சீடத்துவ வாழ்வுக்காய் நம்மையே தயாரிப்போம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 14ஆம் வெள்ளி 
மு.வா: ஓசேயா: 14: 1-9
ப.பா: திபா: 51: 1-2. 6-7. 10-11. 12,15
ந.வா: மத்தேயு: 10: 16-23

 

"ஒரு துறவற சபையின் இறையழைத்தல் ஊக்குநர் ஒரு கிராமத்திற்குச் சென்றார். அந்த கிராமத்தில் இறையழைத்தலைப் பற்றி ஒரு தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த தந்தை அந்த அருள் தந்தையை பார்த்து" உங்கள் சபையில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன" என்று கேட்டார். அந்த  அருள்பணியாளர் அவரிடம் "ஏன் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர் "சொத்துக்கள் அதிகமாக இருந்தால் தானே என் மகன் ஆடம்பரமாக வாழ முடியும். மேலும் எங்களுக்கு ஏதாவது கொடுத்து உதவ முடியும்" என்று கூறினார். அதைக் கேட்டவுடன் அந்த அருட்ப பணியாளர் மிகவும் வருத்தத்துடன் அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்.

இறைவனின் அழைப்பு பிழைப்புக்காக அல்ல; மாறாக சான்றுகளாக வாழ்வதற்கு மட்டுமே. இறைவனின் பணியைச் செய்ய நமக்கு இருக்க வேண்டியது இறை பணிக்காக துன்பத்தை ஏற்கும் மனநிலை. துன்பத்தையும் இடையூறுகளையும் கண்டு அஞ்சாத மனநிலை. இறைஅழைத்தல் வாழ்வு என்பது பஞ்சு மெத்தையில் படுக்கக் கூடிய வாழ்வல்ல; மாறாக, முள் பாதையில் பயணம் செய்யக்கூடிய வாழ்வு. இப்படிப்பட்ட வாழ்வு வெளிப்புறத்தில் துன்பத்தைத் தருவதாக இருந்தாலும், இது உள்ளார்ந்த பேரின்ப நிறை வாழ்வை நமக்கு வழங்குகிறது.

ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் நான்கு வகையான உயிரினங்களை சுட்டிக்காட்டுகிறார். ஆட்டுக்குட்டி, ஓநாய், பாம்பு மற்றும் புறா. ஆண்டவர் இயேசு எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி இருந்தார் என்பதற்கு இந்த உருவகங்கள் உதாரணம். உண்மையான சீடர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த உருவகங்கள் வழியாக நமக்குக் காட்டியுள்ளார்.

ஆடுகள் என்பது சீடத்துவப் பணியை சுட்டிக்காட்டுகிறது. ஆடுகள் மாசற்றவையாகவும் தூய்மையாகவும் எளிமையாகவும் தன் ஆயனை நம்பி இருப்பவையாகவும் இருக்கின்றது. சீடர்கள் தங்களுடைய பணி வாழ்வில் நல்லாயனாகிய இயேசுவை முற்றிலும் நம்பி பணி செய்ய வேண்டும் என்பதை இவ்வுருவகம் விளக்குகிறது.

 ஓநாய்கள் கொடூரமான தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆடுகளைப் போல நற்செய்தி அறிவிக்க செல்லும் சீடர்களை அச்சுறுத்தும் விதமாக ஒரு சில மக்கள் இருப்பார்கள். அவர்களைக்  குறித்து அஞ்சாமல் துணிவோடு இயேசுவை நம்பி சீடத்துவப் பணியைச் செய்ய இயேசு அழைப்பு கொடுக்கிறார்.  பாம்பு நுண்ணறிவையும் அறிவாற்றலையும் ஞானத்தையும் விவேகத்தையும் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. சீடத்துவ பணி செய்ய மக்களிடம் செல்லும் பொழுது நுண்ணறிவோடும் விவேகத்தோடும் ஞானத்தோடும் செயல்பட வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்த விரும்புகிறார். புறா என்பது கள்ளம் கபடற்ற தூய உள்ளத்தை சுட்டிக்காட்டுகிறது. சீடத்துவ வாழ்வை வாழும் ஒவ்வொருவரும் தூய்மையான உள்ளதோடு கள்ளம் கபடம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை இயேசு சுட்டிக் காட்டியுள்ளார். 

திருமுழுக்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆயன்வழி செல்லும்  ஆடுகளாய் நற்செய்தியை  துன்பங்களுக்கும் சவால்களுக்கும்  பயப்படாமல் நுண்ணறிவோடும் தூய்மையோடும் நற்செய்தியை பறைசாற்ற வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையை நாம் இன்று பெறுகிறோம். எனவே நம் வாழ்வும் பணியும் இயேசுவின் நற்செய்தியாய் அமைய நம்மையே ஒவ்வொருநாளும் தயிர்செய்வோம். நாம் அனைவருமே அழைக்கப்பட்டவர்கள். நாம் அழைக்கப்பட்டது அனுப்பப்படவே.  அனுப்பப்படும் போது நாம் துணிவோடும் ஞானத்தோடும் தூயஉள்ளத்தோடும் சென்றிட இறையருள் வேண்டுவோம். 

இறைவேண்டல்

நற்செய்தியின் நாயகனே! உமது நற்செய்தியை அறிவிக்கவே நாங்கள் உலகிற்கு  அனுப்பப்பட்டுள்ளோம் என உணர்ந்து துணிச்சலுடனும் ஞானத்துடனும் தூய உள்ளத்துடனும் பணிபுரிய வரமருளும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

7 + 4 =