Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தேடிவரும் ஆண்டவரிடம் திரும்பிச்சென்று அவரை மகிழ்விப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருவருகைக் காலம் இரண்டாம் செவ்வாய்
I : எசா: 40: 1-11
II: திபா: 96: 1-2. 3,10. 11-12. 13
III : மத்: 18: 12-14
பிற சமயத்திற்கும் நமது கிறிஸ்தவ சமயத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் பிற சமயங்களில் கடவுளைத் தேடி பக்தர்கள் செல்வர். ஆனால் நமது தெய்வமோ மனிதர்களைத் தேடி வந்தவர். நாமே வேண்டாம் என விலகிச் சென்றாலும் அவர் நம்முடைய வருகைக்காக காத்திருக்கக் கூடியவர். அவ்வாறாக கடவுள் நம்மைத் தேடிவந்த விழாதான் கிறிஸ்து பிறப்பு விழா. மேலும் அவர் நாம் தவறிய போதெல்லாம் நம்மைத் தேடி வருகிறார் என்பதற்கு திருவிருந்து மற்றும் ஒப்புரவு அருட்சாதனங்கள் மிகப்பெரும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இன்றைய நற்செய்திப் பகுதியில் "இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.” என்ற இறைவார்த்தை நமக்குத் தரப்பட்டுள்ளது. இவ்வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையிலே காணாமல் போன ஆடு பற்றிய உவமை நமக்குத் தரப்பட்டுள்ளது. வழிதவறிய ஆட்டைக் கண்டுபிடித்த ஆயனின் மகிழ்ச்சியை நமக்கு எடுத்துக்கூறுகிறது. தொலைந்த ஆட்டைக் கண்டுபிடிக்க மற்ற தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் விட்டு விட்டுத் தேடி அலையும் ஆயனின் அன்பு நமக்கெல்லாம் புரிந்து கொள்ள இயலாததாக, நம் அறிவிற்கு எட்டாததாக அமைகிறதை நாம் உணர்கிறோம்.
இதை இன்னும் எளிதாய் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு வகுப்பில் ஆசிரியர் அனைவருக்கும் ஒன்றுபோல் தான் கற்றுத்தருகிறார். ஆனால் கற்றலின் ஆற்றல் அங்கே மாறுபடுகிறது. சில மாணவர்கள் விரைவாகப் புரிந்து கொள்வர். சிலர் சற்று தாமதமாகப் படிப்பர். இன்னும் சிலர் மிகவும் சிரமப்படுவர். அவர்களை ஆசிரியர் தனியாக அழைத்து பயிற்சி கொடுப்பார். அதனால் மற்ற மாணவர்களை அவர் கண்டு கொள்வதில்லை என அர்த்தமில்லை. மாறாக பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வில் வெற்றி பெற உழைப்பார். பின்தங்கிய மாணவர்கள் வெற்றி பெறும் போது அவ்வாசிரியர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.
இது எளிய உதாரணம். ஆனால் கடவுளுடைய அன்பு இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. தன் பிள்ளை எப்படியும் போகட்டும் என பெற்றோர் விரும்புவதில்லை. அதேபோலத்தான் நாம் பலவீனத்தால் தவறுகள் இழைத்து அவரைவிட்டு சென்றாலும் அவர் நம்மை விட்டுவிடாமல் நம்மைத் தேடி வந்து மீட்பார் . நாம் மனம் மாறி அவரிடம் திரும்பி வரும் போது நம்மில் மகிழ்வார். அப்படிப்பட்ட தந்தையின் அன்பை உணர்ந்தவர்களாய் நம்முடைய தீய வழிகளினின்று மனம் திரும்புவோம். கடவுளை மகிழ்ச்சிப்படுத்துவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! பாவம் செய்த போதும் எம்மைத் தேடி வருகிறீர். நாங்கள் மனந்திரும்பி உம்மிடம் திரும்பி வந்து உம்மை மகிழ்ச்சிப்படுத்த வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment