Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தாழ்ச்சியோடு வாழத் தயாரா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருவருகைக் காலம் முதல் திங்கள்; I: எசா: 4: 2 - 6; II: திபா: 122: 1-2. 4-5. 6-7. 8-9; III: மத்: 8: 5-11
தாழ்ச்சி தான் ஒரு மனிதனை கற்றுக் கொள்ள வைக்கும். தாழ்ச்சியுள்ள மனிதன்தான் உயர்வினைப் பெறுவான். நான் கல்லூரி படிக்கும் பொழுது என்னோடு ஒரு நண்பர் படித்தார். அவர் மிகவும் திறமைசாலி. நன்றாக படிக்கக் கூடியவர். அவரிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால் எதைச் செய்தாலும் பெருமை பாராட்ட மாட்டார். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லுவார். இறுதியில் அந்த வகுப்பில் முதல் மதிப்பெண் பெருமளவுக்கு உயர்ந்தார். அவரிடம் "எவ்வாறு உங்களால் மட்டும் இவ்வளவு தாழ்ச்சியோடு இருக்க முடிகிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர் "நம்மிடம் தாழ்ச்சி இருக்கும் பொழுதுதான் அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். நான் பிறந்தது முதல் அதிகமாக துன்பப்பட்டிருக்கிறேன். வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று தாகத்தோடு இருந்து வருகிறேன். ஆனால் சாதிக்க வேண்டுமென்றால் கற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். கற்றுக்கொள்ள மனம் வேண்டுமென்றால் தாழ்ச்சி இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்" என்று கூறினார்.
திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் இருக்கின்ற நாம் இந்த வாரம் முழுவதும் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கை பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அதிலும் குறிப்பாக தாழ்ச்சியோடு நம்பிக்கை கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். விவிலியத்தில் தாழ்ச்சியோடு இருந்தவர்கள் கடவுளின் ஆசீரைப் பெற்றார்கள். தாழ்ச்சி இல்லாதவர்கள் கடவுளின் ஆசீரை இழந்தார்கள். தாழ்ச்சியோடு இறைநம்பிக்கை கொண்ட ஆபிரகாம், அன்னை மரியாள், நூற்றுவர் தலைவர் போன்றோர் கடவுளின் ஆசீரை நிறைவாக பெற்றனர். தாழ்ச்சி இல்லாத ஏவாள், சவுல், யூதாஸ் இஸ்காரியோத்து கடவுளின் அருளை இழந்தனர்.
இன்றைய நற்செய்தியில் நூற்றுவர் தலைவரின் தாழ்ச்சியை நாம் அறிய வருகிறோம். உரோமை படையில் நூற்றுவர் தலைவர் மிகவும் முக்கியமானவர். அதிகாரம் படைத்தவர். ஆனால் இயேசுவின் முன்பாக தன்னையே தாழ்த்தி தன்னுடைய மகன் நலமடைய வேண்டுதல் செய்தார். யூதர்கள் புறவினத்தார்களை தீட்டாகக் கருதினார். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் தீட்டுப்பட்டு விடுவோம் என்ற சிந்தனையில் இருந்தனர். எனவேதான் ஆண்டவர் இயேசுவிடம் தன்னுடைய நிலையை அறிந்து "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்று கூறினார். இது அவரது தாழ்ச்சி நிறைந்த மனநிலையை சுட்டிக்காட்டுகிறது. நூற்றுவர் தலைவரின் தாழ்ச்சி நிறைந்த மனநிலையே அதிசயத்தைக் காணச் செய்தது. அவரின் தாழ்ச்சி நிறைந்த மனநிலை அவருடைய மகன் நலமடைய அடிப்படையாக இருந்துள்ளது.
திருவருகைக் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நாம் நூற்றுவர் தலைவரைப் போல தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ முயற்சி செய்வோம். அதன் வழியாக கடவுள் தரும் அருளையும் ஆசியையும் ஆற்றலையும் பெற முயற்சி செய்வோம். தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழத் தயாரா?
இறைவேண்டல்:
வல்லமையுள்ள ஆண்டவரே! தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை எங்களுக்கு நீர் தர வேண்டுமாய் நம்பிக்கையோடு வேண்டுகிறோம். அதன் வழியாக உம்மை இன்னும் அதிகமாக அறிந்து இறையாட்சியின் கருவிகளாக மாறிடத் தேவையான அருளைத் தாரும்.ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment