்களையும் கவரக்கூடியதாகவும் உள்ளன. இதனால் பல வேளைகளில் அவற்றை சொந்தமாக்க விரும்பி நம் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறோம். தேவையான காரியங்களை புறக்கணிக்கிறோம். நாளடைவில் இவையாவும் தேவையற்றவையாய் மாறிப்போகும் என்பதை மறந்து விடுகிறோம்.
"எனக்கு செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம். தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால் நான் உம்மை எனக்குத் தெரியாது என்று மறுதலித்து ஆண்டவரைக் கண்டது யார் என்று கேட்க நேரிடும்"(நீதி 30;9) என்று இன்றைய முதல்வாசகத்தில் நாம் தியானிக்கும் இவ்வார்த்தைகள் நமக்கு கூறும் கருத்து என்ன?
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும் என்று விண்ணகத் தந்தையை நோக்கி ஜெபிக்க கற்றுக்கொடுத்த இயேசுவின் வார்த்தைகளை இவை நமக்கு நினைவூட்டுகிறது. பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னா பொழிந்த போது தேவையானவற்றை மட்டுமே சேகரிக்க கடவுள் கட்டளையிட்டதையும், தேவைக்கு அதிகமாக சேகரித்தவை கெட்டுப் போயின என்பதையும் நாம் வாசித்திருக்கிறோம்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். உணவு மட்டும் அல்ல எப்பொருளாய் இருந்தாலும் தேவைக்கு அதிகமாய் இருக்கும் போது பயனற்றதாய் போய்விடும். மாறாக கடவுளின் துணையோடு நம்முடைய தேவைகளுக்காக உழைத்து அவற்றை நன்றிடன் பயன்படுத்தும் போது கடவுளின் அருள் நமக்கு அதிகமாய் கிடைக்கும். மேலும் மிகுந்த செல்வத்தை தேடாமல் தேவையானவற்றைக் கொண்டு நிறைவுடன் வாழும் போது, கடவுளையும் நம் உழைப்பையும் சார்ந்து வாழும் எண்ணம் நம்மில் எழும்.
இன்றைய நற்செய்தி வாசத்தில் இயேசு சீடர்களை பணிக்காக அனுப்பும் போது கைகளில் எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறுவதைக் காண்கிறோம். இறை பணிக்காக நம்மையே அர்ப்பணிக்கும் போது நமக்கு தேவையான அனைத்தையும் கடவுள் தருவார் என்பதையே இயேசு இதன் மூலம் நமக்கு விளக்குகிறார். இயேசுவின் சீடர்களும் அவர் கூறியதை பின்பற்றி ஊர் ஊராகச் சென்று நற்செய்தி பணிபுரிந்தார்கள். இறையாட்சி பணிபுரிய நம்முடைய தேவைகளை பொருட்படுத்தக்கூடாது என்பதை இந்நிகழ்வு நமக்கு கூறுவதோடு இறைபராமரிப்பில் நம் நம்பிக்கையை அழப்படுத்தவும் நம்மை அழைக்கிறது.
நம்முடைய தேவைகளை நாம் கூறும் முன்பே அறிந்த இறைவன் நமக்கு தேவையானவற்றை நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையோடு விருப்பங்களையெல்லாம் ஒதுக்கி விட்டு தேவைகளுக்காக உழைப்போம். கடவுளை என்றும் சார்ந்து வாழும் வரம் கேட்போம்.
இறைவேண்டல்
பராமரிக்கும் பரமனே! எங்கள் தேவைகளை அறிந்து வழங்குபவரே நாங்கள் தேவையற்ற உலக விருப்பங்ளை நாடி உம்மிடமிருந்து விலகி விடாமல் தேவைக்காக உழைக்கவும் உம்மை சார்ந்து வாழவும், என்றுமே உம் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு சிறந்த நற்செய்தி பணிபுரியவும் அருள் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment