தாழ்ச்சியே உயர்வு! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 18 ஆம் செவ்வாய்; I: எண்:12:1-13; II : தி.பா: 50:3-7,12-13; III:  மத்: 14:22-36

தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான் என்று இயேசு தன் போதனையில் பலமுறை கூறியிருக்கிறார். தாழ்ச்சி என்பது திறந்த மனநிலையோடு உண்மையை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளும் ஒரு பண்பாகும்.  தற்பெருமை அதற்கு முற்றிலும் எதிர்மறையான பண்பு. பிறர் செய்யும் நல்லவற்றை பாராட்டாத குணம், ஒருவர் செய்த தவறை பெரிதுபடுத்தும் மனநிலை, ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் போன்றவை தற்பெருமையின் அறிகுறிகளே.

இன்றைய முதல் வாசகத்தில் தன்னைத்தானே தாழ்த்தியதால் கடவுளால் உயர்த்தப்பட்ட மோசேயை குறைவாகப்பேசி  ஒப்பிட்டுப் பார்த்ததால் ஆரோனும் மிரியமும் கடவுளுடைய கடுஞ்சினத்திற்கு ஆளானர் என்ற செய்தியை நாம் வாசிக்கின்றோம்.

மோசே ஒரு எத்தியோப்பிய பெண்ணை மணந்ததால் ஆரோனும் மிரியமும் அவரை இழிவாகப் பேசினர். அத்தோடு கடவுள் மோசேயோடு மட்டும் தான் பேசினாரா, எங்களோடும் தான் பேசினார் என மோசேக்கு நிகராக தங்களை உயர்த்திப் பேசினார். அதற்கு சரியான தண்டனையாக மிரியம் தொழுநோயாளியாய் மாறினார். அந்நிலையிலும் கூட மோசே அவருக்காக மன்றாடினார். அதுவல்லவா உண்மையான தாழ்ச்சி.

இன்றைய நற்செய்தியில் இயேசு தண்ணீர் மேல் நடக்கின்ற நிகழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. பேதுருவும் இயேசுவை நோக்கித் தண்ணீர் மேல் நடந்தார். ஆனால் எப்போது அவர் கீழே பார்த்தாரோ அப்போது அவர் மூழ்க ஆரம்பித்தார். நாம் உயரத்தில் இருக்கும் போது எப்போதுமே தற்பெருமையோடு நமக்கு கீழ் உள்ளவர்களை பார்க்கத் தொடங்கினால் நமக்கு அழிவு நிச்சயம் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

எனவே தாழ்ச்சியான உள்ளத்தோடு கடவுள் முன்னும் பிறர்முன்னும்  நம்மையே நாம் அர்ப்பணிக்கும் போது நிச்சயம் நமது வாழ்வு உயர்வு பெறும். நம் அன்னை மரியா, திருமுழுக்கு யோவான், மோசே, ஆபிரகாம் போன்றோர் இதற்கு சிறந்த உதாரணமாய் திகழ்கின்றனர். நாமும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்து இறைவன் தரும் உயர்வைப் பெற முயற்சிப்போம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா தாழ்ச்சியின் இறைவனே! உண்மையான மனத்தாழ்ச்சியுடன் வாழ்ந்து உயர்வு பெற வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 6 =