Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துணிச்சலுடன் இயேசுவின் இறையாட்சிப் பணி செய்ய ஆயத்தமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Refelction
பொதுக்காலத்தின் பதினான்காம் வெள்ளி; I: தொநூ: 46: 1-7, 28-30; II: திபா: 36: 3-4, 18-19, 27-28, 39-40; III: மத்: 10: 16-23
"எண்ணித்துணிக கர்மம் " . நாம் எந்த ஒரு செயலைச் செய்யும் போதும், முயற்சிகள் மேற்கொள்ளும் போதும் மனத்துணிவு அவசியம். மேடையேறிப் பேசுபவர்கள் கூட்டத்தைக் கண்டும் மக்களின் விமர்சனங்களைக் கண்டும் அஞ்சினால் அவர்களுக்குப் பேசத் தகுதியில்லை என்றுதான் அர்த்தம். விளையாட விரும்புகிறவர்கள் உடல் வலிகளுக்கும் காயங்களுக்கும் பயந்தால் அவர்கள் விளையாடவே விரும்பக்கூடாது. வாழ்வின் நெருக்கடிகளைக் கண்டு துணிவிழந்தால் வாழவே முடியாது. இதுதான் எதார்த்தம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களை அனுப்பும் போது " ஓநாய்களிடையே ஆடுகளைப்போல உங்களை அனுப்புகிறேன்" என்கிறார். அவ்வார்த்தைகள் இயேசு சீடர்களைப் பயமுறுத்துவதைப்போல நமக்குத் தோன்றலாம். ஆனால் உண்மையில் தன் சீடர்களைத் தைரியப்படுத்தி துணிச்சலுடன் பணிபுரியவே அவர் இவ்வாறு கூறுகிறார்.
நல்லது செய்ய தைரியம் தேவை. ஒருவர் நேர்மையாளராக ,சமூக ஆர்வலராக, உண்மையானவராக, சிறந்த பணியாளராக இருக்கத் துணிவு வேண்டும். ஏனெனில் அவருக்கு உலகம் தரும் வெகுமதி எப்போதும் மகிழ்ச்சியானதாக இருக்காது.
சில நாட்களுக்கு முன்பு அருட்தந்தை ஸ்டேன் சே.ச அவர்களின் மறைவு பற்றிய சோகமான செய்தியைக் நாம் அனைவரும் கேட்டோம். சமூக ஆர்வலராகப் பணியாற்றிய தந்தை ஸ்டேன் சாமி சே.ச அவர்கள் ஜார்கண்டின் ஓரங்கட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடினார். அதற்காக அர் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தனது பணியில் வலுவாகவும் தெளிவாகவும் இருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம் .அவரது முதுமையைக் கூட அரசு கருத்தில் கொள்ளவில்லை. அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் கிறிஸ்துவின் உண்மையான சீடராக இறந்தார். அவர் தனது பணியின் போதும் சிறைவாழ்விலும் பலவித சவால்களை கிறிஸ்துவின் சீடனாய் துணிவுடன் எதிர்கொண்டார்.
கிறிஸ்துவின் சீடராக நாமும் வாழ விரும்பினால் பல எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும், அதிகாரத்திலுள்ளோரின் அடக்கு முறைகளையும் நிச்சயமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றிற்காக நாம் பயந்து ஒதுங்கினால் நாம் நிச்சயம் கிறிஸ்துவின் சீடராகப் பணிசெய்ய இயலாது. எனவே கிறிஸ்துவின் சீடராய் பணிசெய்ய மனத்துணிவை வளர்த்துக் கொள்வோம். கிறிஸ்து நம்முடன் இருந்து நமக்காகப் போராடுவார்.
இறைவேண்டல்
துணிவுடன் இறையாட்சிப் பணிசெய்த இயேசுவே உம் சீடர்களாய் நாங்களும் துணிவுடன் பணி செய்ய வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment